அரசியல்

“எதிரிகளை ‘சம்ஹாரம்’ செய்யும் ‘வேலை’க் கையிலெடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்” - தினமலருக்கு முரசொலி பதிலடி!

தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, அது எந்த மதத்துக்கும் விரோதியல்ல ; மதவெறிக்கு அது எதிரி. கழகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கின்றனர், இல்லாதவர்களும் இருக்கின்றனர்!

“எதிரிகளை ‘சம்ஹாரம்’ செய்யும் ‘வேலை’க் கையிலெடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்” - தினமலருக்கு முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருத்தணி மேடையில் கழகத் தலைவர் தளபதியிடம் தரப்பட்ட ‘வேல்’இன்று பேசும் பொருளாகிவிட்டது! வேலோடு முருகன் திடீரெனத் தோன்றி தரிசனம் தந்திருந்தால் கூட இவ்வளவு பெரிய படத்தோடு முதல் பக்கச்செய்தியாக ‘தினமலர்’ வெளியிட்டிருக்குமா? - என எண்ணிடும் வகையில், கழகத் தலைவர் வேலோடு காட்சி தரும் படத்தை பெரிய அளவில்போட்டு, முருகனை தரிசிக்கும் அவரது பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு முழக்கமிடும் ‘அரோகரா’ எனும் கோஷத்தை, அதாவது, ‘துன்பங்களை நீக்கி நற்கதியை அருள்க!’ எனும் பொருள் பொதிந்த வாசகத்தை தலைப்பாக வெளியிட்டிருந்தது!

நமது தமிழக பா.ஜ.க.காரர்களும் அதனைப் பார்த்து அப்படித்தான் நினைத்திருப்பார்கள் எனக் கருதுகிறோம்! ‘அரோகரா' எனத் ‘தினமலர்' கிண்டலடித்துப் போட்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருந்தால், நமது பாஜகவினர் கொதித்துப்போய், ‘எப்படி முருகன் புகழ்பாடும் சொல்லை கிண்டல் செய்து போடலாம், இதனைச் சும்மா விடமாட்டோம்'- என கருப்பர் கூட்டத்துக்கு எதிராக ‘வேல் யாத்திரை' புறப்பட்டது போல, தினமலரை எதிர்த்து நாடு குலுங்கும் (குலுங்கிச் சிரிக்கும்) மற்றொரு யாத்திரைக்குப் புறப்பட்டிருக்க மாட்டார்களா? கழகத் தலைவர் கையில் வேலைக்கண்டதும்,“வேல் ஏந்தி பகுத்தறிவுக்கு முழுக்கு”, “ஸ்டாலின் கபட நாடகமாடுகிறார்”, “தேர்தலுக்கு வேடம் கட்டுகிறார்” - என்றெல்லாம் ஒரு கூட்டம் கத்த - இதனைப்பெரிய விவாதப்பொருளாக சில ஊடகங்கள், காலை முதல் மாலை வரை விவாதித்து மகிழ்கின்றன.

“எதிரிகளை ‘சம்ஹாரம்’ செய்யும் ‘வேலை’க் கையிலெடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்” - தினமலருக்கு முரசொலி பதிலடி!

தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, அது எந்த மதத்துக்கும் விரோதியல்ல ; மதவெறிக்கு அது எதிரி. கழகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கின்றனர், இல்லாதவர்களும் இருக்கின்றனர்! தந்தை பெரியார் இறை நம்பிக்கை இல்லாதவர்! தீவிர நாத்திகரான அவரே, குன்றக்குடி மடம் சென்றபோது, அடிகளார் விபூதி தர, அதனைப் பெற்றுக் கொண்டார் என்பதை நாடறியும்! நாத்திகத்தில் இறுதிவரை உறுதியாக இருந்த கலைஞரே, மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இறங்கி, அதனைத் தூர்வாரும் நிகழ்ச்சியைத் துவக்கியதும், முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவின் கட்டளை ஏற்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர், கும்பகோணம் சென்று மகாமகத்திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற எல்லா ஏற்பாடுகளையும், தானே முன்னின்று நடத்தி, அப்போதைய குடந்தை சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் - பிராமண குலத்தைச்சேர்ந்த காசிராமன், அதனைப் பாராட்டிப் பெருமிதம் கொண்டதும், பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட சம்பவங்கள்.

ஓடாது பல வருடங்களாக நிறுத்தப்பட்டுக் கிடந்த திருவாரூர் தேரை, மீண்டும் ஓட வைத்தது கலைஞர் ஆட்சிதான் என்பதை பல நேரங்களில் எடுத்துக்காட்டியிருக்கிறோம்! உண்மை நிலை இப்படி இருக்க, ஒரு ஊடக விவாதத்தில் கலந்துகொண்ட ‘துக்ளக்’ ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், திரும்பத்திரும்ப, தி.மு.கழக அமைச்சர் ஒருவர், தீ மிதிப்பு ஒன்றில் கலந்து கொண்டதை, அன்றைய முதல்வர் கலைஞர் காட்டு மிராண்டித்தனம் எனக் கூறியதாகக் குறிப்பிட்டார். அந்த நபர் ‘துக்ளக்’ பத்திரிக்கையையே படிப்பதில்லை போலும்; அவர் ஊடக விவாதத்தில் திரும்பத் திரும்ப எழுப்பிய அதே கேள்வியை, மறைந்த ‘துக்ளக்’ ஆசிரியர் சோ, கலைஞரிடம் எடுத்த ஒரு பேட்டியில் கேட்டார். அந்தக் கேள்வியும், அதற்கு கலைஞர் தந்த பதிலும், 1998 ஏப்ரல் திங்களில் வந்த ‘துக்ளக்’ இதழில் பிரசுரமாகியும் உள்ளது.

