
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் இன்று (அக்.28) நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரை பின்வருமாறு,
“இங்கு உட்கார்ந்திருக்கும் உங்கள் மனதில், இப்போது என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்று, எனக்கு நன்றாகத் தெரியும்... தலைவரும் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்... நம்மையும் சும்மா இருக்க விடமாட்டேன் என்கிறார் என்று சிலர் நினைப்பீர்கள்... சுணங்கி சும்மா இருந்துவிட்டால், நாம் ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம்! அது தேக்கம்!
உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்! அதுதான் இயக்கம்! நம்முடைய இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறோம்!
உங்களுடைய உழைப்பால், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையும் ஆட்சி அமைக்க வேண்டும்! அதற்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம்! அதிலும், 2019-ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம்!
நம்முடைய வெற்றிகள், நம்முடைய எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது! 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம்... அன்றைக்கு தலைப்புச் செய்தி என்ன என்றால், “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!”. இதுதான் தலைப்புச் செய்தி!
இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை! உங்கள் உழைப்பின் மீதும் - ஆட்சியின் சாதனைகள் மீதும் - தமிழ்நாட்டு மக்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்! நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களும் - சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது!
லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும் – தொழில்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும் – கல்வித் துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நம்முடைய திட்டங்களும் சாதனைகளும்தான் திராவிட மாடலின் அடையாளம்! இந்தியாவில் எந்த மாநில அரசும் நம்முடைய அளவிற்கு சாதனைகள் செய்திருக்க மாட்டார்கள்!
மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம்! நம்முடைய அரசு செய்த சாதனைகளால்தான் நம்மால் தைரியமாக அனைவர் வீட்டுற்கும் சென்று, ஆதரவு கேட்க முடிகிறது!
ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை - நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லி, ‘தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்’ என்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று - இந்த மாபெரும் முன்னெடுப்பை வெற்றியடைய வைத்த, கழகத்தின் ரத்த நாளங்களான உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும், இந்த மேடையில் இருந்து, என்னுடைய பாராட்டுகளை, இந்த சல்யூட் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்!

தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல் – முதுகெலும்போடு எதிர்த்து நிற்கிறோம்!
எதிர்த்து நிற்பது மட்டுமல்ல; விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது மாதிரியான பல போராட்டங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்! இப்போது கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, பல்வேறு மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைத்தோம்!
அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றி பெற்றோம்! இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம் மீது கோபம் வருகிறது. அதனால்தான், பல்வேறு சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்!
இந்த நிலைமையில்தான், அடுத்தகட்டமாக, நமக்கு காத்திருக்கும் பணிகள் என்ன? அதை எப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தலைமை முதல் தொண்டர்கள் வரை எப்படி ஒருங்கிணைந்து ஒரே இலக்குடன் செயல்பட வேண்டும்? என்று விவாதித்து, அதை களத்தில் செயல்படுத்துவதற்காகத்தான், இந்தப் பயிற்சிக் கூட்டம்! நம் கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை - மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி - பேரூர் கழகச் செயலாளர்கள் என்று அனைவரும் வந்திருக்கிறீர்கள்.
உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கும்போது, உங்கள் முகங்களில் நான் உதயசூரியனைப் பார்க்கிறேன். அதனைத் தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது!
இந்தப் பயிற்சி கூட்டத்துக்குப் பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞர் அணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்று முன்னெடுக்க வேண்டும். ஏன், மாநில நிர்வாகியாக இருந்தாலும்கூட, அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும்.
நானேகூட, என்னுடைய வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று, அங்கு நம்முடைய வெற்றியை உறுதிசெய்வதற்கான பரப்புரையில் நிச்சயமாக ஈடுபடப்போகிறேன். ஒவ்வொரு ஒன்றிய – பகுதி - பேரூர் செயலாளரும், தனக்கு கீழ் வரும் ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி கூட்டங்களை தினமும் மாலை வேளையில் நடத்தியாக வேண்டும்.
