நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 13.5.2025 அன்று தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தை திறந்து வைத்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 32 வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரியும் மாவூத் மற்றும் காவடிகளுடன் கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, 14.5.2025 அன்று நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று, மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைத் தேடி தரும் வகையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி, மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் (15.5.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க்காட்சியை தொடங்கி வைக்க செல்லும் வழியில், பெருந்திரளான பெண்கள், சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த முதலமைச்சர் அவர்கள் 127-வது மலர்க்காட்சியை தொடங்கி வைத்து, 24 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லத்தை திறந்து வைத்தார்.
கோடைக்காலத்தில் நீலகிரியின் அழகினை கண்டுகளிக்க வரும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பாக பல்வேறு கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 127-வது மலர்க்காட்சி 15.05.2025 முதல் 25.05.2025 வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் 127-வது மலர்க்காட்சியில் சுமார் 40,000 வண்ண மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டு பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் மலர் மாடத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த 127-வது மலர்க்காட்சியின் சிறப்பம்சமாக (Royal Theme) பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையிலும், சிறுவர்களைக் கவரும் வகையிலும் 70 அடி நீளம், 20 அடி உயரம், பிரம்மாண்டமான அரண்மனை நுழைவு வாயில் வடிவமைப்பு 1,30,000 மலர்களால் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் கார்னேசன், ரோஜா, சாமந்தி போன்ற 2,00,000 மலர்களால் ஆன (Royal Castle) பண்டைய அரசர் கால அரண்மனை அமைப்பும் மிக பிரம்மாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 8 அடி உயரம் 35 அடி நீளம் கொண்ட அன்னபட்சி 50,400 சாமந்தி மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4,000 மலர்த்தொட்டிகள் மற்றும் 35,000 சாமந்தி, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்லணை மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கால சிம்மாசனம். ஊஞ்சல், கண்ணாடி, இசைக் கருவிகள், பீரங்கி, யானை, புலி, சதுரங்க அமைப்பு போன்ற மலர் அலங்கார வடிவமைப்புகளும் இவ்வாண்டு மலர்க்காட்சியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இம்மலர்க்காட்சியில் தோட்டக்கலை துறையின் சார்பாக 15.05.2025 முதல் 25.05.2025 வரை அனைத்து நாட்களிலும் சிறப்பான முறையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள 127-வது மலர்க்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்து, யானை மலர் வடிவ அமைப்பு, அரண்மனை அலங்கார வடிவமைப்பு, சிம்மாசனம் மலர் வடிவமைப்பு, மலர்க்காட்சி திடல், அன்னப்பட்சி மலர் வடிவமைப்பு, கண்ணாடி மாளிகை, கல்லணை மலர் வடிவமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், அரசு தாவரவியல் பூங்காவில் 24 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரணி இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். பின்னர், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மகளிர் சுயஉதவிக் குழு, நீலகிரி பார்வையற்றோர் நலச்சங்கம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள் பழங்குடியின மக்களின் நடனம், பரதநாட்டியம், திபெத்தியர்களின் நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.