முரசொலி தலையங்கம்

’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’.. ஆகமம் போச்சு என கிளம்பியவர்களுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

அரசின் விதியை முழுமையாக அகற்றிவிடலாம் என்று நினைத்தார்கள். அது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நடக்கவில்லை.

’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’.. ஆகமம் போச்சு என கிளம்பியவர்களுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 25, 2022) தலையங்கம் வருமாறு:

‘‘எங்கிருந்து விரட்டினாலும் ஜாதி என்பது, கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறது” என்றார் தந்தை பெரியார். அதற்காகவே அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிமிகு திட்டத்தை, - சட்டத்தை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்கள். அத்தகைய புரட்சிமிகு திட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டார், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வழக்கம் போல, ‘ஆகமம் போச்சு’ என்று சிலர் கூக்குரல் இட்டார்கள். இவர்களுக்கு எல்லாம் கலைஞர் அவர்கள் அப்போதே ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்கள்.

‘‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்கவேண்டும் என்பதைப் போலவே, வர்ணாசிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். எவ்வளவு சொன்னாலும் இங்கே சிலருக்குப் புரியாது. அவர்கள் சிலர் சேர்ந்து வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

“இந்து சமய அறநிலையத்துறைப் பணியாளர் விதிகள்” என்பது, அர்ச்சகர் நியமனத்திற்கானது மட்டும் இல்லை என்றும், அனைத்து ஊழியர்கள் நியமனங்கள் தொடர்புடையது என்பதால், “அந்த விதிகளை ரத்து செய்தால் நிர்வாகச் சீர்குலைவு ஏற்படும்” எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’.. ஆகமம் போச்சு என கிளம்பியவர்களுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

தமிழக அரசு அர்ச்சகர் நியமன விதிகள் என்பது, ஆகம விதிகளின்படி கட்டப்படாத கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில் வழிபாட்டு முறை, கோவில் நிர்வாகம், அர்ச்சகர் நியமனம் ஆகிய அனைத்தும் அந்தந்தக் கோவில்களுக்கான ஆகம விதிகளின்படியே பின்பற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பதும் உண்மைதான். அவ்வாறு ஆகம விதிமுறைப்படி உள்ள கோவில்களைக் கண்டறிவதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 இல், ஒவ்வொரு குடிமகனும் நம்புகிற மதத்தின் அடிப்படையில் வழிபாடு நடத்த உரிமையுண்டு என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஒருவேளை அரசின் விதிகள் அவர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிட்டால், அவர்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமைக்கு எதிரானதாகிவிடும் என்று குறிப்பிட்டு, அரசின் விதிகள் செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அர்ச்சகர் பணியிட மாறுதல் செய்யும்போது, ஒரே ஆகம விதிகளைப் பின்பற்றக் கூடிய பிற கோவில்களுக்குள் பணியிடமாற்றம் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தனர். அதாவது அரசின் உத்தரவை, செல்லும் என்றே சொல்லி இருக்கிறது உயர்நீதிமன்றம். அரசின் உத்தரவை ரத்து செய்யவில்லை உயர்நீதிமன்றம்.

ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்க தமிழ்நாடு அரசு நினைக்கிறது. அதற்காக இந்து சமய அறநிலையத் துறையில் புதிய விதிகளை உருவாக்கியது. இதன்படி ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம். இன்ன ஜாதியார் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்பது காலாவதி ஆனது. அத்தகைய சான்றிதழ் படிப்பை முடித்த 18 முதல்

35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகலாம் என்று தகுதி உறுதி செய்யப்பட்டது. இதைச் செய்ததுமே, ஆகம விதிகளுக்கு விரோதம் என்று சிலர் கிளம்பினார்கள்.

’அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’.. ஆகமம் போச்சு என கிளம்பியவர்களுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

2007–2008 கல்வி ஆண்டில் வேத ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

23.5.-2006 அன்று தி.மு.க. அரசில் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் ஜாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை,

திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம்

ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம் , திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள்

பயிற்றுவிக்கப்பட்டது. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. எனவே இதில் எந்த ஆகம முரணும் இல்லை.

உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அங்கீகரித்துவிட்டது. 14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே’’ என்று கூறப்பட்டது.

16.12.2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘‘இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருக்கிறது.

அரசின் விதியை முழுமையாக அகற்றிவிடலாம் என்று நினைத்தார்கள். அது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நடக்கவில்லை.

‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்தான்; “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகிட வழிகாணாமல், இவர்களை எல்லாம் நான் விட்டுச்

செல்கிறேனே!” எனும் கவலையாகும். பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றாமல் புதைத்துவிட்டோம்’ என்றார் கலைஞர். முள் முனையை முறித்துவிட்டது தீர்ப்பு. முழுமையாகவே அகற்றியாக வேண்டும்.

banner

Related Stories

Related Stories