இந்தக் கூட்டங்களில் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட சார்பு அணி நிர்வாகிகளில் இருந்து, மாநில நிர்வாகிகள் வரை அனைத்து நிர்வாகிகளும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டங்களில், ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட்டை செட் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பூத்வாரியாக நடத்தும் கூட்டங்கள் – அதில் நீங்கள் நிர்ணயித்திருக்கும் இலக்கு – இவ்வாறு அனைத்து தகவல்களும் அடங்கிய ஷீட்டை மாவட்டச் செயலாளர் மூலமாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாராவாரம் நீங்கள் அனுப்புவதை பார்த்துவிட்டு, நானே உங்களுக்கு போன் செய்து விசாரிப்பேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தேர்தல் பணியாற்ற முதல் தேவை, கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கு! அதை நீங்கள் அனைவரும் உள்ளத்தில் தாங்கி உழைக்க வேண்டும்! உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. அதேபோன்று, சோர்வடையாமல் தொடர்ந்து செயல்படுவதும் முக்கியம்!
அவ்வாறு செயல்பட்டால், நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது. என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என்று ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். 2026-இல் நடக்க இருக்கும் ஜனநாயகத் தேர்தல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்!
தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் நம்முடைய ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா? என்று தீர்மானிக்கும் தேர்தல்! தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் – தனித்தன்மையையும் காப்பாற்றப்போகும் தேர்தல்!
தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும் - தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி, நம்முடைய மண் – மொழி – மானத்தை காக்க வேண்டும். அதற்காகத்தான் தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

தமிழ்நாடு இப்போது சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்தியின் பேரால் - சமஸ்கிருதத்தின் பேரால் - ஜி.எஸ்.டி.யின் பேரால் - புதிய கல்விக் கொள்கையால் - நீட் தேர்வால் - சட்டங்களால் - உத்தரவுகளால் - ஆளுநரால் என தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள்.
இது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இந்தத் தாக்குதலை முறியடிக்கும் வல்லமை நமக்குத்தான் இருக்கிறது! பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனாலும், புதிது புதிதாக குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள்.
S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்த இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதைக் காண்பித்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பணிய மாட்டோம்! இங்கு அவர்களின் ஆர்.எஸ்.எஸ். பாச்சா எதுவும் பலிக்காது!
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை, இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருக்கிறது. இதை தொடக்கத்திலேயே நாம் கண்டித்தோம். தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பயன்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சி செய்கிறது என்று அப்போதே சொன்னேன்.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்.
அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் தெம்போ திராணியோ இல்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையை பறித்துட்டு வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். S.I.R. முறையை கைவிட வேண்டும் என்பதையும் – வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் – இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவே தி.மு.கழகம் வலியுறுத்தி இருக்கிறது.
அதையும் மீறி முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனால், நமக்கு மட்டும்தான் உண்டு! மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் S.I.R. செயல்பாட்டை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.
அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் - தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
மக்கள் நலனையும் - மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்று நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள் என்று அதன் தலைவர் என்ற முறையில் உறுதி ஏற்கிறேன். 2021 தேர்தல், தமிழ்நாட்டை கொத்தடிமை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது, தமிழ்நாட்டை பா.ஜ.க. – அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல்.
ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை, வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார். அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை;
அவர்களது கட்சிக்காரர்களும் விரும்பவில்லை! மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு செல்லவில்லை! வி.சி.க. வருகிறார்கள்; கம்யூனிஸ்ட்டுகள் வருகிறார்கள்; காங்கிரஸ் வருகிறார்கள் என்று அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார்... ஆனால், யாரும் அங்கு செல்லவில்லை... மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை!
தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதை நம்முடைய கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும்! அந்தக் கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும்!
என்னுடைய அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்கள் மாவட்டத்துக்கு - நகரத்துக்கு - கிராமத்துக்கு – எடுத்துச் செல்லுங்கள். நான் சொன்னதைச் அவர்கள் அனைவரிடமும் சொல்லுங்கள்.
நான் கேட்டுக்கொண்டதைச் சொல்லுங்கள். ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள். நான் உழைக்கச் சொன்னதைச் சொல்லுங்கள். நான் அவர்களைத்தான் நம்பி இருக்கேன் என்று சொல்லுங்கள். தொண்டர் இருக்கும் தைரியத்தில்தான் தலைவர் இருக்கிறார் என்று மறக்காமல் சொல்லுங்கள்.