சோ கேள்வி: தீ மிதிப்பது காட்டு மிராண்டித்தனம் என்று எதற்காக வர்ணித்தீர்கள்? கலைஞர் பதில்: தீ மிதிப்பது காட்டு மிராண்டித்தனம் என்று நான் சொல்லவில்லை. அது எத்தனையோ ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற பழக்கம். அப்படிப்பட்ட நெடுங்கால வழக்கத்தை, நான் திடீரென்று காட்டு மிராண்டித்தனம் என்று வருணிக்க வேண்டிய அவசியமே இல்லை என்னுடைய அமைச்சர் ஒருவர் அங்குபோய் தீ மிதித்து விட்டு, ‘கலைஞர் ஆட்சி நீடிப்பதற்காக நான் இதைச்செய்தேன்’என்று கூறினார். அதைத்தான் நான் காட்டு மிராண்டித்தனம் என்று சொன்னேன். என்னுடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு அமைச்சர் இப்படிச் செய்ததைக் கண்டித்து தான், நான் அவ்வாறு பேசினேன்.

தீ மிதிப்பது மட்டுமல்ல; எத்தனையோ தேர்த் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் போயிருக்கிறார்கள். மன்னை (நாராயணசாமி) அமைச்சராக இருந்தபோது, திருவாரூர் தேர்த்திருவிழாவுக்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். கட்டாயமாகப் போய்வாருங்கள் என்று கூறினேன். இவ்வாறு கலைஞர் பதில் கூற, சோ அடுத்த கேள்வியாக,“அமைச்சர் என்ற முறையில், அழைக்கப்பட்டு அவர்கள் கோயில்களுக்கும், திருவிழாக்களுக்கும் சென்றால், நீங்கள் அதை ஏற்கிறீர்கள்; சரி ! சாதாரண முறையில் பக்தி பூர்வமாக அவர்கள் சென்றிருந்தால், நீங்கள் ஆட்சேபித்திருப்பீர்களா?” - எனக்கேட்கிறார்.

கலைஞர் பதில்: அமைச்சர் என்ற முறையிலோ, எந்த வகையிலோ சென்று, அவர்கள் சாமி கும்பிட்டு வந்தால், எனக்கு ஆட்சேபணை இருக்கப் போவதில்லை. இவரும் தீ மிதித்தது பற்றி எனக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை. ஆனால், கருணாநிதி ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்தேன் என்று அவர் கூறியதுதான் என்னுடைய கண்டனத்திற்குரியதாயிற்று....

உண்மை இவ்வாறிருக்க, ‘துக்ளக்’ ஏட்டைச்சேர்ந்த ரமேஷ், ஊடக விவாத மேடைகளில் அமர்ந்துகொண்டு திரும்பத் திரும்ப, “தீ மிதித்த அமைச்சரை கலைஞர் காட்டுமிராண்டி என்று கூறினார்” என்று கூறுகிறார். இதிலிருந்து, அவர் பணிபுரியும் ‘துக்ளக்’ஏட்டை அவரே சீண்டியதில்லையோ என்ற ஐயமே ஏற்படுகிறது. கழகத் தலைவர் தளபதி, ‘வேலை’ வாங்கியது என்ன, அத்தனை பெரிய கொள்கை விரோதச் செயலா? வேல், வீரர்களின் படைக்கலன்தானே! முருகன் மட்டுமா வேலேந்தியிருந்தார்?‘வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே’ என கவிஞர் கண்ணதாசன்எ ழுதினாரே!

கலைஞரின் புறநானூற்றுக் கவிதை நடைச்சொல்லோவியத்தில், போர் வீரனின் குடிசையை வருணிக்கும்போது, “குடிசைதான்... ஓ ர்புறத்தில், கூரிய வேல் வாள் வரிசையாய் வீற்றிருக்க”- எனக் குறிப்பிட்டுள்ளாரே; “கை வேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்”-எனும் குறள், வீரன் கை ஆயுதமாக, வேலை பாவித்து எழுதப்பட்டதுதானே! இப்படி முருகன் கையில் மட்டுமின்றி, மன்னர்கள் கையில், வீரர்கள் கையிலிருந்து எதிரிகளை ‘சம்ஹாரம்’ செய்யும் ‘வேலை’க் கையிலெடுத்த கழகத் தலைவர் தளபதி, வீணர்கள் ஆட்சியை அழித்து வெற்றி முகட்டை எட்டிவிட்டார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே, திருத்தணி கூட்ட நிகழ்வு சரித்திர நிகழ்வாக மாறிவிட்டது! மாற்றிய கூட்டத்துக்கு நன்றி சொல்வோம்! ஆவேசத்தை அள்ளிவரும் வேல்! ஆணவத்தை அகற்ற துள்ளி வரும் வேல்! பகை முடிக்கப் பறந்துவரும் வேல்! வீரவேல்... வெற்றிவேல்

banner

Related Stories

Related Stories