விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, வந்ததற்கு பின்பு ஒரு பேச்சு என்று தவெக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்களுக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை சம்பவங்களும் தின்தோறும் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம் ஒழுங்கை பற்றி அரசை குற்றம்சாட்டி வந்த விஜய், தனது ஆட்சிக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக தாங்கள் ஆட்சியில் இருப்பதை கூட மறந்து திமுக மீது தொடர்ந்து அபாண்ட பழியை சுமத்தி வருகிறது தவெக. சீர்கெட்டு இருக்கும் சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், தனது கட்சிக்கு குதிரை பேரம் நடத்துவதிலேயே முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து கூட அதனை கண்டுகொள்ளாமல் விஜய் இருப்பதால் தொடர்ந்து தமிழ்நாட்டில் உயிர் பலிகள் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 50 நாட்கள் தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் சம்பவம் ஒரு புறம் இருக்க, 5 ஆணவப்படுகொலைகள் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இதனை குறிப்பிட்டு திமுக IT Wing கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து திமுக IT Wing வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :-
மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன!
ஆனால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய 'சோஃபா மாடல்' அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் "பேசாமல் சாதிக்கிறேன்" என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!
தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி சினிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு "அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..." என்று எப்போதோ புளித்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது... இதுதான் மாற்று அரசியலா?

நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? "அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் - சுயமரியாதையும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.
சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் 'இன்ஸ்டா அரசன்' விஜய் அவர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று? அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?
எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது! இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!






