காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது.
இந்த ஒற்றுமை பயணத்தின்போது ராகுல் காந்தி வெள்ளை நிற டிசர்ட்டு அணிந்து கொண்டிருந்தார். மேலும் தாடியை ஷேவ் செய்யாமல் நடைபயணத்தை மேற்கொண்டார். பின்னர் நடைபயணம் முடிந்து நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் ராகுல் காந்தி தாடியை ஷேவ் செய்யாமலேயே பங்கேற்றார்.
இந்நிலையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி தனது தாடியை டிரிம் செய்து, கோட் சூட் அணிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய ஒற்றுமை பயணத்திற்குப் பிறகு ராகுல் காந்தியின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலானது. மேலும் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேச இருக்கிறார்.
இதற்கிடையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசும் புகைப்படத்தையும், ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முன்பு பேசிய மோடியின் படத்தையும் இணைத்து எலிசபத் என்பவர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ராகுல் காந்தி - செயின்ட் ஸ்டீபன் கல்லூரி + ஹார்வர்ட் பல்கலைக்கழகம் + ரோலின்ஸ் கல்லூரி + டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் என அவரின் கல்வித் தகுதியைப் பட்டியலிட்டுள்ளார்.
அதேபோன்று நரேந்திர மோடி - ஆர்.எஸ்.எஸ் + வாட்ஸ்அப் பல்கலைக்கழகம் (வெறுப்பு, மதவெறி மற்றும் மத தீவிரவாதத்தில் பட்டம் பெற்றவர்) என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் இப்படத்திற்கு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி என்ன என்பது தற்போது வரை சர்ச்சையாகத்தான் உள்ளது. அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டம் படித்து முடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆதாரம் கேட்டால் பல்கலைக்கழக நிர்வாகம் முதல் பலரும் மறுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.