மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இன்று சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கடல்போல் திரண்டிருக்கும் திராவிடப் பட்டாளமே! கொள்கை பிடிப்பும், இலட்சிய தாகமும் கொண்ட இலட்சக்கணக்கான தம்பிமார்களான உங்களை வீரபாண்டியார் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஒருசேரப் பார்க்கிறபோது, எனக்கு பெரிய உற்சாகமும், மகிழ்ச்சியும் - ஏன் புத்துணர்ச்சி பிறக்கிறது! தெற்கில் விடியல் பிறந்திருப்பதைப்போல விரைவில், விரைவில் இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது!

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இருபது வயது குறைந்தது போன்று புது தெம்பு வருகிறது! இப்படிப்பட்ட எழுச்சிமிகு – ஏற்றமிகு இளைஞரணி இரண்டாவது மாநாட்டின் தலைவர் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத்தின் ஆற்றல்மிகு அடலேறு தம்பி உதயநிதி அவர்களே! உரையாற்றி அமர்ந்திருக்கும், கழகத்தின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே! கழகத்தின் பொருளாளர் அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே! இளைஞர்களுக்கு இணையாக பணியாற்றி, இளைஞர் அணி மாநாட்டை கம்பீரமாக ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் – ஆயிருர் சகோதரர் கே.என். நேரு அவர்களே! கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி – க.பொன்முடி – ஆ.ராசா – அந்தியூர் செல்வராஜ் அவர்களே! கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியிருக்கும் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாகத் திகழும் – அன்பு தங்கை கனிமொழி அவர்களே! காலை முதல் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி அமர்ந்துள்ள – கொள்கைப் பரப்புச் செயலாளர் – அருமைச் சகோதரர் திருச்சி சிவா உள்ளிட்ட கருத்து போராளிகளே! ஆற்றல்மிகு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களே! தலைமை கழக நிர்வாகிகளே! இளைஞர் அணியின் மாநிலத் துணை செயலாளர்களே! மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களே! சமுதாயத்தின் ஈட்டி முனைகளாக இருக்கும் இளைஞர் அணி தம்பிமார்களே! என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

திராவிட இயக்கம் தோன்றி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது! 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று சென்னை இராபின்சன் பூங்காவில் திரண்டிருந்த அதே கொள்கை உறுதியையும், இலட்சிய வேட்கையையும் இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்களான உங்களிடம் பார்க்கிறபோது, இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! ”அஞ்சாநெஞ்சர்களை அருந்தம்பிகளாகப் பெறும் பேறு பெற்றேனே!” என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா பெருமைப்பட்டதுபோல நான் பெருமைப்படுகிறேன்.

ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்த உணர்வை – உற்சாகத்தை - எழுச்சியை - ஏற்படுத்தி தந்திருக்கும், இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு தம்பி உதயநிதி அவர்களைப் பாராட்டுகிறேன் – வாழ்த்துகிறேன்! “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதுபோல, அவரின் செயல்கள் - கழகப் பணிகள் – மக்கள் தொண்டு அமைந்திருக்கிறது! கழகத்திற்கான பணி, மக்களுக்கான பணி இரண்டிலும் எனக்கு துணையாக மட்டுமல்ல, தூணாக தம்பி உதயநிதி இருக்கிறார்! அந்த உழைப்பை பார்த்துதான் நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழக நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைகிறோம்!

எனக்கு முப்பது வயது இருக்கும்போது தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கினார்கள்! அவர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றியதுபோல என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிக்கொடி கட்டும் கொள்கைப் படையாக இளைஞரணி செயல்பட்டு வருவதை, இந்த சேலம் மாநாடு, நாட்டுக்கே சொல்லிவிட்டது!

“எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது” என்ற நம்பிக்கை ஊட்டும் மாநாடாக இந்த சேலம் இளைஞரணி மாநாடு அமைந்துவிட்டது! இவ்வாறு என்னை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வைத்த இளைஞரணிச் செயலாளர் - மாநில துணைச் செயலாளர்கள் – மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் என்று ஒட்டுமொத்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் - நன்றியும்!

அடுத்து முக்கியமாக, இந்த மாநாடு இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறக் காரணமானவர் – நம்முடைய முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு! ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், “மாநாடு என்றால் நேரு; நேரு என்றால் மாநாடு!” மாநாடு நடக்கும் இடத்தில் நேரு இருப்பார். நேரு இருக்கும் இடத்தில் மாநாடு நடக்கும்! ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று, எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அப்படிப்பட்ட நேரு அவர்களுக்கும், அவரோடு தோளோடு தோள்நின்று பணியாற்றிய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்களான ஆற்றல்மிகு ராஜேந்திரன், சிவலிங்கம், செல்வகணபதி ஆகியோருக்கும் சேலம் மாவட்டக் கழகங்களின் அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்!

ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இளைஞரணி, என் தாய்வீடு! என்னை வளர்த்த - என்னை உருவாக்கிய இடம்! நான் இன்று கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் தலைவராக கடமையாற்றி வருவதற்கும் - தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் தொண்டாற்றி வருவதற்கும் - அடித்தளம் இட்டது இளைஞரணி! அதனால் எனக்கு எப்போதும் தனிப் பாசமும் உரிமையும் உண்டு.

1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி தொடங்கப்பட்டது. அன்று முதல், நகரம் - கிராமம் எங்கும் கழகக் கொடியை ஏற்றுவதும் - பாசறைக் கூட்டங்கள் நடத்துவதும் என்று தமிழ்நாட்டையே நான் வலம் வந்தேன். மாநாடுகளில் நடத்தப்படும் பெரும் பேரணிகள் எல்லாம் எங்களின் வெண்சீருடை அணிவகுப்பால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது. போராட்டக் களங்களில் இளைஞர்கள் அதிகமாகப் பங்கெடுத்தார்கள். தேர்தல் பரப்புரைகளில் இளைஞர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள்.

1980-ஆம் ஆண்டு முதல் கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சியது, இளைஞரணி! உழைப்பு - உழைப்பு – உழைப்பு என்று தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள். அந்த உழைப்புக்கு இளைஞரணி தம்பிமார்கள் என்னை உற்சாகம் ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். எப்போதும் நான் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இன்னொரு முக்கியக் காரணம் - என்னைச் சுற்றி இளைஞர்களே இருந்தார்கள்! இளைஞர்களால் உருவான போர்க்கருவிதான் இந்த ஸ்டாலின்! நான் மட்டும் அல்ல, ஏராளமான தளபதிகளை உருவாக்கிய ஈடு இணையற்ற அணிதான் இளைஞரணி! எங்களால் உருவாக்கப்பட்ட பலரும் எம்.எல்.ஏ.,க்களாக, எம்.பி.,க்களாக, அமைச்சர்களாக, மாவட்டச் செயலாளர்களாக உயர்ந்தார்கள். நாளை அத்தகைய பொறுப்புகளுக்கு நீங்களும் வரலாம். வருவீர்கள்! வர வேண்டும்! அந்த உயரத்திற்கு உங்கள் உழைப்பால் உங்களை நீங்களே தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இளைஞரணி தம்பிமார்களே! நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பும் கொள்கை உணவு எது தெரியுமா?

பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட நம்முடைய தமிழினத்தின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள். நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட திராவிட இயக்கத்தின் கொள்கையையும் - அதற்காக போராடிய தலைவர்களின் வரலாற்றையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்தபோது இந்த தாய்த்தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சாதனைகள் – தீட்டிய திட்டங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிக் கொடுத்த சிற்பி நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் என்று உங்களுக்குப் புரியும்!

அதுமட்டுமல்ல, தமிழினத்திற்கு எதிரான நாசகார சக்திகள் இதுவரை எந்த வகையில் எல்லாம், நம்முடைய தமிழினத்தின் மொழியையும், பண்பாட்டையும் நாசம் செய்தது என்றும் உங்களுக்குப் புரியும்!

இந்தக் கொள்கை உணவுதான் – கொள்கை உணர்வூட்டும்! உங்களைச் செழுமைப்படுத்தும்! உங்கள் மூலமாகக் கழகத்தையும் – தமிழ்நாட்டையும் வளர்க்கும்.

