அரசியல்

“திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வது கீழ்த்தரமானது” - T.R.பாலு கண்டனம்!

ஒழுங்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால், தனது துரோகத்தை மறைக்க, தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஆதரவைத் தேடியிருக்க மாட்டார் என டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.

“திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வது கீழ்த்தரமானது” - T.R.பாலு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"முதலமைச்சர் பழனிசாமி தலைகீழாக நின்று முயற்சித்தாலும் - தினமலர் “காவிக் கச்சை” கட்டிக் கொண்டு துணை போனாலும் - பா.ஜ.க. - அ.தி.மு.க. இணைந்து செய்யும் துரோகத்தை விவசாயிகள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்" என தி.மு.கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள். தி.மு.க.வின் 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவைதான்” என்று, தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதையே படித்துப் பார்க்காமலும், படித்தாலும் புரிந்து கொள்ளாமலும், பகிரங்கமாகவே அபாண்டமாகப் பொய் பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் புளுகு மூட்டையைப் பார்த்து, மனம் குளிர்ந்து - “ஆகா, இப்படி அண்டப் புளுகு பேசும் ஓர் அடிமை எப்படி பா.ஜ.க.விற்குக் கிடைத்தார்” என்று பரவசப்பட்டிருக்கும் “தினமலர்” நாளேடு, நேற்றைக்கு “பதவி வெறி படுத்தும் பாடு” என்று ஒரு கட்டுரை வெளியிட்டு தனது அரிப்பைச் சொறிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலிருந்து, “வெட்டியும்” “ஒட்டியும்” பிரசுரித்து, ஒரு முதல் பக்கக் கட்டுரையைத் தீட்டி பா.ஜ.க. வின் அதிகாரபூர்வமான நாளிதழ் என்ற தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சரும் தி.மு.க. தேர்தல் அறிக்கையைச் சரியாகப் படிக்கவில்லை; தினமலர் பத்திரிக்கையும் அதைப் புரட்டிப் பார்க்க நினைக்கவில்லை. தி.மு.க.விற்கு விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைப் பார்த்து, இருவருக்கும் ஏற்பட்ட ஆதங்கம் கண்ணை மறைத்திருக்கிறது!

“திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வது கீழ்த்தரமானது” - T.R.பாலு கண்டனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கையில் “வேளாண்மை” என்ற தலைப்பில் மட்டும் அளித்த 54 தேர்தல் வாக்குறுதிகளில், மிக முக்கியமான “வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை”, “நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்” என்ற வாக்குறுதிகள் எல்லாம் முதலமைச்சரின் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏன், "சிறு - குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்” என்ற மிக முக்கியமான வாக்குறுதியை - உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் உச்ச நீதிமன்றம் வரை சென்று விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்ற பழனிசாமி படித்துக் கூடப் பார்க்கவில்லை.

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய பா.ஜ.க. அரசின் மின் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் பழனிசாமி, “தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்” என்ற தி.மு.க. வாக்குறுதியைப் பார்க்கவில்லை. கழக அரசு உருவாக்கிய உழவர் சந்தைகளை முடக்கி - விவசாயிகளுக்கு நேரடியாக விலை கிடைப்பதை நாசம் செய்தது அ.தி.மு.க. அரசு. அதனால், “உழவர் சந்தைகள் உயிரூட்டப்பட்டு மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என்றும், “நடமாடும் சந்தைகள் அமைக்கப்படும்” என்றும், தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் அவருக்கு விளங்கவேயில்லை!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் “வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும்” என்று அறிவித்த வாக்குறுதி கார்ப்பரேட்டுகளும் - விவசாயிகளும் “ஒப்பந்த விவசாயம்” செய்து கொள்வதற்காக அல்ல! அந்த அடிப்படை கூடத் தெரியாமல் ஒரு முதலமைச்சர் பேசியிருப்பது – யாரோ சிலரின் “எடுப்பார் கைப்பிள்ளையாக” எப்படி எடப்பாடி பழனிச்சாமி மாறி விட்டார் என்பதைக் காட்டுகிறது.

ஒழுங்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால், தனது துரோகத்தை மறைக்க, தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஆதரவைத் தேடியிருக்க மாட்டார். ஏனென்றால் அவர் ஆதரிக்கும் “ஒப்பந்த விவசாயம்” பற்றிய வார்த்தையே தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள வேளாண் விளை பொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மேலும் வலுப்படுத்துவதற்கே புதிய கொள்கை வகுக்கப்படும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது.

“திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வது கீழ்த்தரமானது” - T.R.பாலு கண்டனம்!

“இந்தக் கொள்கையைக் கால மாறுதலுக்கு ஏற்ப மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் ஏற்ற வகையில் வேளாண் விளை பொருள் விற்பனை (ஒழுங்குமுறைச்) சட்டம் கொண்டு வரப்படும்” என்று, மிகத் தெளிவாக எவருக்கும் எளிதில் புரியக் கூடிய வகையில் கூறியிருக்கிறோம். அது வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், உழவர் சந்தைகள் மற்றும் நடமாடும் சந்தைகளையும் உருவாக்கி - விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமல்ல - அதற்கும் மேலும் அதிக விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் வாக்குறுதி!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைத் தேடிப் பிடித்து - ஒரு பித்தலாட்ட பேட்டியை முதலமைச்சர் பழனிசாமி கொடுத்திருக்கிறார். தினமலர் பத்திரிகையும் வரிந்துகட்டிக்கொண்டு கட்டுரை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்படும், இலவச மின்சாரம் தொடரும், உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும், நடமாடும் சந்தைகள் அமைக்கப்படும் என்ற 2016-ல் அளித்த தி.மு.க.வின் அந்த வாக்குறுதிகள் - இன்று கூட பழனிசாமியைப் பயமுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேளாண் சட்டங்களை ஆதரித்த துரோகத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையைக் காட்டியாவது தப்பித்துக் கொள்ளலாமா என்ற தவியாய்த் தவிக்கிறார்.

விவசாயிகளுக்கு அடுக்கடுக்காகச் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேட - விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு, தான் வாக்களித்ததை மறைக்க, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றை முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்வது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; கீழ்த்தரமான அருவருக்கத்தக்க பிரச்சாரம்! என்னதான் முதலமைச்சர் தலைகீழாக நின்று முயற்சித்தாலும் - தினமலர் “காவிக் கச்சை” கட்டிக் கொண்டு துணை போனாலும் - பா.ஜ.க. - அ.தி.மு.க. இணைந்து செய்யும் துரோகத்தை விவசாயிகள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

அ.தி.மு.க. ஆதரித்த மூன்று வேளாண் சட்டங்களிலும் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்படுத்தும் “ஒப்பந்த விவசாயம்” (Contract farming) திணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையும் (MSP) மறுக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய பா.ஜ.க. அரசும் - அ.தி.மு.க. அரசும் துடிக்கிறது. இந்த மாதிரி விவசாய விரோத செயல்பாடுகள், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கனவிலும் எதிர்பார்க்க முடியாதவை. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, விவசாயிகளுக்கு ஆதரவாக - கடன் தள்ளுபடிக்கு ஆதரவாக - குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஆதரவாக வாக்குறுதிகளை வழங்கிய ஒரே தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பதை முதலமைச்சர் பழனிசாமிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது ஊழல் முறைகேடுகள் குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவற்றின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்து - இன்றைக்குத் தமிழகம் மட்டுமின்றி நாடே கொந்தளித்துப் போராட அடிப்படைக் காரணமாக இருந்து விட்டு - இப்போதும் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நீட்டி முழக்கிப் பேசி வரும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே பழனிசாமி ஒருவர்தான்!

அதற்குத் தக்க தண்டனையை, தேர்தல் நேரத்தில் தங்களின் வாக்குரிமையின் மூலம் தமிழக விவசாயிகள் நிச்சயம் கொடுப்பார்கள்; அதிலிருந்து அ.தி.மு.க. தப்ப முடியாது. இச்சட்டங்களைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும் விவசாயப் பெருமக்கள் மறந்துவிட மாட்டார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories