இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா என மாநில அரசு கொண்டு வந்த 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். மேலும் ஆளுநர் போல் நடந்து கொள்ளாமல் தனது சனாதன கருத்துக்களைப் பொதுவெளியில் பேசி தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் போன்று நடந்து கொண்டு வருகிறார்.
அண்மையில் கூட தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியானது என ஆளுநர் பேசியதற்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. மேலும் ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்க.. தமிழ்நாடு வாழ்க என முழுக்கமிட்டனர்.
இருப்பினும் ஆளுநர் தொடர்ந்து தனது உரையை வாசித்துக் கொண்டே இருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு ஆளுநருக்காக தாயர் செய்து கொடுத்த உரையில் 65வது அம்சமாக இடம் பெற்று இருந்த "சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அரசு வழங்கி வருகின்றது" என இருந்த பத்தியை ஆளுநர் வாசிக்காமல் வேண்டும் என்றே தவிர்த்தார். பின்னர் தனது உரையை முடித்துக் கொண்டு நன்றி தெரிவித்து தனது நாற்காலியில் அமர்ந்தார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு அரசால் அச்சடித்துக் கொடுத்த முழு உரையையும் படித்து முடித்தார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை அவையில் முன்மொழித்தார்.
அந்த தீர்மானத்தில், நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.
ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன் என தெரிவித்தார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நாற்காலியில் இருந்து எழுந்து அவசர அவசர அவையில் இருந்து வெளியேறினார். அப்போது அவையில் மீண்டும் தமிழ்நாடு வாழ்க.. தமிழ்நாடு வாழ்க என சட்டமன்ற உறுப்பினர்கள் முழங்கினர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தையும் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மரபை மீறி நடந்து கொண்ட ஆளுநருக்கு அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாது தமிழ்நாட்டு மக்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக எதிர்க்கட்சிகளே இது போன்று கொள்கை சார்ந்து வெளிநடப்பு செய்யும் நிலையில், சுதந்திரம் அடைந்து 70 வருட சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேசிய கீதத்தையும் ஆளுநர் புறக்கணித்துள்ளது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தி.மு.க அரசின் துணிவு என்ன என்பதையும் தலைவர் கலைஞரின் வாரிசு என்ன செய்யும் என்பதையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திக் காட்டிவிட்டார் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.