அரசியல்

பட்ஜெட்டில் ஏகப்பட்ட பொய்கள்..புள்ளி விபரத்தில் தவறுகள்: பா.ஜ.கவை வறுத்தெடுக்கும் சு.சாமி

பா.ஜ.க வெளியிட்ட பட்ஜெட்டில் உள்ள பல்வேறு புள்ளிவிபர மோசடிகள் குறித்து பா.ஜ.க மூத்ததலைவர் எம்.பி சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டில் ஏகப்பட்ட பொய்கள்..புள்ளி விபரத்தில் தவறுகள்: பா.ஜ.கவை வறுத்தெடுக்கும் சு.சாமி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள புள்ளிவிபரங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் அக்கட்சி மூத்த தலைவரும், தற்போதைய எம்.பி.,யான சுப்பிரமணிய சாமி புள்ளிவிபர மோசடி குறித்து கேள்வி எழுப்பினர்.

புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியராக இருந்தும் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கவில்லை என நீண்டகாலமாகவே தனது ஆதங்கத்தை வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் சுப்பிரமணிய சாமி வெளிப்படுத்தி வருகிறார்.

இதையடுத்து இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பா.ஜ.க, இந்த முறை சுப்பிரமணியசாமிக்கு பதவி வழங்கும் என அதிகம் எதிர்க்கப்பட்டது. அவரும் அமைச்சர் ஆக்கப்படுவோம் என்று எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. மேலும் நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளதில் மிகுந்த கடுப்பில் இருக்கும் சு.சாமி நிர்மலாவை நிச்சயம் வறுத்தெடுப்பார் என்று பலரும் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.

பட்ஜெட்டில் ஏகப்பட்ட பொய்கள்..புள்ளி விபரத்தில் தவறுகள்: பா.ஜ.கவை வறுத்தெடுக்கும் சு.சாமி

அது உண்மையாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக சு.சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “நான் எந்த மக்கள் பக்கம் இருந்து இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது? ஒரு பொருளாதாரப் பேராசிரியராக அணுகுவதா? அல்லது கட்சியின் எம்.பி.என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பின்னர், பட்ஜெட் அறிவிப்பில் இருக்கும் ஜம்பங்களையும், புள்ளிவிவர மோசடிகளையும் அடுத்த ட்விட்டில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், “பட்ஜெட் உரை, பத்தி 8ல், “இந்தியாவின் ஜி.டி.பி கணக்குப்படி உலகிலேயே 6வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது, வாங்கும் திறன் அடிப்படையிலான ஜி.டி.பி-யின் படிபார்த்தால் இந்தியா ஏற்கனவே 3வது இடத்தில் இருக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது. இதனை கையில் எடுத்த சுப்பிரமணியசாமி, “இந்த இரண்டில் ஒன்று தானே சரி. இரண்டுமே சரியாக இருக்க முடியாதே,” ஏன் இந்த ஏமாற்று வேலை என்று வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

அடுத்ததாக, “பட்ஜெட் உரையின் பத்தி 10-ல், இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலரைத் தொட எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டு வரை 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது..? மே 26, 2019-ல் தான் இந்தியப் பொருளாதாரத்தில் 1 ட்ரில்லியன் டாலர் அதிகரித்ததா..? இப்போது 3 ட்ரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்களே.. அப்படி என்றால் மே 26, 2019-இல் இருந்து வெறும் 6 வாரத்தில், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு இன்னும் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரித்து விட்டதா...?” என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி அதிர்ச்சி தந்துள்ளார். இந்த பதிவின் முடிவில் “ஹரே ராம்..!” என்று பதிவிட்டும் அரசைக் கிண்டலடித்துள்ளார்.

மேலும் கடைசியாக,“விவசாயிகளுக்கான வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு காலத்தை 2018ல் இருந்து 2022ஆக உயர்த்தி இருக்கிறார்கள். அப்படி என்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

இதன்படி ஆண்டுக்கு 18 சதவிகிதம் கூட்டு வட்டி விகிதத்தில் விவசாயிகள் வருமானம் அதிகரித்தாக வேண்டும். ஆனால், உண்மையில் ஆண்டுக்கு 2 சதவிகிதம்தான் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கிறது” என்று கூறினார், இதன் முடிவிலும் “இனிமையான கனவு”என்று தனது பாஜகவை எதிர்க்கட்சி நபரைக் காட்டிலும் கூடுதலாக தாக்கிப் பேசியுள்ளார்.

மோடி தன்னை பயன்படுத்தி கொள்ள மறுப்பதாகவும் இதனால் சீனாவுக்கு செல்ல போகிறேன் என்றும் சுப்பிரமணியசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பா.ஜ.க-வினர் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் "அவரின் சொந்த கருத்து" என்று மழுப்பிச் செல்வார்கள் என்பதே தெரிந்த விஷயம்.

banner

Related Stories

Related Stories