டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, புதுடெல்லி தொகுதியில் உள்ள மோதி நகரில் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் செய்தார்.திறந்த ஜீப்பில் அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்து ஒருவர் கெஜ்ரிவாலை தாக்கினார்.
அதை சிறிதும் எதிர்பாராத கெஜ்ரிவால் சிறிது நேரம் திகைத்து நின்று விட்டார். சுதாரித்துக் கொண்ட தொண்டர்கள், தாக்கிய நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இது பற்றி காவல் துறை மேற்கு துணை கமிஷனர் மோனிகா பரத்வாஜ் கூறுகையில், ‘‘கெஜ்ரிவாலை அவர் எதற்காக தாக்கினார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என விசாரிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.
ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இதுகுறித்து ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். அதில், தோல்வியின் விரக்தியில் இருக்கும் பாஜக, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி கொடூரமாகத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாக செய்யாத டெல்லி போலீஸ் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான நமது உறுதியை, வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.