கே.ஜி.எப். 2 படத்தின் பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக, கர்நாடக காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்கிறார். குமரியில் தொடங்கிய இந்த யாத்திரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.
குமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தை செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் தொடங்கினார். அங்கு 18 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.
கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கையும் கர்நாடகாவில் இருந்தபடியே செலுத்தினார்.
இதனிடையே பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் மக்கள் அளித்த வரவேற்பால் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த ஆரவாரத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் நிகழ்வுடன் KGF 2 பட பாடலும் சேர்ந்து 'காங்கிரஸ்' ட்விட்டர் பக்கத்தில் ஒளிபரப்ப பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் இது குறித்து சம்மந்தப்பட்ட இசை நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
மேலும் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. அதில் முறைப்படி தங்களிடம் அனுமதி பெறாமல் KGF அந்த பாடலை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதனை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் 'கர்நாடக காங்கிரஸ்' ட்விட்டர் பக்கத்தை வரும் நவம்பர் 21-ம் தேதி வரை முடக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தரப்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் "INC (Indian National congress) & BJY (Bharat jodaa Yatra) SM -க்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தின் பாதகமான உத்தரவைப் பற்றி சமூக ஊடகங்களில் படித்தோம்.
நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது ஆஜராகவோ இல்லை. உத்தரவு நகல் கிடைக்கவில்லை. எங்களிடம் உள்ள அனைத்து சட்டப்பூர்வ தீர்வுகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்து ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' மகாராஷ்டிராவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.