இன்றைக்கு காலை முதல் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட பலரும் – பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். இந்தத் தலைப்புகள்தான் உங்களுக்கான பாடப்புத்தகங்கள். இந்தத் தலைப்புகள் கொண்ட புத்தகத்தை அந்த பேச்சாளர்களை கொண்டே எழுதவைத்து, உதயநிதி உங்களுக்கு உருவாக்கி தருவார்!

ஏன் என்றால், ஒரு காலத்தில் கழக மாநாடுகள் 4 நாட்கள் நடக்கும். அப்போது எல்லாவற்றையும் விரிவாகப் பேச முடியும். ஆனால் இப்போது, ஒருநாள் மாநாடு ஆகிவிட்டது. இன்னும் சொன்னால், ஒரு காலத்தில் மாநாடு நடத்தினால் மட்டும்தான் இதை எல்லாம் சொல்ல முடியும்.

ஆனால், இப்போது மாநாடு நடத்திச் சொல்ல வேண்டியதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை சென்று சேரும் அளவிற்கு நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நம்முடைய கொள்கைப் பரப்புரையைத் தொய்வில்லாமல் நீங்கள் செய்ய வேண்டும். கொள்கை உரம்தான் உங்களுக்கான உரம்! கொள்கை உரம்தான் கழகத்திற்கான உரம்! 75 ஆண்டுகளாகியும் கழகம் இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறது என்றால், அதற்கு நம்முடைய கொள்கை உரம்தான் காரணம்.

ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சமூகநீதி – சமத்துவம் - சுயமரியாதை – சகோதரத்துவம் – மாநில உரிமைகள் – மொழிப்பற்று – இனப்பற்று – பெண்ணுரிமை – ஒடுக்கப்பட்டோர் நலன் – எல்லார்க்கும் எல்லாம் என்கிற அடித்தளத்தில் உருவாக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு சீர்திருத்த இயக்கத்தின் கையில் ஆட்சி நடத்தும் வாய்ப்பு வருமானால் என்னென்ன செய்ய முடியுமோ – அவை அத்தனையையும் செய்து காட்டியிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் வளத்திற்கும், நலத்திற்கும் காரணமானவர்கள் நாம். இதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்தை உணர்ந்து, தடுப்பதற்காகத்தான் இளைஞர் அணி மாநாட்டையே, மாநில உரிமை மீட்பு மாநாடாக நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நாம் பெயர் சூட்டிய நம்முடைய தமிழ்நிலத்துக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. மொழியை அழித்து – தமிழ்ப் பண்பாட்டை அழித்து – மாநில மதிப்பை அழித்து – அதன் மூலமாக தமிழினத்தை அழித்து, நம்மை அடையாளமற்றவர்களாக ஆக்குவதற்குப் பாசிச பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அ.தி.மு.க. அவர்கள் அழிவுவேலைகள் அனைத்தையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. இப்போது அவர்கள் ஆடும் ’உள்ளே-வெளியே’ ஆட்டம், பா.ஜ.க. போட்டுக் கொடுத்த நாடகம்! பழனிசாமியின் பகல் வேஷத்தை அ.தி.மு.க. தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை, அதுதான் உண்மை!

பா.ஜ.க. - அ.தி.மு.க. இவர்கள் இரண்டு பேரின் படுபாதக செயல்களை தடுப்பதுதான் நம் முன்னால் இருக்கும் முக்கியக் கடமை.

மாநில சுயாட்சிக் கோரிக்கையை பொறுத்தவரை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை!

மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ - அதை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக் கொண்டால் போதும்!

இதற்காகத்தான் தலைவர் கலைஞர் இராசமன்னார் குழுவை 1969-ஆம் ஆண்டு அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானமாகவும் நிறைவேற்றினார். 'மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்பது கலைஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த முழக்கம்!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாற போகிறது! அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சியானது – மாநில உரிமைகள் வழங்கும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும்!

தி.மு.க. அரசை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசு உரிமைகள் என்று நான் சொல்லவில்லை! மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் – ஏன், பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று, எல்லா மாநிலங்களுக்குமான உரிமையாகத்தான் கேட்கிறோம்! இதை இங்கு மட்டுமல்ல, அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சிக்கு வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே இதை சொன்னவன், இந்த ஸ்டாலின்.

இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர், ஒருகாலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்.

மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைகளுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சட்டங்களை இயற்றுகிறது. எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனைச் செய்வது இல்லை. எதற்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்பது இல்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என்று இவ்வாறு மாநிலங்களின் கல்வி – நிதி அதிகாரத்தை முற்றிலுமாக பறித்துவிட்டார்கள். ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.

மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட நமக்காக உதவிகள் செய்வது இல்லை. சமீபத்தில் வந்த பேரிடருக்கு, 37 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் ஒரு பைசா வரவில்லை. பிரதமர் வந்தார் - தருவேன் என்றார்; நிதி அமைச்சர் வந்தார் - தருவேன் என்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார் – தருவேன் என்றார்; உள்துறை அமைச்சரை நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் எம்.பி.க்கள் பார்த்தபோது அவரும் தருவேன் என்றார். ஆனால் இப்போது வரைக்கும் எதுவும் வரவில்லை!

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண்! பேரறிஞர் அண்ணாவின் மண்! தலைவர் கலைஞரின் மண்!

மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இரண்டு முறை பிரதமர் ஆகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவர் பிரதமராக வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே – இந்தியாவும் செயல்பட போகிறது.

ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், என்ன செய்கிறார்கள்? கட்சிகளை உடைப்பது! எம்.எல்.ஏ.க்களை இழுப்பது! ஆளுநர்கள் மூலமாகக் குறுக்கு வழியில் ஆட்சியை நடத்த பார்ப்பது! சொல்லப்போனால், பா.ஜ.க.விற்கு வேட்டு வைக்க வேற யாரும் வேண்டாம். ஆளுநர்களே போதும்! அவர்களே அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடித்திடுவார்கள்!

நாம் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக்கட்சி ஆட்சியாக இருக்காது! சர்வாதிகார ஆட்சியாகவும் இருக்காது! கூட்டாட்சியாக இருக்கும்! மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்! தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் ஆட்சியாக இருக்கும்! இந்தியாவை அனைத்து வகையிலும் முன்னேற்றும் ஆட்சியாக இருக்கும்! அதற்கான பணி நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.

ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தேர்தல் பணி தொடக்கமாக, சேலம் மாநாட்டுக்கு முன்பே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவும் - தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி தலைமையில் ஒரு குழுவும் - தேர்தல் பணிகளை முழுமையாக கண்காணித்து ஒருங்கிணைக்க நேரு, வேலு, பாரதி, தங்கம் தென்னரசு, தம்பி உதயநிதி என ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஐவர் குழு 40 தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள நிர்வாகிகளை அழைத்து வெற்றிக்கான வியூகத்தைத் தருவார்கள். அறிக்கைத் தயாரிக்கும் குழு முக்கிய நகரங்களுக்கு வந்து மக்கள் கருத்துகளைக் கேட்பார்கள்.

கூட்டணியைப் பற்றியும் - யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி!

பல்லாயிரக்கணக்கான வாக்குச் சாவடி முகவர்கள் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான நிர்வாகிகள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்று நாளை முதல் புறப்படுங்கள்.

வருகின்ற மூன்று மாத காலம் நீங்கள் உழைக்கும் உழைப்பில்தான் இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டு எதிர்காலம் அடங்கி இருக்கிறது. உங்கள் உழைப்பை முழுமையாக வழங்குங்கள்! நம் அனைவரின் ஒற்றை நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது! இந்தியாவை வெல்வது! இது தான் சேலம் மண்ணில் நின்று இந்த நாட்டுக்கு நாம் சொல்லும் செய்தி!

என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே… உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே எனது மகன்கள்தான். உங்கள் ஒவ்வொருவரையும் எனது மகனாக – கழகத்தின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் இங்கிருந்தபடியே அரவணைத்து அணைத்துக் கொள்கிறேன். உங்களால் நான் இப்போது லட்சம் பேரின் சக்தியைப் பெற்றுவிட்டேன். சேலத்தில் சூளுரைப்போம்! சேர்ந்து எழுவோம்! இந்தியா கூட்டணி வெல்லட்டும்! அதனை காலம் சொல்லட்டும்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

நன்றி! வணக்கம்!" என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories