அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டம் : கைவிட சொல்லி மிரட்டிய வைகோ - மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சபாநாயகர் 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்; இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரித்துள்ளார் வைகோ.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : கைவிட சொல்லி மிரட்டிய வைகோ - மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சபாநாயகர் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவியேற்றார். இன்று (26.7.2019) மாநிலங்களவை கூடியதும் பூஜ்ய நேரத்தில் வைகோ அவர்களைப் பேச அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அழைத்தார்.

அப்போது பேசிய வைகோ, ''தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய பெருங்கேடான மீத்தேன், ஷெல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை நடுவண் அரசு செயல்படுத்த முனைகின்றது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப் போகிறார்கள். ஏற்கனவே தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் வேதாந்தா நிறுவனம், காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கி இருக்கின்றார்கள்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஜூலை 17ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : கைவிட சொல்லி மிரட்டிய வைகோ - மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சபாநாயகர் 

இந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்காக அவர்கள் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்திற்குள் உட்செலுத்தப் போகிறார்கள். அதுமட்டுமன்றி, அத்துடன் 636 நச்சு வேதிப் பொருட்களையும் கலந்து நிலத்திற்குள் செலுத்தப் போகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்து விடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று, கடந்த 17 ம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அழிவுத் திட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள், சாதி மத கட்சி எல்லைகளைக் கடந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : கைவிட சொல்லி மிரட்டிய வைகோ - மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சபாநாயகர் 

கடந்த ஜூன் 23ம் நாள் லட்சக்கணக்கான மக்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவிற்கு, கைகளை ஒன்றாகப் பிணைத்து மனிதச்சங்கிலி உருவாக்கி, அறப்போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.

கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லிக்கு வந்து ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக உத்தர பிரதேசத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்றார்கள்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும்.

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும். எனவே இந்தக் கேடான அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன்'' எனத் தெரிவித்தார்.

அப்போது அவைத் தலைவர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, உங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்கள், கோரிக்கை விடுங்கள்; அரசுக்கு எச்சரிக்கை செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories