மு.க.ஸ்டாலின்

இலங்கை பிரதமரிடம் நீங்கள் பேச வேண்டியது இதுதான்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பை உறுதி செய்திட இந்திய பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை பிரதமரிடம் நீங்கள் பேச வேண்டியது இதுதான்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கை அதிபர், இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் இலங்கை அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்திட வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19-7-2023) கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அதிபர், 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக புதுதில்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பூகோளரீதியான நெருக்கம் மற்றும் வரலாற்று, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி. அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் இந்தியப் பிரதமர் அவர்கள் பேசி, தீர்வு காணுமாறு கோரியுள்ளார்.

1. கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது:

​​கச்சத்தீவு, வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருவதையும், இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒன்றிய அரசு ஒப்பந்தம் மூலம், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அடுத்த நாளான 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பிரதமரிடம் நீங்கள் பேச வேண்டியது இதுதான்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைக் கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசும் மறுபரிசீலனை செய்து திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியதை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், "தமிழ்நாட்டு மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்" கச்சத்தீவை மீட்டுத் தருமாறு 22.9.2006 அன்று அப்போதைய பிரதமருக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் மீண்டும் கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டுள்ளார்.

​​ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், "கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், நமது கடலோர சமூகங்களுக்கு கணிசமான பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவித்ததாகவும், 1974 ஜூன் 26, 28 தேதிகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தமும், 1976 மார்ச் 23 ஆம் தேதியிட்ட ஒப்பந்தமும், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்ப்பது தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என்றும், செல்லாதவை என்றும் அறிவிக்கக் கோரி 2013 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக தான் பொறுப்பேற்றதற்குப் பிறகு, 2022-ம் ஆண்டு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் எனத் தான் வைத்த வேண்டுகோளை நினைவுகூர்ந்த முதலமைச்சர் அவர்கள், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும், அத்துமீறி நுழைவதாக இலங்கைக் கடற்படையினர் குற்றஞ்சாட்டிக் கைது செய்து, துன்புறுத்தும் சூழல் உள்ளதாகவும், பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டுமென்றும், பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிடவும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமரிடம் நீங்கள் பேச வேண்டியது இதுதான்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

1 (i) தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும்:

இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவதாக ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், நமது மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், ஒன்றிய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய 48 தாக்குதல் சம்பவங்களில், 619 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 83 மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களும் வருவாய் இழப்பினால் பாதிக்கப்பட்டதாகவும், ஒன்றிய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு திரும்பியுள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல், 67 மீன்பிடிப் படகுகள் இலங்கைவசம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், சமீபத்தில் ஜூலை 9, 2023 அன்று 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதே காலகட்டத்தில், 38 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினராலும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களாலும் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவிகள், மீன்பிடி உபகரணங்கள், பேட்டரி மற்றும் எஞ்சின் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தை வருகை தரும் இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும்முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 (ii). பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்த பிரச்னைகள்:

2018 ஆம் ஆண்டுக்கு முன்னர், இரு தரப்பிலும் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு, தனது மீன்வள சட்டத்தில் திருத்தம் செய்த காரணத்தினால், இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள்வசம் நல்ல நிலையில் உள்ள நமது மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை மீட்டு, தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமரிடம் நீங்கள் பேச வேண்டியது இதுதான்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி, தங்கள் வணிகத்திற்கு முக்கியமானதும், தங்கள் குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாகவும் விளங்கும் மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இல்லாமல், இந்தப் படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்படுவதால், மீனவர்களுக்குக் கடுமையான வாழ்வாதார இழப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடிக்கும் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டு, இலங்கை அரசு உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்குவதைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை தாம் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 (iii). கூட்டு பணிக்குழு:

மீனவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டு அதிகாரிகளையும் உள்ளடக்கிய மறுசீரமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) 2016 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர் அவர்கள், இதுவரை, ஐந்து சுற்று கூட்டு செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், கடைசியாக மார்ச் 2022 இல் இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றதாகவும், இருப்பினும், இந்தப் பிரச்சினைக்கு இதுநாள்வரை ஒரு சுமூகமான தீர்வு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு, உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்வதன் மூலம், மீனவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும், பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும், சுமூகமான மீன்பிடி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் இயலும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2. இலங்கையில் தமிழர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல்:

1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், எங்களது கட்சியும் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியமாகும் என்றும் இந்த நோக்கத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை, இந்தியப் பிரதமர் அவர்கள் வலியுறுத்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் பிரதமர் அவர்களின் தலையீடும், ஆதரவும், நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும், இலங்கையில் உள்ள தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இதன்மூலம் நமது மீனவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், இலங்கையுடனான நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவுகளை மேம்படுத்திடவும் இயலும் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories