முரசொலி தலையங்கம்

“இந்தியத் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி... மௌனம் சாதிப்பது ஏன்?” : முரசொலி கடும் சாடல்!

வெறுப்புப் பேச்சும் வேண்டா வெறுப்பும் என்ற தலைப்பில் முரசொலி தீட்டியுள்ள தலையங்கத்தில், விதிகளை மீறும் மோடியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறது என்று குற்றம்சாட்டி உள்ளது.

“இந்தியத் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி... மௌனம் சாதிப்பது ஏன்?” : முரசொலி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேர்தல் நேரத்தில் அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்துக்குத்தான் உண்டு. இதைக் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் செயலில்? தேர்தல் ஆணையம் கை கட்டி வாய் பொத்திக் கிடக்கிறது. ‘விஸ்வகுரு தொடர்புடையது என்றால் மவுனகுருவாக ஆகிவிடுகிறது தேர்தல் ஆணையம் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல் பரப்புரையின் போது மட்டும் அடக்கி வாசித்த பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தனது பழைய பாணியைக் கையில் எடுத்தார். ‘உங்கள் சொத்தை எடுத்து இசுலாமியருக்கு கொடுத்து விடுவார்கள், ‘இசுலாமியர் வெளிநாட்டவர், ‘அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்கள், ‘உங்கள் நகையை எடுத்து அவர்களுக்கு கொடுத்து விடுவார்கள், ‘உங்கள் தாலியை எடுத்துக் கொடுத்து விடுவார்கள், ‘உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால் அதில் ஒன்றைப் பறித்து விடுவார்கள், ‘பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை இசுலாமியருக்கு கொடுத்து விடுவார்கள், ‘காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடையும், என்பது போன்ற பீதியையும் பூச்சாண்டி வாக்கு மூலங்களையும் தினந்தோறும் உதிர்த்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த நாட்டின் சொத்தை எடுத்து தனது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டது அவர்தான். கோடிக்கணக்கான மக்களின் பணத்தை வாராக்கடன் என்ற பெயரால் ஒரு சில நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்தது அவர்தான். பொதுத்துறை நிறுவனங்களை லாபமில்லை என்று சொல்லி விற்றது அவர் தான். இவர்தான் ஒவ்வொரு இந்தியர் காதிலும் ‘தாலிப்பூ’ சூடுகிறார். இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகள் எப்போதும் கூடாது. தேர்தல் நேரத்தில் கூடவே கூடாது என்று முரசொலி குறிப்பிட்டுள்ளது.

“இந்தியத் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி... மௌனம் சாதிப்பது ஏன்?” : முரசொலி கடும் சாடல்!

சிறுபான்மை சமூகத்தின் மீதான வெறுப்புப் பேச்சுகள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் எப்போதும் அதிகம். மற்ற மாநிலங்களுக்கும் இந்த மாநிலங்களுக்குமான வேறுபாட்டை ‘இந்தியா ஹேட் லேப்’ அறிக்கை சொன்னது. ‘பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பேசப்படுபவை வன்முறையைத் தூண்டுபவையாக அதிகம் இருக்கும்’ என்கிறது அந்த அறிக்கை. ‘நமது கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது என்ற தைரியத்தில் இவை பேசப்படும்.

நாடு முழுவதும் உள்ள வெறுப்பு பேச்சு வழக்குகளை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டது. ஆனால் அமைக்கப்படவில்லை. அமைக்க மாட்டார்கள். ‘வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக யாரும் புகார் தரவில்லை என்றாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதுவும் நடக்கவில்லை. மற்ற நேரங்களில் பா.ஜ.க. அரசுகள் இதனைச் செய்யாது. ஆனால் தேர்தல் நேரத்திலாவது இதனை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டாமா என்று முரசொலி வினவியுள்ளது.

ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியதற்கு விளக்கம் கேட்டு, பா.ஜ.க. தலைவருக்கு ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பிவிட்டு தனது கடமை முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் நினைக்கலாமா? வாய் மூடிக் கிடக்கலாமா? வெறுப்பு பேச்சை தடுக்கும் நோக்கத்துடன் அந்த நோட்டீஸை அனுப்பியதாகத் தெரியவில்லை. வேண்டா வெறுப்பாக அனுப்பியதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்பதால்தான் அதன்பிறகு அதிகமாக வெறுப்புப் பேச்சுகளை உமிழத் தொடங்கி உள்ளார்.

“இந்தியத் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி... மௌனம் சாதிப்பது ஏன்?” : முரசொலி கடும் சாடல்!

தேர்தல் நடக்க இருக்கும் அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தார்கள். இந்தக் கைது நடவடிக்கை சட்டமீறல் என்பதால் அதனைக் கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் புகார் தெரிவித்தார்கள். இதை தேர்தல் ஆணையம் கேள்வியே கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர்- ---– ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைக் கைது செய்து முடக்குவது என்பது அப்பட்டமான விதிமீறல் அல்லவா? இதனை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டாமா?

தேர்தல் நேரத்தில் அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றால்.. அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும், புலனாய்வு அமைப்புகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தானே இருக்க வேண்டும்? இருந்திருக்க வேண்டும்? அதை மட்டும் உள்துறை பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் விட்டு விடுவீர்களா?

தேர்தல் ஆணையர்களே, பா.ஜ.க. அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளாக போட்டுவிட்டால் அதுதானே நடக்கும்! அதுதான் நடந்திருக்கிறது என்று முரசொலி நாளேடு குற்றம்சாட்டி உள்ளது.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சர் என்று மாற்றிக் கொண்டது பா.ஜ.க.வின் நீதித்துறை மரியாதை. அதாவது மூவரில் இரண்டு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தேர்வு செய்யும் ஆணையர்கள் எப்படி இருப்பார்கள்? இப்படித்தான் இருப்பார்கள்.

“இந்தியத் தேர்தல் ஆணையம்தான் குற்றவாளி... மௌனம் சாதிப்பது ஏன்?” : முரசொலி கடும் சாடல்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. ‘தேர்தல் பத்திரங்கள் செல்லாது’ என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் என்ன வாதிட்டார் என்றால், ‘தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது என்று வாதிட்டார். இத்தகைய அமைப்பிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

“வெறுப்பு பேச்சுகளுக்கு யாரைக் குற்றவாளியாக ஆக்குவது? அப்படி பேசுபவர்களை அல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தை தான் குற்றவாளி ஆக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதை முரசொலி நாளேடு சுட்டிக்காட்டி உள்ளது.

banner

Related Stories

Related Stories