முரசொலி தலையங்கம்

‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச்சொல் அல்ல; ஆளுநர் பயப்பட வேண்டாம்: சாட்டை சுழற்றும் முரசொலி!

கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை.

‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச்சொல் அல்ல; ஆளுநர் பயப்பட வேண்டாம்:  சாட்டை சுழற்றும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.15 2022) தலையங்கம் வருமாறு:

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு கதையை அடிக்கடிக் குறிப்பிடுவார்கள்.

ஓவியன் ஒருவன், ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைந்து கொண்டு இருந்தான். அதனை பார்த்துக் கொண்டு இருந்த ஒருவன், ‘கால் விரல் தவறாக இருக்கிறது’ என்று சொன்னானாம். ஓவியனும், அதனை ஒப்புக் கொண்டான். திருத்தினான்.

தான் சொன்னதை ஏற்றுக் கொண்டான் ஓவியன் என்பதால், வரிசையாக ஒவ்வொன்றுக்கும் திருத்தம் சொல்லத் தொடங்கினான் அந்த பார்வையாளன். அவை அனைத்தும் அபத்தமாக இருந்தன. உடனே ஓவியன், “நீ காலோடு நின்று கொள்’’ என்று சொன்னானாம். இப்படித்தான் சில பேர், சொல்லும் கருத்துக்கள் இருக்கும் என்பார் முத்தமிழறிஞர்.

தமிழ்நாட்டு ஆளுநர் சொல்லும் கருத்துக்கள் சமீபகாலமாக இப்படித்தான் இருக்கின்றன. கூட்டாட்சித் தத்துவம் குறித்தும், இந்தியாவைப் பற்றியும் பேசி இருக்கிறார். “இந்தியா ஓர் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல. இங்குள்ள மக்களின் பன்முகத் தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் பன்முகத் தன்மையைப் போன்றது’’ என்று சொல்லி இருக்கிறார்.

“இந்திய யூனியன் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா 1947 இல் பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவைப் போல ஒப்பந்தக் கூட்டமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பல மன்னர்கள், ராஜ்யங்களைப் பொருட்படுத் தாமல் பாரதத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மிகங்களால் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஒன்றியம் இயல்பாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது.பாரதம் காலம் காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் தமிழக ஆளுநர்.

கலாச்சாரம், ஆன்மிகம், பாரதம் என்ற பெரிய வார்த்தைகளைக் கொண்டால் சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிடாது.

பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன், இந்தியாவின் முழு நிலப்பரப்பும் ஒரே ஒருவர் ஆளுகையில் இருந்ததா? இல்லை! அப்படி இருந்ததற்கான ஆதாரம் உண்டா? இல்லை! பிரிட்டிஷார் ஆட்சியில் கூட, அவர்களது தலைமையை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களும், சமஸ்தானங்களும் இருக்கத்தான் செய்தன. அதனையும் ஒன்று சேர்த்தவர் சர்தார் படேல்.

படேலுக்கு இவர்கள் சூட்டும் மகுடம் என்ன? இந்தியாவுக்குள் இணையச் சம்மதிக்காத சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக் கொடுத்தவர் அவர்தான் என்பதால்தான் அவருக்கு 3000 கோடியில் சிலை வைத்தார்கள். அவர் பெருமையை, அவர் சாதனையைச் சிதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி கருத்துச் சொல்லலாமா? எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்தோம் என்றால் சர்தார் படேல் சாதித்தது என்ன?

அசோகர் காலத்தில் கூட, தமிழகம் நீங்கலாக இந்தியாவின் மற்ற நாட்டுப் பகுதிகள் அரசியல் ஒருங்கிணைப்பைப் பெற்றன. மௌரிய, கனிஷ்க, குப்த ஆட்சிகளில் கூட வட இந்தியாவில் தனித்த ஆட்சிப்பகுதிகள் அதிகம் இருந்தது. அனைத்தையும் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் போர்கள் நடத்திய காலத்தில் கூட, தனித்த ஆட்சிப் பகுதிகள் அதிகம் இருந்தன. 1500 ஆண்டு காலத் தென்னக வரலாற்றில், வடபுலத்து பேரரசர்கள் எவரும் இங்கு வந்து தன்னகப்படுத்தவில்லை.

சுல்தான்களின் ஆட்சியில் மாகாணங்களுக்கு முன்னால் இருந்த பிரிவினை என்பதை ‘சுபா’க்கள் என்பார்கள். இத்தகைய ‘சுபா’க்கள் தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. வடபுலத்தை 15 சுபாக்களாக வைத்திருந்தார்களே தவிர, அதில் ஒன்று கூட இங்கு கிடையாது. முகலாயர்களைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷார், வடக்கைப் போன்ற ஒரு ஒருங்கிணைப்பை தக்காணத்திலும், தென்னகத்திலும் அமைத்தார்கள். போர் மூலமாக மட்டுமல்ல; பொருளா தாரத்தின் மூலமாகவும் இந்த வெற்றி சாத்தியம் ஆனது.

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னால் இணைக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷார் நடத்திய போரால் கிடைத்தவையே. இராபர்ட் கிளைவ் வாழ்க்கை யைப் படித்துப் பார்த்தால் அதனை உணரலாம். 12 ஆண்டுகள் நடந்த கர்நாடகப் போர் காரணமாகத்தான் பிரிட்டிஷார் ஆளுகைக்குள் தென்னகம் வந்தது.

பிளாசிப் போர், மராட்டியர்களையும் சீக்கியர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தானமும், காந்தாரமும், நேபாளமும், பூட்டானும், பர்மாவும், இலங்கையும் அப்படித்தான் இணைக்கப்பட்டன.

“அசோகராலும், அக்பராலும் அடைய முடியாததும் - மராத்தியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததுமான இந்தியாவின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகில இந்திய தேசியக் கோட்பாடானது ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையில் உருவானதே” என்று வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர் எழுதுகிறார்.

இன்றைக்கு இருக்கும் ‘மத்திய அரசு’ என்பது 1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தால் உருவானது ஆகும். அதனுள்ளும் சேராத குறுநில மன்னர்கள் இருந்தார்கள். 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் தாங்கள் தனிநாடு என்று சொன்ன மன்னர்களும் உண்டு. மாட்சிமை தாங்கிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், திருவிதாங்கூர் -கொச்சியைத் தனிநாடு என்றுதான் அறிவித்தார். படேல் - கிருஷ்ணமேனன் ஆகியோரின் வாக்குறுதி காரண மாகவும், ஹைதராபாத் மீது படையெடுப்பு நடத்தியும்,காஷ்மீரத்துக்கு தனிச் சலுகை தந்தும் இன்றைய நிலப்பரப்பு முழுமை பெற்றது.

அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, “india that is bharath, shall be a union of states” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கை தான் இந்தியா. இந்த நாட்டில் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். 826 பெருமொழிகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்?

‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தின் மூலமாகத் தான் உருவாக்க முடியும். ‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல. ‘மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டு தான்’ மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை.

banner

Related Stories

Related Stories