அரசியல்

அப்போ வேலை செய்யாம இப்போ வந்து நீலிக் கண்ணீர் வடிப்பதா? - பழனிசாமியை கடுமையாக சாடிய அமைச்சர் எ.வ.வேலு!

ஒப்பந்த காலத்திற்குள் மேம்பால பணிகளை நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் ? என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போ வேலை செய்யாம இப்போ வந்து நீலிக் கண்ணீர் வடிப்பதா? - பழனிசாமியை கடுமையாக சாடிய அமைச்சர் எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் அரசால் முடிக்கப்பட்ட பாலப்பணிகள் மற்றும் கோயம்பேட்டில் உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கோயம்பேடு உயர்மட்ட சாலை மேம்பால பணிகள் 93.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015 ல் துவக்கப்பட்டது. ஆனால் இப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்து, 2018 ஆம் ஆண்டுகள் பாலப் பணிகள் முடிந்திருக்க வேண்டும், ஆனால் கடந்த ஆட்சியில் பணிகள் உரிய முறையில் நடைபெறவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, அமைச்சர் என்ற முறையில் இரண்டு முறை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் அரசுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்று, கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் , ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன் தான் அகற்றியதாகவும், இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீணாக கடத்தியது உங்கள் அரசு தான் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். எனவே இறுதி கட்டப்பணிகளை வரும் 31 ம் தேதிக்குள் முடித்து கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே போல வேளச்சேரி புறவழிச்சாலையில் 2012 ஆம் ஆண்டு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டும், மூன்று ஆண்டுகள் கால தாமதத்திற்கு பின்னர் 2015 இறுதியில் தான் ஒப்பந்தகாரர் பணியினை துவக்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்கு போடப்பட்ட ஒப்பந்தப்படி 2018 முடித்திருக்க வேண்டும். ஆனால் பணியினை முடிக்க வேண்டிய காலம் முடிந்தும் 23 மாதங்கள் கும்பகர்ணனை போல உறக்க நிலையில் இருந்தது கடந்த அரசு தான் என்றும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார். எனவே, வேளச்சேரி மேம்பாலப்பணியின் இரண்டாம் அடுக்கு இம்மாத இறுதிக்குள்ளும், முதல் அடுக்கு பாலப் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள்ளும் முடிப்பதற்கு அதிகாரிகளுக்கும் , ஒப்பந்தக்காரருக்கும் அறிவுரை வழங்கி இருப்பதாக அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு 133 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மேடவாக்கம் மேம்பாலப்பணியும், ஒப்பந்தக்காரர் பணியினை செயல்படுத்துவதில் மெத்தனம் போன்ற காரணங்களால் பணிகள் நடைபெறவில்லை என்றும், 2020 க்குள் பணியினை முடித்திருக்க வேண்டிய நிலையில், முடிக்காமல் 8 மாத காலம் ஆட்சியில் இருந்தது நீங்கள் தான் ? என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

எனவே மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியினை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கும்படி ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கி இருப்பதாகவும், ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசு தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். இப்படி இருந்தவிட்டு இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்ததிட சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாலப்பணிகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories