வாசிப்பு ஒருவரை மிகப்பெரிய உயரத்தில் வைக்கும். புத்தக வாசிப்பு என்பது பலருக்கும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, முக்கிய வேலையாகவே இருக்கிறது. இதனாலே பல எழுத்தாளர்கள் உருவாக்குகிறார்கள். புத்தகங்கள் இல்லையென்றால், தற்போது உலகத்தின் பல விஷயங்களை யாரும் அறிந்திருக்க முடியாது. புத்தகம் என்பது பலருக்கும் வாழ்க்கை.
இப்படி நமது வாழ்வோடு ஒன்றியிருக்கும் புத்தகத்தை, எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புத்தக தினம் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ப்ரல் 23, 1995 அன்று யுனெஸ்கோவால் புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் உலகளாவிய கொண்டாட்டமாகவும், இளைஞர்கள் வாசிப்பின் மகிழ்ச்சியைக் கண்டறிய ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்பட்டது.
அப்போது இருந்து தொடர்ந்து இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு புத்தக கடைகளும், தங்கள் புத்தகத்தை சலுகையில் விற்பர். புத்தக வாசிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டிலும் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இந்த புத்தக தினத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெயியிட்டுள்ள பதிவு வருமாறு :
"புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!
புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!"