இந்திய அளவில் கல்வி வழங்குவதிலும், கல்வி மேலாண்மையிலும் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவர்கள் உலக அளவில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கல்வியும், ஊக்கத்தொகையும் மாணவர்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கை திணிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்க திட்டமிட்டு வருகிறது. இதனை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியாயப்படுத்தியும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று மிரட்டல் விடும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என பதிவிட்டுள்ளார்.