முரசொலி தலையங்கம்

“எந்த நன்மையும் செய்யாதவர் எப்படி வருத்தப்பட முடியும்? ”- மோடி அளித்த பேட்டி குறித்து முரசொலி தாக்கு !

தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்தால்தானே, மோடி வருத்தம் அடைய முடியும். தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத மோடி எப்படி வருத்தப்பட முடியும்?

“எந்த நன்மையும் செய்யாதவர் எப்படி வருத்தப்பட முடியும்? ”- மோடி அளித்த பேட்டி குறித்து முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

‘பேட்டி என்ற பெயரால் ஷூட்டிங்’!

கடந்த வாரத்தில் ‘தந்தி டி.வி.’க்கு பேட்டி அளித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதை ஒற்றை வரியில், ‘பேட்டி என்ற பெயரால் ஷூட்டிங்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டல் அடித்திருந்தார். ‘அந்த பேட்டியைப் பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா? காமெடி டைமா? என்று கிண்டல் அடித்தார்கள்’ என்றும் முதலமைச்சர் சொல்லி இருந்தார். இதுதான் முழுக்க முழுக்க உண்மை.

தமிழ்நாட்டு ஊடகத்துக்கு பேட்டி கொடுப்பதாக இருந்தால், வேட்டி கட்டிக் கொண்டு கொடுக்க வேண்டும் என்று சிந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு ஊடகத்துக்கு பேட்டி அளிக்கும் போது சொல்வதற்கு ஒரு நன்மையையாவது நினைவூட்டிச் சொல்லி இருந்தால் பாராட்டலாம்.

பத்தாண்டு காலம் பிரதமராக இருந்துள்ளாரே... நான் கொடுத்த எந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றி இருக்கிறேன் என்று சொல்கிறாரா என பார்த்தால், அந்தப் பேட்டியில் அது எதுவுமே இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தான் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? அதுவும் இல்லை.

‘தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறார்களே?’ என்று அந்த நிருபர் கேட்கிறார். ‘எனக்கு இது பற்றி வருத்தம் எதுவும் இல்லை’ என்கிறார் மோடி. தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்தால்தானே, மோடி வருத்தம் அடைய முடியும். தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத மோடி எப்படி வருத்தப்பட முடியும்? தமிழ்நாட்டு ஊடகத்துக்கு பேட்டி அளிப்பவர் தமிழ்நாட்டுக்கு இந்த பத்தாண்டு காலத்தில் என்ன நன்மைகள் செய்தேன் என்று சொல்ல வேண்டாமா?

“எந்த நன்மையும் செய்யாதவர் எப்படி வருத்தப்பட முடியும்? ”- மோடி அளித்த பேட்டி குறித்து முரசொலி தாக்கு !

« சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவேன்.

« மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியை அதிகப்படுத்துவேன்.

« ஈரோடு மஞ்சளை ஆயுர்வேதமாகவும் அழகுசாதனப் பொருளாகவும் ஆக்குவேன்.

« ஈரோடு ஜவுளி உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவேன்.

« ஈரோட்டில் சாயக்கழிவு நிலையம் அமைப்பேன்.

« தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி தந்தார். காப்பாற்றினாரா?

« ஒரு மீனவர் கூட இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட மாட்டார் என்றார். அப்படி நடந்ததா?

« சிவகாசி பட்டாசுத் தொழிலைக் காப்பாற்றுவேன்.

« ராமேசுவரத்தை சுற்றுலாத்தளம் ஆக்குவேன்.

« கங்கை - காவிரியை இணைப்பேன் - இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்காக மோடி கொடுத்த வாக்குறுதிகள்.

மொத்தத்தில் தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றி அமைப்பேன் என்றார். அதில் எதையும் செய்யவில்லை.

இவ்வளவு பெரிய பேட்டியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஏன் பிரதமரால் சொல்ல முடியவில்லை? அது அவரது சாதனையாக இருந்தால் அதைச் சொல்லி இருக்கலாமே! மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று அந்த டி.வி. நிருபர் கேட்கிறார்.அப்போது கூட அவரால் எதுவும் சொல்ல வாய் வரவில்லை. தூத்துக்குடி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டியதைச் சொல்கிறார். தமிழ்நாட்டின் சுற்றுலாவை வளர்க்கப் போகிறாராம்.

