மு.க.ஸ்டாலின்

”ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது” : திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார்.

”ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது” : திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-03-2024) திருச்சியில் நடைபெற்ற ’திருச்சி, பெரம்பலூர்’ மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு ஆற்றிய எழுச்சியுரையின் விவரம் வருமாறு:

டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே! திருச்சி என்றாலே திருப்புமுனை! இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம்! பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்கான துவக்கமாக இங்கு திரண்டிருக்கிறோம்!

வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? நாற்பதுக்கு, நாற்பது! நாற்பதுக்கு, நாற்பது! நாம் எழுதப் போகும் புதிய வரலாற்றுக்கு முன், தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் - தலைவர் கலைஞரையும் வணங்கி, இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். மாநாடுபோல இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள்.

எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்தத் திருச்சிதான்! திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான்! திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை! அதன் அடையாளமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்!

நேரு அவர்கள் சொன்னதுபோல், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, 'தமிழ்நாட்டின் விடியலுக்கான முழக்கம்' என்ற எழுச்சிமிகு கூட்டத்தை ஏற்பாடு செய்து, இங்கு அழைத்து வந்தார் ஆருயிர் சகோதரர் கே.என்.நேரு. அதுதான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி கோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை அமர வைத்தது! உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அன்று முதல், இந்தியாவே பாராட்டும் நல்லாட்சியை நடத்தி வருகிறேன். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியின் ஆட்சியை ஒன்றியத்தில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல்!

தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்; அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், “தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், தி.மு.க.வினருக்குத் தூக்கம் வரவில்லை” என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடியபோகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை! அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும் – கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது!

சரி, தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா? வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை! இனி வந்தாலும், சொல்லவும் முடியாது! பத்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றைக்கூட சொல்ல முடியுமா! இவர் நம்மை விமர்சிக்கிறார்!

இப்போது நான் சொல்கிறேன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக, மக்களாகிய உங்களுக்காகச் செய்த சாதனைகளின் பட்டியல் சொல்லவா! சொன்னால் இன்றைக்கு ஒரு நாள் போதாது! முக்கியமான சில திட்டங்களுடைய பயன்களைப் பற்றி, நான் சொல்வதை விட, தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று நேற்று ஒரு வீடியோ பார்த்தேன்.

அதில், ஒரு மகளிர் சொல்கிறார்: எங்கள் வீட்டில், குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால், காசுக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய தேவை இனிமேல் இல்லை. எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், 1000 ரூபாய் தாய் வீட்டுசீர் இருக்கிறது! இப்படி மாதா மாதம், மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!

அடுத்தது, விடியல் பயணத் திட்டம் பற்றிப் பேசுகிறார்கள்! ஸ்டாலின் சார் பேருந்தில் சென்று, நான்கு மாதம் இலவசமாக பயணம் செய்து கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து, இப்போது வேலைக்குச் செல்கிறேன் என்று - காஞ்சிபுரம் மாவட்ட சகோதரி ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறினார், இது போல், மாநிலம் முழுவதும் இதுவரையில் மகளிர் மட்டும், 445 கோடி முறை பயணம் செய்து இருக்கிறார்கள்!

அடுத்து, திருப்பூர் மாணவி ஒருவர் பேசுகிறார்! ஏழ்மையான சூழலில் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வந்த எனக்கு, அப்பா போல், ஸ்டாலின் அய்யா 1000 ரூபாய் தருகிறேன் என்று கூறினார்கள், இப்படி மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் புதுமைப் பெண் திட்டம் மூலமாக பயனடைகிறார்கள்!

அடுத்த வீடியோவில், எப்போதாவதுதான் வீட்டில் சாப்பிடுவேன்… காலையில் அம்மா வேலைக்குச் சென்று விடுவார்கள்.. நான் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்… இப்போது பள்ளியிலேயே ஸ்டாலின் தாத்தாவினுடைய காலை உணவு திட்டத்தில் சாப்பிடுகிறேன் என்று, தொலைக்காட்சியில் சிரித்துக் கொண்டே ஒரு குழந்தை பேட்டி கொடுத்தது! அது போல் தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்!

