குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் விதமாக அனைத்து மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு அதுபோன்ற அணிவகுப்பில் கொரோனா காரணம் காட்டி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி , வேலு நாச்சியார், பாரதியார் போன்ற தலைவர்களின் நினைவுகளைப் போற்றும் விதமாக தமிழக அரசின் சார்பில் ஊர்தி தயாரிக்கப்பட்டு அந்த ஊர்தி குடியரசு தினவிழாவில் அணிவகுப்பாக கொண்டுவரப்படும் என்ற நிலையில் அதற்கு ஒன்றிய அரசு மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாரதியார், சிதம்பரனார், வேலுநாச்சியார முதலியோரை வெளிநாட்டவர்கள் யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு காரணத்தைக் கூறி அதனை மறுத்துள்ளது வெட்கத்துக்குரியது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் மனங்களைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது .
எனவே ஒன்றிய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக அலங்கார ஊர்தியையும் அணிவகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும், அதற்கான உத்தரவை வெளியிட வேண்டுமெனவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் அறிக்கையில்,
”இதுவரை நான்கு சுற்று ஒத்திகைகள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதியில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இச்செயல் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை மட்டும் அனுமதித்துவிட்டு, இதர அனைத்து மாநில ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது முறையற்றது. கண்டனத்திற்குரியது. எனவே, ஒன்றிய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமல் மாநில பெருமைகளை பறைசாற்றும் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்டு அனைத்து மாநில ஊர்திகளும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.