
அராஜகத்தின் உச்சக்கட்டத்தில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமும், போலீசாரும் செயல்பட்டு வருவதாக தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தென்னிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொள்ளும் செயல் வீரர்கள் கூட்டம் தென்னிலையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல பரமத்தி ஒன்றிய பகுதியில் நான் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி இருக்கிறது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற காரணத்தை காட்டி அனுமதிக்க மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். இதன் காரணமாக அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் செய்து கொள்ள அனுமதி கேட்டும், அதற்கும் அனுமதி மறுத்து விட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய வரும் நாளில் எந்த கட்சிகளும் பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையமும், போலீசாரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அராஜகப்போக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, எங்களது உரிமையை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியின் அராஜக செயலுக்கு துணையாக தேர்தல் ஆணையமும், காவல்துறையும் செயல்பட்டு வருகிறது .
நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும் போது சோப்பு நுரை வருகிறது என பேசியவர் அமைச்சர் கருப்பணன் அந்த அளவிற்கு அவர் விஞ்ஞானி . அவர் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்ய அதிமுகவினர் சென்ற போது மக்கள் யாரும் வரவேற்கவில்லை. இதனால் அதிமுக தோல்வி அடைந்து விடும் என்பதை தெரிந்து கொண்டு விரக்தியில் உள்ளனர்.
மோடியின் அடிமை அரசாக அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது பதவி, பணத்தை காப்பாற்றிக் கொள்ள வாரணாசி சென்று மோடிக்கு சல்யூட் அடித்தவர்கள். இவர்களை போல அடிமைகளாக ஆட்டு மந்தைகளாக நான் இருக்க வேண்டும் என எனக்கு அவசியமில்லை.
துரோகத்தை பற்றி பேச பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருக்கும் அமைச்சர்களுக்கும் அருகதையே இல்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.








