முரசொலி தலையங்கம்

மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினரை மட்டும் குறி வைப்பது ஏன்? - ஒன்றிய பாஜக அரசுக்கு முரசொலி கேள்வி !

சிறுபான்மையினரை மட்டும் குறி வைப்பது ஏன்? மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட மதப்பிரிவினரை மட்டும் குறி வைப்பது சட்டவிரோதம் இல்லையா?

மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினரை மட்டும் குறி வைப்பது ஏன்? - ஒன்றிய பாஜக அரசுக்கு முரசொலி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதச்சார்பற்ற நாட்டில்...

“மதச்சார்பற்ற நாட்டில் அனைவர்க்கும் பொதுவான சட்டம் தான் இருக்க வேண்டும்” - என்று கருத்துச் சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்படியானால் உங்கள் அனைவருக்கும் பொதுவான சட்டங்கள்தான் இருக்கிறதா? வேறு யாருக்கும் சிறப்பான சட்டங்கள் இல்லையா? எதற்காக சிறுபான்மையினருக்கு ஆதரவான சட்டங்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறது?

‘பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது’ என வலியுறுத்தி, 22வது சட்ட ஆணையத்திற்கு தி.மு.க. சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச் செயலாளர் – அமைச்சர் துரைமுருகன் அனுப்பிய கடிதத்தில், “இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் வாழ்ந்துவருகிறார்கள். அவரவர் பழக்க வழக்கங்களை அவரவர் பின்பற்றி வருகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.

பா.ஜ.க.வின் ‘ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு’ என்ற கொள்கை சட்ட விரோதம் ஆகும். இந்த நோக்கத்துடன்தான் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்குக் குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினரை மட்டும் குறி வைப்பது ஏன்? - ஒன்றிய பாஜக அரசுக்கு முரசொலி கேள்வி !

இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மை யினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும். அரசமைப்புச் சட்டப் பிரிவு - 29, இந்திய நிலப் பரப்பில் வாழும் ஒவ்வொரு குழுவினருக்கும், அவர்களுடைய மொழி, எழுத்து, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமையை அளித்துள்ளது. அதற்கு இது விரோதமானது.

இந்திய அரசியலமைப்பின் 371 ஆவது பிரிவின் கீழ் பல்வேறு இந்திய யூனியன் மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் xxi மற்றும் xxii பாகங்களில் காணக்கூடிய இந்திய அரசியலமைப்பின் பிரிவு 371 ஆவது பிரிவானது, நாட்டுக்குள் சில மாநிலங்களுக்கு பல தற்காலிக இடைநிலை மற்றும் விதிவிலக்கான விதிகளை வழங்குகிறது.

இச்சட்டமானது குஜராத், மகாராஷ்டிரா, நாகலாந்து, மிசோரம், அசாம், ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 371 A முதல் 371 J வரையிலான பிரிவுகளாக அமைந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது என்றால்... ‘இந்த மாநிலங்களின் வளர்ச்சியடையாத பகுதிகளின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் பொருளாதார மற்றும் பண்பாட்டு நலன்களைப் பாதுகாப்பது, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவர்களின் வழக்கமான சட்டங்களைப் பாதுகாப்பது’ என்றே சொல்லப்படுகிறது. அதாவது அந்தந்த மாநிலங்களுக்காக சிறப்பாக உருவாக்கப் பட்ட சட்டப்பிரிவுகள் இவை.

« 371 ஆவது பிரிவில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விதர்பா, மராத்வாடா, கட்ச் உள்ளிட்ட மராத்திய மொழி பேசும் பகுதிகளில் சமச்சீரற்ற வளர்ச்சியை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

« 371 ஏ - நாகலாந்து தொடர்பான சிறப்பு விதிகள் செய்து தரப்பட்டுள்ளது. நாகர்களின் மதம் அல்லது சமூக நடைமுறைகள், பாரம்பர்யங்கள், மரபுகள் ஆகியவற்றை வைத்து சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகங்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.

« 371 பி - அசாம் மாநிலத்துக்கு சிறப்புரிமை தரப்பட்டுள்ளது. அது பழங்குடியினப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது.

மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினரை மட்டும் குறி வைப்பது ஏன்? - ஒன்றிய பாஜக அரசுக்கு முரசொலி கேள்வி !

« 371 சி - மணிப்பூருக்கான ஏற்பாடுகள் இப்பிரிவில் உள்ளன.

« 371 டி - ஆந்திரா, தெலுங்கானா குறித்த பிரிவுகள் இவை. உள்ளூர் மக்களின் கல்வி, வேலை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இது உருவாக்கித் தரப்பட்டது.

« 371 எஃப் - சிக்கிம் மாநிலத்துக்கான ஏற்பாடுகள்.

« 371 ஜி - மிசோரம் மாநிலத்துக்கான ஏற்பாடுகள் ஆகும். மிசோரம் மக்களின் மதம் மற்றும் சமூக நடைமுறைகள் தொடர்பாக மிசோரம் மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் வரை நாடாளுமன்றம் நிறைவேற்றும் ஒரு சட்டம் அந்த மாநிலத்துக்குப் பொருந்தாது என்று இந்தப் பிரிவு உரிமை வழங்குகிறது. சிவில் மற்றும் குற்றவியல் நிர்வாகம் ஆனது மிசோ மரபுச் சட்டத்தின் முடிவுகளை உள்ளடக்கியே இருக்கிறது. 371 எச் - அருணாசலப் பிரதேசத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் அடங்கிய பிரிவு இது.

« 371 ஐ - கோவாவுக்கான ஏற்பாடு.

« 371 ஜே - கர்நாடகாவுக்கான ஏற்பாடு. பின்தங்கிய பகுதிகளை வளர்க்க உரிமை வழங்குகிறது.

- இவை எல்லாம் மாநிலங்களுக்கான தனியாகச் செய்யப்பட்ட சிறப்புச் சட்டங்கள் ஆகும். இதில் கை வைக்க தைரியம் உண்டா? பொதுவான நாட்டில் மாநிலங்களுக்கு ஏன் சிறப்புச் சட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? அதை மாற்ற முடியுமா?

“பொதுவான நாட்டில் பெண்களுக்கு ஏன் சிறப்புச் சலுகைகள்? பட்டியலின பழங்குடியினருக்கு ஏன் தனி ஒதுக்கீடு? பிற்படுத்தப்பட்டவர்க்கு ஏன் தனி ஒதுக்கீடு?” - என்று கேட்பீர்களா? சிறுபான்மையினரை மட்டும் குறி வைப்பது ஏன்? மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட மதப்பிரிவினரை மட்டும் குறி வைப்பது சட்டவிரோதம் இல்லையா?

- முரசொலி தலையங்கம்

23.03.2024

banner

Related Stories

Related Stories