முரசொலி தலையங்கம்

“ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்”: ஆளுநருக்கு முரசொலி பதிலடி!

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ் முன்னேற்றக் கழகமாகவும் செயல்பட்ட காரணத்தால்தான் குறளும் தமிழும் இன்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கிறது.

“ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்”: ஆளுநருக்கு முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆரியத்தின் பகை மாட்சியம்

குறளின் இறைமாட்சியும்

திருக்குறளை தீர்த்துக் கட்டி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார் போல மேதகு ஆளுநர் அவர்கள். தினந்தோறும் திருக்குறளை வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறார் அவர். ஜி.யு.போப் தான் தவறான பொருள் எழுதி விட்டார் என்று புதிய கண்டு பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு செய்தார்.

கோடிக்கணக்கான மக்கள், பல்லாண்டு காலமாக திருக்குறளை தமிழில்தான் படிக்கிறார்களே தவிர போப்பின் மொழிபெயர்ப்பில் அல்ல என்பதைக் கூட அவர் அறியவில்லை. தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் தமிழில்தான் தமிழர்களால் படிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அல்ல என்பதை அவருக்கு யாராவது முதலில் சொல்ல வேண்டும்.

"ஆன்மிகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள் வெறும் வாழ்க்கை நெறி நூலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது” என்று வருத்தப்பட்டுள்ளார் ஆளுநர் அவர்கள். "திருக்குறளில் ஆன்மிக அம்சங்கள் நிறைய உள்ளன. அரசியலுக்காக உண்மையைச் சொல்ல சிலர் மறுக்கின்றனர்” என்றும் சொல்லி இருக்கிறார். அந்த சிலர் யார்? நாம்தான். அரசியலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? திருக்குறள் என்ன தேர்தல் அறிக்கையா? அதனை அரசியலுக்காக மாற்றிச் சொல்வதற்கு? திருக்குறள் என்பது உலகப் பொதுமறை.

அந்த உலகப் பொதுமறையை உள்ளத்தால் ஒழுகி ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கம். கள்ளத்தால் யாரும் களவாடிவிடக் கூடாது என்பதே நமது நோக்கம். திருக்குறளுக்கு தவறான பொருளுரைத்து ஆரிய சக்திகள் அழிக்க நினைத்தபோது, குறளாசானின் உண்மை மனதை உலகுக்கு உணர்த்த முற்பட்டது திராவிட இயக்கம். 1940 ஆம் ஆண்டுகளில் தந்தை பெரியார் நடத்திய குறள் மாநாடுகளுக்கு அதுவே அடிப்படை.

'உங்கள் மதம் குறள் மதம், உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள்” என்றார் பெரியார். 'ஆரியப் பித்தலாட்டங்களுக்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான்' என்றார் பெரியார். குறளோவியம் தீட்டினார் தீந்தமிழ் கலைஞர். தலைநகர் சென்னையில் வள்ளுவப் பேராசானுக்கு கோட்டம் கண்டார் கலைஞர். கடல் நகராம் குமரியில் 133 அடி உயரச் சிலை அமைத்தார் தமிழ்ச்சிற்பி கலைஞர். நமது அடையாளம் வள்ளுவப் பேராசான்தான் என்று நிறுவினார் கலைஞர். நோக்கும் இடமெல்லாம் குறள் தீட்டி மக்கள் மனதில் ஈரடியை எழுதக் காரணம் ஆனார் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ் முன்னேற்றக் கழகமாகவும் செயல்பட்ட காரணத்தால்தான் குறளும் தமிழும் இன்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கிறது. இல்லாவிட்டால் 1938 முதல் 1965 வரை தமிழ்நாட்டில் அடித்த ஆரிய - இந்திச் சுனாமிகளால் குறளும் தமிழும் காணாமல் போயிருக்கும். அதனைக் காத்ததுதான் திராவிட அரசியல்.

இன்றைக்கு இவர்களுக்கு திருக்குறள் பாசம் பொங்குவதற்குக் காரணம், குறளின் புகழொளிதான். வள்ளுவர் புதிதாக எதையும் சொல்லவில்லை, ஆரியச் சரக்கைத்தான் தமிழ் படுத்தினார் என்று சொல்லி இந்த புகழொளியை மட்டுப்படுத்தப் பார்த்தார்கள். ஆரிய நெறி வேறு, குறள் நெறி வேறு என்பதை தமிழர்கள் உணர்ந்த காரணத்தால், இப்போது திருக்குறளை அணைத்துக் கெடுக்கப்பார்க்கிறார்கள்.