அடுத்து, கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் ஏற்பட்ட இடைவெளியினால், பத்து வரைக்குமான எண்களைக்கூட மறந்துவிட்டு இருந்த குழந்தைகள், இப்போது எண்கள், எழுத்துக்களை நன்றாக வாசிக்கிறார்கள் என்று, தன்னார்வலர் ஒருவர் கூறினார்! அதற்குக் காராணமான இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இதுவரைக்கும் 24 இலட்சத்து 86 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

மற்றொரு கல்லூரி படிக்கும் தம்பி பேசுகிறார்! வேலைக்காக, நாங்கள் கூடுதல் படிப்புகள் படிக்க வேண்டும் என்றால், பயிற்சி மையங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்! ஆனால், இலட்சங்களைச் செலுத்திப் படிக்க வேண்டிய அந்த படிப்புகளை எங்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தில் இலவசமாக கற்றுக் கொடுத்ததால் வேலை கிடைத்திருக்கிறது என்று அந்தத் தம்பி கூறினார். இப்படி இரண்டு ஆண்டுகளில், 28 இலட்சம் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பலன் அடைந்திருக்கிறார்கள்!

அடுத்தது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்! மாற்றுத் திறனாளியான எனக்கு, குறைந்த வருமானம்தான்! ஆனால், வீடு தேடி வந்து சுகர் – பி.பி. பரிசோதனைகள் எடுத்து, மருந்து மாத்திரைகள் கொடுப்பதால் மாதம் ஆயிரம் – இரண்டாயிரம் என்று மிச்சம் ஆகிறது என்று சேலத்தைச் சேர்ந்த சகோதரர் கூறியது போல், தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

கடைசியாக, கும்பக்கோணத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்! மக்களுடன் முதல்வர் திட்டத்தினால், 35 ஆண்டுகளாக முடியாத பட்டா மாற்றம், மூன்றே நாட்களில் முடிந்துவிட்டது என்று நன்றி தெரிவித்தார்! இப்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற, அனைத்துக் குடும்பத்திற்கும் பார்த்து பார்த்து அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக பல திட்டங்களைத் தீட்டி தருபவன்தான், இன்று உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

மாநிலத்தை ஆளும் நாங்கள்தான், முடியாத நிதி நெருக்கடியிலும், இவ்வளவு செய்திருக்கிறோமே, நீங்கள் என்ன என்ன சிறப்புத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு செய்திருக்கிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்டால் - சென்னை – தூத்துக்குடி வெள்ளப் பாதிப்புக்கு ஏன் நிதி தரவில்லை என்று பிரதமரிடம் கேட்டால் – எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் கட்டவில்லை என்று பிரதமரிடம் கேட்டால் – புதிய இரயில்வே திட்டங்கள் எங்கே என்று பிரதமரிடம் கேட்டால் – இங்கு இருக்கின்ற ஒன்றிய அரசு பணிகளில் ஏன் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்று கேட்டால் – எதற்காவது அவரிடம் சரியான பதில் இருக்கிறதா?

அவருடைய தோல்விகளை மறைக்க, மாநில உரிமைகளைப் பறிப்பதை மறைக்க, தமிழ்மொழியைப் புறக்கணித்ததை மறைக்க, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதை மறைக்க, மொத்தத்தில், உண்மையான மக்கள் பிரச்சினைகளை மறைக்க, தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசி, திசைதிருப்புகிறார்!

தேர்தலுக்குத் தேர்தல் நீங்கள் நடத்துகிற கபட நாடகங்களை, இனித் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய மக்களும்கூட நம்ப மாட்டார்கள்! உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்! மாநிலம் முழுவதும் செய்த திட்டங்களை நான் பட்டியலிட்டேன்.

நலத்திட்டங்கள் மட்டுமல்ல, இந்த மாவட்டங்களுக்கு என்று செய்த – செய்து கொண்டிருக்கின்ற – வளர்ச்சித் திட்டங்களையும் சொல்லவா? சிலவற்றை மட்டும் சொல்கிறேன்!

350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சியில் ஒரு மிகப்பெரிய பேருந்து முனையம் மற்றும் கனரக வாகன சரக்கு மையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணப்பாறையில் உணவுப் பூங்கா, நவல்பட்டில் தகவல் தொழில்நுட்ப மையம், பஞ்சப்பூரில் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பார்க், 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனைக்குப் புதிய கட்டடங்கள் ஆகிய பணிகள் வேகமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் பல திட்டங்கள் குறிப்பாக, திருச்சியில் இளைஞர்களுக்காக உலகத்தரத்தில் ஒரு ஒலிம்பிக் அகாடமி, புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் - என்று பட்டியல் நீளமாக இருக்கிறது!

