அரசியல்

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு : மீண்டும் அமைச்சராகும் பொன்முடி- பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு!

உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு : மீண்டும் அமைச்சராகும் பொன்முடி- பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து பொன்முடி சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார். இதைத் தொடர்ந்து அமைச்சராக க.பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களால் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

உச்சநீதிமன்றம் வைத்த குட்டு : மீண்டும் அமைச்சராகும் பொன்முடி- பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு!

ஆனால் ஆளுநர் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவியேற்பு செய்ய முடியாது என ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, "ஆளுநருக்கு முடிவெடுக்க அதிகாரம் இல்லை, அவருக்கு ஆலோசனை சொல்லும் பொறுப்புதான் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடக்கிறார். அமைச்சராக பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும்" என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி பிராமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.24 மணி நேரத்துக்குள் பதவியேற்பது குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கெடு விதித்திருந்த நிலையில், ஆளுநர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories