அரசியல்

ராமர் படத்தை அவமதித்தாரா பெரியார்? உண்மை என்ன? - இந்து அமைப்பினரின் கட்டுக் கதைகளை உடைக்கும் சுப.வீ

ராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

ராமர் படத்தை அவமதித்தாரா பெரியார்? உண்மை என்ன? - இந்து அமைப்பினரின் கட்டுக் கதைகளை உடைக்கும் சுப.வீ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில், நடந்த உண்மை பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்ட கட்டுரையின் மீள் பதிவு இது.

அவரது கட்டுரையில் கூறியிருப்பதாவது "இராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, அது அவர்களின் உள்மன விருப்பமாக இருக்கலாம்.

நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

1971ஆம் ஆண்டு தொடக்கத்தில், திராவிடர் கழகம் சார்பில், சேலத்தில் ஒரு பெரிய மாநாடும், பேரணியும் நடைபெற்றன. அந்தப் பேரணியில் பெரியார் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த இன்னொரு ஊர்தியில், ‘இதுதான் இந்துக் கடவுளர்களின் கதை’ என்பதை விளக்கும் சித்திரங்களைக் கொண்ட வெட்டுருக்கள் வந்து கொண்டிருந்தன.

பேரணி வந்த பாதையில், ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்த சிலர், அய்யாவிற்குக் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அன்று ஆட்சியிலிருந்த, கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதான், ஜனநாயக அடிப்படையில் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது. வன்முறை ஏதுமின்றி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதித்திருந்தது. காவிக் கொடி களைக் கீழே போட்டுவிட்டு, நம் கொடியான கறுப்புக் கொடியை ஏந்தி நின்ற ஜனசங்கத்தினரைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அக்கூட்டத்திலிருந்து ஒருவன், அய்யா பெரியாரை நோக்கித் தன் செருப்பை வீசினான். அது குறி தவறி, பின்னால் வந்த, கடவுளர்கள் படம் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் போய் விழுந்துவிட்டது. அந்த வாகனத்தில் இருந்த தொண்டர்கள், அவர்கள் வீசிய செருப்பை எடுத்து, அவர்கள் கடவுளையே அடித்தார்கள். முன்னால் சென்று விட்ட பெரியாருக்கு, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது.

வன்முறையைத் தொடங்கியவர்கள் யார் என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம். பிறகு அவர்களே நம்மீது வழக்கும் போட்டார்கள். அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் ஹெச். ராஜாக்கள் இன்னும் அதனைத் தள்ளுபடி செய்யாமல், இராமர் செருப்பால் அடிபட்ட கதையைத் திரும்பத் திரும்ப அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர்.

அந்த மாநாட்டையொட்டி இன்னொரு வழக்கும் நடைபெற்றது. அது ‘இந்து’ ஏட்டின் மீது திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு. மாநாட்டுத் தீர்மானம் ஒன்றைத் திரித்து வெளியிட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்றைய தி.க. தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்களே நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நாளேடு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், வழக்கு கைவிடப்பட்டது.

அப்போதே செய்தியைத் திரித்து ‘துக்ளக்’ ஒரு கேலிப்படம் வெளியிட முயன்றது. இராமர் படத்தைக் கலைஞர் செருப்பால் அடிப்பது போலவும், அருகில் நின்று பெரியார் கைகொட்டிச் சிரிப்பது போலவும் கேலிப்படம். ஆளாளுக்குச் செருப்பால் அடிப்பதைப் போல் அவர்களே கற்பனை செய்து கொண்டார்கள் போலும்!

இந்நிகழ்ச்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே, பொதுத் தேர்தல் நடைபெற்றது. சேலம் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம், தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று ஏடுகள் பல எழுதின. அவ்வளவுதான், தி.மு.க. ஆட்சி என்று ஆரவாரக் குரல்கள் எழுந்தன.

எதிர் அணியில் கைகோத்து நின்ற காமராசர், ராஜாஜி அணியின் வெற்றியை இனி எவரும் தடுக்க முடியாது என்று பலரும் கருதினர். ‘இந்துக் கடவுளைச் செருப்பால் அடித்த கட்சிக்கா, உங்களின் ஓட்டு?’ என்று ஊர் ஊராகக் கேட்டனர். நிகழ்ச்சி நடந்தது என்னவோ, சேலத்தில் மட்டும்தான். ஆனால காங்கிரசாரும், சுதந்திராக் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். ‘இவ்வளவு செய்தும், கடவுள் அவர்களை ஒன்றுமே செய்யவில்லையே, கடவுள் என்று எவரும் இல்லை என்று பெரியார் சொல்வதுதான் உண்மையோ’ என்று பக்தர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ மூவரும் ஓர் அணியாகப் பயணப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து, தி.மு.க.விற்கு எதிராகத் தேர்தல் பரப்புரை செய்தனர். தமிழக நிலைமைகளைக் கவனித்த, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, வெளிப்படையாகக் காமராஜரைச் சந்தித்து, ‘அடுத்த முதல்வர் நீங்கள்தான்’ என்று கூறிப் பூங்கொத்தைக் கொடுத்தார்.

இத்தனை கூத்துகளுக்கும் சேலம் நிகழ்ச்சிதான் காரணமாக இருந்தது. ஆனால் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவோ, வேறு மாதிரியாக இருந்தது.

1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்றது. பெரிய வேடிக்கை என்னவென்றால், எந்த சேலத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, அந்த சேலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.கழகம்தான் வென்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், இப்போதும் சிலருக்கு நினைவிருக்கலாம். ஒருவர் ராஜாராம், இன்னொருவர் ஜெயராம். ஆமாம், அந்த இராமர் சிக்கல் மக்களிடையே எடுபடாமல் தோற்றுப் போய், இந்த இராமர்கள் இருவரும் வெற்றிபெற்றனர்.

ராஜாஜி மனம் நொந்து, ஒரு வார ஏட்டில், “தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற நாடாகிவிட்டது. மகா புருஷர்கள் எல்லோரும் நாட்டைவிட்டே புறப்படத் தயாராகிவிட்டனர்” என்று எழுதினார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய நாவலர், தனக்கேயுரிய குறும்புடன், “மகா புருஷர்கள் எல்லாரும், சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விடாதீர்கள். தேதியைக் குறிப்பிட்டால், நாங்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருக்கின்ற ‘மகாபுருஷர்களில்’ ஒருவரான ஹெச்.ராஜா போன்றவர்கள், சாதாரணப் புருஷர்களைப் போலவேனும் பேசப் பழக வேண்டும்.”

இவ்வாறு உண்மையை திரித்து, கலவரத்தை உண்டாக்கி அரசியல் செய்யும் இந்து அமைப்பினரின் முகத் திரையை கிழித்தெரியும் வகையில் அமைந்திருக்கிறது பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் கட்டுரை.

banner

Related Stories

Related Stories