அடுத்து, இங்கு நம்முடைய வேட்பாளர் தம்பி துரை வைகோ அவர்கள் சொன்னதுபோல, நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பற்றியும் கூறவேண்டும். அதிலும் சிலவற்றை தலைப்பு செய்திகளாக சொல்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. அரசு இஷ்டத்திற்கு ஏற்றிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டு ஏழை-எளிய மாணவர்களின் உயிரை பழிவாங்கும் நீட் தேர்வு ஒழிக்கப்படும். மாநிலங்களுடைய உயிர்மூச்சாக இருக்கின்ற நிதி உரிமைக்கு வேட்டு வைக்கும், தற்போதைய ஜி.எஸ்.டி முறை சீர்திருத்தம் செய்யப்படும்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற பேரில் ஜனநாயகத்துக்குச் சவக்குழி தோண்டும் முயற்சி நிறுத்தப்படும். உலகப் பொதுமறையான திருக்குறள், தேசிய நூலாக அறிவிக்கப்படும். ஒன்றிய அரசுப் பணித் தேர்வுகள், ஒன்றிய அலுவலகங்களில் தமிழ் மொழியில் பயின்ற நமது இளைஞர்களுக்கு இடம் உறுதிசெய்யப்படும்.

அதுமட்டுமல்ல, இந்த பகுதி மக்களுக்காக பொன்மலை இரயில்வே பணிமனையை இரயில் பெட்டித் தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்தூர் இரயில் நிலையம் முதல் பெரம்பலூர், அரியலூர் ரயில் நிலையம் வரை, புதிய அகல இரயில் பாதை அமைக்க ஆவன செய்யப்படும்.

நம்முடைய அமைச்சர் தம்பி மகேஷ் அடிக்கடி கோரிக்கை வைக்கும், தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒன்றையும் இங்கு வாக்குறுதியாக கொடுக்க விரும்புகிறேன். அந்த உயர்மட்டச் சாலை அமைக்கப்படுவதோடு அணுகு சாலையும் அமைக்கப்படும். இப்படி, மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த பாடுபடுபவர்கள்தான் நாம்!

ஆனால், தமிழ்நாட்டில் சொல்வதற்கென்று, எதுவுமே இல்லாத ஆட்சியை நடத்தியவர்தான் பிரதமர் நரேந்திர மோடி! அவரால் சாதனைகளை சொல்ல முடியவில்லை! மேடைக்கு மேடை என்ன சொல்கிறார்! பத்தாண்டு நான் ஊழலற்ற அரசாங்கத்தை நடத்தினேன் என்று சொல்கிறார்! பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி, நாம் மட்டுமல்ல நாடு முழுவதும் கேள்வி கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை!

இந்தப் பத்தாண்டு ஆட்சியில், ஊழல்கள் ஒன்றா - இரண்டா! அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான் இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்! கடந்த 5 ஆண்டுகளில் ED – I.T – C.B.I – இப்படிப்பட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளை பா.ஜ.க.வின் கைப்பாவையாகப் பயன்படுத்தி, அவர்களை ரெய்டிற்கு அனுப்புவது, பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள்.

வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை! அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கையில் வந்ததே! பாரத்மாலா திட்ட ஊழல், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்ட ஊழல், சுங்கச்சாவடி கட்டண ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல், ஓய்வூதியத் திட்ட ஊழல், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்ட ஊழல் என்று 7 இலட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டிருக்கிறது!

அந்த அறிக்கை மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, அது பற்றி வாய் திறக்கவில்லை! தேர்தல் பத்திரம் போலவே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார்! அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பேர் வைத்து வசூல் செய்திருக்கிறார்! அது பற்றிய அத்தனை இரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்!

அதேபோல், ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்! இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசலாமா? பா.ஜ.க. ஊழல்களை மறைக்க, நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்திருக்கிறார்கள். என்ன காரணம்? பா.ஜ.க.வின் தோல்வி பயம்தான் ஒரே காரணம்!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்து, 13 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார். சென்ற மாதம் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்கள் கைது செய்யப்படுகிறார். இப்போது அரவிந்த் கெஜ்ரிவால்! அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இல்லையா இது?

தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்து விட்டார்களே - மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரள ஆரம்பித்துவிட்டார்களே என்ற பயத்தில், தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்துகொண்டு வருகிறது, பா.ஜ.க. தலைமை!

தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்கு முன்பாக, நம்முடைய அமைச்சர் பொன்முடியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நான் வந்திருக்கிறேன்.

ஆளுநர் அவராகச் செய்தாரா! முடியாது என்று சொல்லிவிட்டார். நாங்கள் விடுவோமா… தி.மு.க.காரர்கள் நாங்கள். நீதிமன்றத்திற்குச் சென்றோம். உச்சநீதிமன்றத்தில் வாதம் நடந்தது. எப்படிப்பட்ட கண்டனத்தை ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி!

அதற்குப் பிறகு, இன்றைக்கு மாலை 3.30 மணிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் நேரடியாகச் சென்று ராஜ்பவனில் பதவிப் பிரமாணத்தை முடித்துவிட்டு, ஒரு மரியாதைக்கு ஆளுநரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, புறப்படும்போது கூறினேன். இன்றைக்குத்தான் நான் தேர்தல் வேலையைத் தொடங்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினேன். அவர் உடனே, ”BEST OF LUCK” என்று சொல்லி அனுப்பினார்.

”ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது” : திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ராஜ்பவனிலிருந்து தொடங்கியிருக்கின்ற இந்தப் பயணம் குடியரசுத்தலைவர் மாளிகை வரைக்கும் செல்லப்போகிறது என்பது இது ஒரு அடையாளம்.

மக்களுக்கான சட்டங்களை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்துவார். நாம் ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்.

நேற்றும், இன்றைக்கும் போல், வரலாற்றில் வேறு எந்த ஆளுநரையாவது நீதிமன்றம் இப்படி கடுமையான கேள்விகள் கேட்டிருக்கிறதா? அப்படிப்பட்ட கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. மக்களை எதிர்கொள்ள பயப்படும் பா.ஜ.க. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் எதிர்கொள்வது கோழைத்தனம்! கோழைத்தனம்!

உங்களின் இந்த மிரட்டல் உருட்டல் அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது இந்தியா கூட்டணிக்கும் பாஜகவுக்குமான யுத்தம் அல்ல. இது இந்திய நாட்டு மக்களுக்கும் - பாசிச பா.ஜ.க.வுக்குமான யுத்தம்! இந்த யுத்தத்தில் மக்கள்தான் வெற்றி பெறுவார்கள். பாசிச பா.ஜ.க. வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும்.

இந்திய மக்கள் இப்போது இந்தியா கூட்டணியின் பக்கம் அணி திரண்டுவிட்டார்கள்! பிரதமர் அவர்களே! இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி! வெற்றி! வெற்றி! என்று ஜூன் 4-ஆம் தேதி வரவிருக்கும் செய்தி உங்கள் தூக்கத்தைத்தான் தொலைக்கப் போகிறது!

நான் கேட்பது, தமிழ் மீதும் - தமிழ்நாட்டின் மீதும் - தமிழர்களின் மீதும் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? தமிழ்நாட்டுக்கு விரோதமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு, தமிழ்தான் மூத்தமொழி என்று பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கலாமா? சமஸ்கிருத வளர்ச்சிக்கு நீங்க கொடுத்த நிதி எவ்வளவு? தமிழ் வளர்ச்சிக்குக் கொடுத்த நிதி எவ்வளவு? இதை கூச்சமில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து கூறுவாரா அவர்?

நீங்கள் வளர்க்கின்ற வெறுப்புத் தீ என்ன செய்கிறது என்று தெரியுமா? ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், பெங்களூரில் வெடித்த குண்டு தமிழர்கள் வைத்த குண்டு என்று சொல்கிறார். தமிழர்களை வன்முறையாளர்களாக – பயங்கரவாதிகளாக சித்தரிக்கப் பார்க்கிறது பா.ஜ.க.

தமிழ்நாட்டு மக்களை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி பேசலாம் என்பதில்தான், பா.ஜ.க.வை சேர்ந்தவர்களின் எண்ணம் முழுவதும் இருக்கிறது. பா.ஜ.க. மக்களிடமிருந்து சுரண்டுமே தவிர, மக்களுக்கு எதுவுமே தராது! அதனால்தான், மக்கள் இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும்போது, நம்முடைய நிதியில் இருந்தே நாம் தருகிறோம். அதையும் மனச்சாட்சியே இல்லாமல் கொச்சைப்படுத்தி, அதில் ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல்?

தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான நிதியை வரியாக வசூல் செய்கிறீர்கள்! அதிலிருந்து நியாயமான பங்கை ஏன் திருப்பிக் கொடுப்பதில்லை என்றுதானே கேட்கிறோம்! ஒரு ரூபாய் வசூல் செய்துவிட்டு, 29 பைசா மட்டும் திருப்பி கொடுப்பது நியாயமா? முறையா? தருமமா? என்று கேட்கிறோம்!

இதைக் கேட்டால், சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகச் சொல்கிறார்! மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சையாம்! எவ்வளவு ஆணவம்! எவ்வளவு வாய்க் கொழுப்பு! மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… உங்கள் அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்துவீர்களா? பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா? மக்களுக்குக் கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல; அது அவர்களின் உரிமை!

மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது, அரசியலில் இருக்கும் நம்முடைய கடமை! அந்தக் கடமையைத்தான் தி.மு.க. அரசு சரியாக செய்துகொண்டு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்கிறீர்களே… தொழிலதிபர்கள் கூட்டத்தில் சென்று இப்படி பேசுவீர்களா?

ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட வரி கட்டுகிறார்களே மக்கள்… அவர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதி அமைச்சர் பதவி?

பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய இந்த ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது! இப்படிப்பட்ட எதேச்சாதிகார - சர்வாதிகார பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டில் இருக்கிற பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா? எங்காவது கண்டித்து அறிக்கை விடுகிறாரா?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சிறுபான்மையினர் நலன் பேசுகிறார் பழனிசாமி! அவரின் இருண்ட கால ஆட்சியை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டு இருப்பீர்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறார் பழனிசாமி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - கொடநாடு கொலை – கொள்ளை, தற்கொலை – மர்ம மரணங்கள் - பொள்ளாச்சி பாலியல் வன்முறை என்று பழனிசாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட பட்டியலே போடலாம்! ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, பா.ஜ.க.விற்கு பாதம்தாங்கியாக இருந்து, பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குச் செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்று, அதற்கு லாலி பாடியவர் பழனிசாமி!

இப்போது அதே பா.ஜ.க.வின் கதை – திரைக்கதை – வசனம் – டைரக்‌ஷனில் கள்ளக்கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். பழனிசாமி நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்! பா.ஜ.க.வின் பாசிச எண்ணங்களுக்கும் முடிவுரை எழுதப்படும்!

இதெல்லாம் நடப்பதற்கு, நம்முடைய இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க வேண்டும்! அப்போதுதான், நம்முடைய இந்திய நாட்டையும் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் - நாட்டின் பன்முகத் தன்மையையும் – சகோதரத்துவத்தையும் - காப்பாற்ற முடியும்!

இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பீர் என்று உங்களில் ஒருவனாக - உங்களுக்காகவே உழைத்த தலைவர் கலைஞரின் மகனாகக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்…

இதோ… திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, ஈழத் தமிழர்களுக்காகச் சிறை பல கண்ட, திராவிட இயக்கத்தின் போர்வாள், என் ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்களையும் - பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, திருச்சியைத் தீரர்களின் கோட்டையாக உருவாக்கிய உழைப்பின் அடையாளம் என் ஆருயிர் சகோதரர் கே.என்.நேரு அவர்களின் மகன் அருண் நேரு அவர்களையும் – உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன்.

அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, உங்களுடைய குரலாக – உங்களுடைய பிரதிநிதிகளாக - இந்த இரண்டு இளம் சிங்கங்களையும், நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய ஜனநாயகக் கடமை உங்களுக்கு இருக்கிறது.

இந்தியாவைக் காக்கும் வெற்றிப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். புதிய ஆட்சியை ஒன்றியத்தில் அமைப்போம்! ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம்! ஏப்ரல் 19-ஆம் நாள் நீங்கள் அளிக்கின்ற வாக்கு புதிய இந்தியாவை உருவாக்கும் வாக்காக அமையட்டும். திருச்சியில் வெற்றி வரலாறு துவங்கட்டும்! துவங்கட்டும்! துவங்கட்டும்!

banner

Related Stories

Related Stories