முரசொலி தலையங்கம்

பெரியார் பெயரை பார்த்ததும் யாருக்கு வலிக்கிறது? பழனிசாமிக்கா? BJPக்கா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

பெயர் சூட்டுவது என்பது அந்தத் தலைவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, நாம் நமது நன்றியின் அடையாளத்தைக் காட்டுகிறோம். அவ்வளவுதான். பழனிசாமிகளுக்கு நன்றியறிதல் என்றால் என்னவென்று தெரியாது.

பெரியார் பெயரை பார்த்ததும் யாருக்கு வலிக்கிறது? பழனிசாமிக்கா? BJPக்கா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"உப்புக்கும் முத்துக்கும் இடமளிக்கும் கடல், உயிர் பறிக்கும் திமிங்கிலங்களுக்கும் இடமளிப்பது போல் - வல்லவர்க்கும் நல்லவர்க்கும் இடம்தரும் வரலாறு; வஞ்சகர்களுக்கும் கோழைகளுக்கும் இடமளிக்கத்தான் செய்கிறது" - என்று எழுதினார், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

எத்தனையோ பெரிய மனிதர்கள் குடியிருந்த கோட்டையில், பழனிசாமி போன்ற வஞ்சகர்களும் கோழைகளும் இடம்பெற்றுவிட்டதும் தமிழ்நாட்டின் வரலாறுதான். தகுதியற்றவரை அந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டால், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்வார். அத்தகைய இழிசெயல்களின் பட்டியல், பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் ஏராளம்! ஏராளம்!

இறுதியாய் நடந்திருக்கும் இழி செயல்கள்தான் - சாலைகளின் பெயரை மாற்றுதல்! பதவி பறிபோகும் நேரத்தில் கூட, பா.ஜ.க.வின் காலைச் சிக்கெனப் பற்றி நிற்கும் இழிசெய்கை அது! தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக தொடர் விழாவாக நடத்திய அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு 1979 இல், "பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை" என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று பெயர் மாற்றியது.

பெரியார் பெயரை பார்த்ததும் யாருக்கு வலிக்கிறது? பழனிசாமிக்கா? BJPக்கா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு -நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் - ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க்ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? கேட்டால், சென்னை மாநகராட்சிதான் அப்படிப் பெயர் சூட்டியது, நெடுஞ்சாலைத் துறை சூட்டவில்லை என்று வியாக்கியானம் சொல்கிறார்கள்.

நெடுஞ்சாலைத் துறை சூட்டவில்லை என்றால், இதுவரை நெடுஞ்சாலைகளில் ‘பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை' என்று இருந்தது எப்படி? எந்த உத்தரவை வைத்து அப்படி இத்தனை ஆண்டு காலம் போட்டீர்கள்? உத்தரவே இல்லாமல் போட்டுக் கொண்டீர்களா? பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரைப் பார்த்ததும் யாருக்கு வலிக்கிறது? பழனிசாமிக்கா? பா.ஜ.க. வுக்கா? அல்லது அதிகாரிகளுக்கா? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லையா? இந்தத் துணிச்சலுக்கு யார் காரணம்? யார் கொடுத்த துணிச்சல் இது?

‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ என்றும், சென்னை காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயரும் ‘கிராண்ட்நார்தென் டிரங்க் ரோடு’ என்றும் குறிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் சொல்கின்றன. ‘மவுண்ட் ரோடு’ என்பது, ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்டு விட்ட பிறகும் சில மண்டூகங்கள் மனமில்லாமல் மவுண்ட் ரோடு என்று எழுதியும் பேசியும் வருவதையும் பார்க்கிறோம். அண்ணாவின் பெயரை உச்சரிப்பதற்கே அவ்வளவு வலிக்கிறது!

சென்னையில் இயங்கும் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராசர் பெயரும் முதல்வர் கலைஞர் அவர்களின் கோரிக்கையை ஏற்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களால் பெயர் சூட்டப்பட்டது. அந்த இரு தலைவர்கள் பெயர்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையே தெளிவுபடுத்த முடியாத அளவுக்கு திரைமறைவுக் காரியங்கள் அங்கே நடக்கிறது. இப்போது இங்கே பெரியார், காமராசர், அண்ணா ஆகியோர் பெயர்களை மறைக்கும் - இருட்டடிப்புச் செய்யும் காரியங்கள் செய்யப்படுகிறது.

இதன் மூலமாக இன்னமும் என்ன ஆதாயத்தை அடைய நினைக்கிறார் பழனிசாமி? அரசியல் தலைவர்களில் ஒரு சிலர் நீங்கலாக அனைவரும் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட பிறகும் பழனிசாமி பதில் தரவில்லை. எல்லாவற்றுக்கும் வாய் நீளம் காட்டியவர் ஆச்சே அவர்? எதனால் இதற்குப் பதில் தர முடியவில்லை? பெயர் சூட்டுவது என்பது அந்தத் தலைவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, நாம் நமது நன்றியின் அடையாளத்தைக் காட்டுகிறோம். அவ்வளவுதான். பழனிசாமிகளுக்கு நன்றியறிதல் என்றால் என்னவென்று தெரியாது."எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படுவதே இல்லை. மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையே ஆகும்" என்றார் தந்தை பெரியார்.

"திராவிடர்களிடையே எனக்குக் கெட்ட பேர் வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள். உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றிக் கவலைப்படாத திராவிட மக்களிடையே நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எனக்குச் சிறிதுமில்லை. அப்படி போலி நல்ல பெயரின் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும், அதில் முதன்மையானதாய் இழிவு நீங்க வேண்டும் என்கிற ஆசையும் கவலையும் தவிர வேறு ஒன்றும் எனக்குக் கவலையாக இல்லை" என்று சொன்னவர் தந்தை பெரியார். பழனிசாமிக்கோ, அவரை கைப்பாவையாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வுக்கோ, சில அதிகாரிகளுக்கோ இது புரியாது.

சாலையின் பெயரில் இருந்து பெரியாரின் பெயரை நீக்குவது பெரியாரை நீக்குவதாக மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள்! ‘எங்கள் ஊருக்கு ஒரு பெரியார் இல்லையே' என்று வடமாநிலத்து அறிஞர்கள் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்! "எங்கள் மாநிலத்தில் ஒரு அண்ணாவும், கலைஞரும் இருந்திருந்தால் 1965 ஆம் ஆண்டே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி இருப்போம்" என்று கொல்கத்தா எழுத்தாளர் எழுதினார்! காலம் வழங்கிய கொடைகள் அவர்கள். அதனால்தான் காலங்கள் கடந்தும் பயன்கொடுத்து வருகிறார்கள்!

"இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுகிறேன். தமிழ்நாடு என்று அழைக்கப்படும் காலம் வரையில், இந்த நாட்டை அண்ணாத்துரைதான் ஆள்கிறான் என்று அர்த்தம்" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இத்தகைய கம்பீரத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தெருவின் பெயரை அழிப்பதால் அவர்கள் புகழ் அழிந்து விடும் என்று நினைப்பவர்கள், கழிவறையில் பெயரை எழுதுவதால் அவமானப்படுத்தி விட்டதாக நினைக்கும் அற்பர்கள். பதர்கள், களைகள், கழிசடைகள்!பெரியாரும் அண்ணாவும் பெயர்கள் அல்ல, முகவரிகள்! அவைகள் சாலைகள் அல்ல; பாதைகள்!

banner

Related Stories

Related Stories