ஆன்மிகக் குறள் என்று குரல் எழுப்பக் காரணம், அதனை ஆரியக் குறளாக மாற்றுவதற்காக. குறளின் இறைமாட்சி என்பதை மேலோட்டமாகப் படித்தாலே உணரலாம். இது ஆரியத்தின் பகை மாட்சிக்கு முற்றிலும் விரோதமானது. "வைதீக தர்மமும் பொதுமறை அறமும் ஒன்றென நினைப்பவர் அறிவின் முடவர்” என்றார் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

கீதை சொல்லும் அறம் வேறு, குறள் சொல்லும் அறம் வேறு. அர்த்தசாஸ்திரம் சொல்லும் பொருள் வேறு, குறள் சொல்லும் பொருள் வேறு. வாத்சாயனரின் காம சாஸ்திரம் சொல்லும் இன்பம் வேறு, குறள் சொல்லும் இன்பம் வேறு. இது தெரியாமல் எல்லாம் ஒன்று என்று சொல்பவர்களுக்கு நாவலர் பதிலே நமது பதிலுமாம். மனிதன் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறான், அந்த வர்ணங்களைக் கடைப்பிடிப்பவனே மேலான கதியை அடைகின்றான் என்பது ஆரிய நெறி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது குறள் நெறி.

வேதத்தில் சொல்லப்பட்டவைதான் தர்மம், வேதத்தில் மாறுபடச் சொல்லி இருந்தாலும் தர்மமே - என்பதுதான் ஆரிய நெறி. 'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்க' என்பது குறள் நெறி. பெண்ணை ஆரியம் எங்கே நிறுத்தியது என்பதை அனைவரும் அறிவோம். 'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்பது குறள் நெறி.

பயிர்த்தொழில் என்பது பெரியோர்களால் இகழப்பட்ட தொழிலாகும் என்கிறது மனு, 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை' என்கிறது வள்ளுவம். 'அந்தணர்' என்ற சொல்லை வைத்து அகமகிழ்ந்து கிடக்கிறார்கள். அறவோரே அந்தணர் என்கிறார் வள்ளுவர். 'அந்தண்மை உடையவர்கள்' - அதாவது குளிர்ந்த அறத் தன்மை உடையவர்களைத்தான் சொல்கிறார்.

வள்ளுவர் சொல்லும் துறவறம் என்பது, இல்லற வாழ்வில் தோன்ற வேண்டிய பொதுமை உணர்ச்சியே. அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலுடன் முடிவுற்றது. 'வீடு' பேறு இல்லை குறளில். மருள் நீங்கி மாசு அறுத்தலும், ஐயமில்லாமல் தெளிதலும், எப்பொருளிலும் மெய்ப்பொருள் காணுதலும்தான் குறள் நெறியாகும்.

இதனைத்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னார்: "மனித குலத்தின் உரிமைகள் இயற்கையில் அமைந்தவை. அந்த உரிமைகளை நாடுகளின் அமைப்பின் மூலமோ, அரசியல்களின் மூலமோ, சமய அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி- குல அமைப்புகளின் மூலமோ யாரும் பறிக்க உரிமையில்லை. உயிர்கள் பிறப்பிலேயே ஒத்த உரிமையுடையன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவர் சமயத்தின் உயரிய கோட்பாடு உலகில் இடம் பெற்றால்தான் வெள்ளையர், கறுப்பர், தீண்டத்தகாதவர் என்று மனித குலத்தினைப் பிரித்து ஆட்டிப் படைக்கும் தீமைகள் மறையும்" என்றார்.

இதுவே வள்ளுவர் நெறி. எனவே, திருக்குறளை வெளிநாட்டவர் குறிப்புகளில் இருந்தல்லாமல், உள்நாட்டுத் தமிழறிஞர்களின் சொற்களின் வாயிலாக அறிந்து பேச ஆளுநர் முனைவாராக!

banner

Related Stories

Related Stories