ஏதோ ஒரு பற்றற்ற ஞானியைப் போல அவர் பேட்டி தந்துள்ளார். அது ஒரு பிரதமர் கொடுத்த பேட்டியைப் போலவே இல்லை. ‘நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை?’ என்று அந்த டிவி நிருபர் கேட்கிறார். ‘நான் எனது வாழ்க்கையில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நினைத்ததே இல்லை’ என்கிறார் மோடி. மூன்று முறை ஒரு மாநிலத்தின் முதலமைச்ச ராக இருந்து - தன்னை வளர்த்தவர்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு -இந்தியப் பிரதமர் ஆகி - மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக ஆகத் துடிக்கும் மோடி சொல்கிறார்... அவருக்குத் தேர்தலில் நிற்க விருப்பமே இல்லையாம். இதையும் நாம் நம்பத்தான் வேண்டுமாம். அவரது கட்சிதான் நிற்கச் சொல்கிறதாம்!

‘மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது’ என்பதைத்தான் மறைமுகமாக இப்படிச் சொல்கிறாரா?

“எந்த நன்மையும் செய்யாதவர் எப்படி வருத்தப்பட முடியும்? ”- மோடி அளித்த பேட்டி குறித்து முரசொலி தாக்கு !

இந்தியா என்றுதான் பார்ப்பாராம். தமிழ்நாட்டை தனியாகப் பார்க்க மாட்டாராம்! குஜராத்தில் வெள்ளம் வந்தால் அன்றைய தினமே போவார். அன்றே 2 ஆயிரம் கோடியைக் கொடுப்பார். தமிழ்நாடு என்றால் வரவும் மாட்டார், நிதியைத் தரவும் மாட்டார். தனக்கென மனதில் தனி இந்தியா வைத்திருக்கும் நடவடிக்கை அல்லவா இது?

‘தமிழ்நாட்டு அரசியல் உங்களுக்கு சவாலாக இருக்கிறதா?’ என்று அந்த நிருபர் கேட்கிறார். அவர் அரசியலுக்காக எதையுமே செய்வது இல்லையாம். நாட்டுக்காகத்தான் செய்வாராம். பா.ஜ.க. அல்லாத கட்சிகளை உடைப்பதும், ஆட்சிகளை கவிழ்ப்பதும் நாட்டுக்காகவா செய்கிறார்? அதில் எந்த நாட்டு நன்மை இருக்கிறது? பா.ஜ.க. என்ற கட்சியின் நன்மைக்காக, தனது நன்மைக்காகத் தானே இவை அனைத்தும் செய்யப்படுகிறது?

வருமான வரித்துறை – சி.பி.ஐ.- அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகளை மிரட்டப் பயன்படுத்துவது அரசியலுக்காகத் தானே? எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக்குத் தான் இவை அனுப்பப்படுகின்றன. இது அரசியல் பழிவாங்குதல் அல்லவா? பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப்படுகிறதே இது தேச நலனா? மோடியின் சுயநலன் தானே?’ அமலாக்கத்துறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று மோடி சொல்வதைப் போல மட்டமான வார்த்தைகள் இருக்க முடியுமா?

25 பேர் நடவடிக்கை எடுத்து, அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் 20 பேர் மீதான வழக்குகள் முடக்கப்பட்டதை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு அம்பலப்படுத்திய ஒரு செய்தி போதுமே, அமலாக்கத்துறையின் ரிங்க் மாஸ்டர் மோடி தான் என்பதை நிரூபிக்க? மிகமிகப் பச்சையாக பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்களே? இதற்குப் பிறகுமா, ‘எனக்கும் அமலாக்கத்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்கிறார் மோடி. அவரது சாமர்த்தியம் என்பது எந்தப் பொய்யையும் சிரிக்காமல் சொல்வது. சீரியஸாகச் சொல்வது.

- முரசொலி தலையங்கம்

10.04.2024

banner

Related Stories

Related Stories