மு.க.ஸ்டாலின்

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எம்.ஜி.ஆர் அவர்களோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

"'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை படத்தில் மட்டும் பார்த்தவன் அல்ல நான், தூரத்திலிருந்து பார்த்தவன் அல்ல நான், அவரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. இதே சத்யா ஸ்டுடியோவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். சென்னை, சேத்துப்பட்டு கிறித்துவக் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்கு அடிக்கடி ஸ்கூல் டே நடத்துவோம், அப்போது பல இடங்களுக்குச் சென்று donation வாங்குவோம். அப்போது நான் முதலமைச்சரின் மகனாகவே இருந்தேன். அதனால் இவனிடத்தில் நன்கொடை சீட்டு கொடுத்தால் அதிகமாக விற்றுக் கொடுப்பான் என்று பள்ளியில் எனக்கு விடுப்பும் கொடுத்துவிடுவார்கள். உடனே நான் புறப்பட்டு எங்கு வருவேன் என்றால், முதலில் அந்த நன்கொடை சீட்டை எடுத்துக் கொண்டு இந்த சத்யா ஸ்டுடியோவுக்குத் தான் வருவேன். ஷுட்டிங்கில் இருப்பார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், பத்மநாபன் தான் அப்போது மேனேஜர், நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவர்தான் நான் அவர் நான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்-ஐ பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஷுட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது இடையில் அழைத்துக் கொண்டு போவார். 250 ரூபாய் டிக்கெட் வாங்கிவிடுவார், அதுதான் அப்போது இருப்பவைகளிலெல்லாம் costly. ஆக, அப்போது அளவுகடந்த பாசத்தையும், அன்பையும் கொண்டவர் நம்முடைய எம்.ஜி.ஆர் அவர்கள்.

என்னுடைய பாட்டி, தலைவர் கலைஞர் அவர்களுடைய அன்னை அஞ்சுகம் அவர்களிடம் ரொம்ப பாசமாக இருப்பார், 'அம்மா' 'அம்மா' என்றுதான் அழைப்பார். அடிக்கடி கோபாலபுரத்திற்கு வருகிறபோதெல்லாம் அன்போடு பேசி எல்லோரிடத்திலும் பாசத்தோடு பழகுவார்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒருநாள் அவர் வந்தபோது, அவரை 'சார்' என்று ஒருமுறை சொல்லிவிட்டேன். உடனே தலைவரிடத்தில் ஒரு புகார் செய்தார், உங்கள் பிள்ளை என்னைப் பார்த்து 'சார்' என்று சொல்கிறான் என்று சொல்லிவிட்டார். அதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றால், தியேட்டரில் வரிசையில் நின்று, முதல் ஆள், முதல் டிக்கெட் நான்தான் சென்று வாங்குவேன். அதனால் அவர் படம் ரிலீஸ் ஆனவுடன் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு தொலைபேசி செய்து என்னை அழைத்து, படம் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பார். நான் வெளிப்படையாக இது இப்படி இருந்தது, இது அப்படி இருந்தது என்று நான் சொல்வேன். நீங்கள் இந்த சீனில் சூப்பராக நடித்தீர்கள் என்றெல்லாம் சொல்வேன். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்.

கோபாலபுரத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பு உருவாக்கியபோது, பல கூட்ட நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். அந்த கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறபோது எல்லாம் ஷுட்டிங்கிலிருந்து மேக்-அப்புடன் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதற்குப் பிறகு 1971-ஆம் ஆண்டு 'முரசே முழங்கு' என்று ஒரு நாடகம், இங்கே பிரசாத் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், நாடகத்தில் ஓமப்பொடி பிரசாத் என்றுதான் அவரை அழைப்போம், அதில் ஓமப்பொடி என்று அவருக்குப் பெயர். அவர் என்னோடு சேர்ந்து நடித்த 40 நாடகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1971-ஆம் ஆண்டு தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதன் முதல் அரங்கேற்றம் சைதாப்பேட்டை தேரடி திடல். யார் தலைமை, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமை. நாடகம் தெருவில் தான் போடுவோம், கொட்டாய் எல்லாம் கிடையாது. தெருவில் போட்டிருக்கிறோம், மக்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். முன்வரிசையில் எம்.ஜி.ஆர் அவர்களை உட்கார வைப்பதற்காக சோபா செட் போட்டு வைத்திருக்கிறோம். அவர் வந்தார், முதலில் அதை எடு என்றார். எடுத்துவிட்டோம். அப்புறம் தரையில் உட்கார்ந்து நாடகத்தை முழுவதுமாக பார்த்து என்னைப் பாராட்டி சென்றவர் தான் நம்முடைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். எதற்காக என்றால், மற்றவர்களுக்கு மறைக்கக்கூடாது என்ற அந்த நினைப்புடன் கீழே உட்கார்ந்து பார்த்தார். நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்.

அதே நாடகத்தின் நிறைவு விழா திருவல்லிக்கேணியில் இருந்த எம்.கே.டி.கலா மண்டபத்தில் கலைஞர் அவர்களுடைய தலைமையில் எம்.ஜி.ஆர் அவர்களுடைய முன்னிலையில் நடைபெற்றது. அந்த நாடகத்திற்கு கலைஞர் தான் எங்களுக்கு எல்லாம் மோதிரம் போட்டார். எம்.ஜி.ஆர் அவர்கள் எங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் கொடுத்தார். அப்போது கலைஞர் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்லி, நான் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறான், ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான், படிக்கவே மாட்டேன் என்கிறான், அவனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எம்.ஜி.ஆர் அவர்கள் பேசுகிறபோது சொன்னார். “நீ நடிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் உன் அப்பாவுக்கு ஒரு கவலை, உன் அப்பாவுக்கு இல்லாத அந்தக் கல்வி உனக்கு வந்தாக வேண்டும், அதனால் நீ நன்றாகப் படி, பெரியப்பா என்கிற முறையில் சொல்கிறேன், நீ படிக்க வேண்டும்” என்று எனக்கு புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

'உனது பெயரே ஸ்டாலின். பெயரிலேயே புரட்சி தோன்றி விடுகிறது' என்று என்னை உற்சாகப்படுத்தினார். 'கலைஞரின் மகன் கலைஞனாகத்தான் இருப்பான்' என்று என்னை உச்சிமுகர்ந்து பாராட்டினார், அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இந்தக் கல்லூரியில் நடக்கக்கூடிய இந்த விழாவில் கலந்து கொண்டு நான் இதை பெருமையோடு சொல்வதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, நீங்கள் என்னுடைய வாழ்க்கை வரலாறை 'உங்களில் ஒருவன்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அதில் முதல் பாகத்தில் இதைப் பற்றியெல்லாம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். ஏதோ இந்த நிகழ்ச்சியில் வந்து சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இதையெல்லாம் நான் பதிவு செய்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன்.

ஆகவே, இந்த விழாவில் கலந்து கொள்வதில் என்னுடைய கடமையாக மட்டுமல்ல, உரிமையாகவே நினைத்து இந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது நூற்றாண்டு விழா காணும் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர். எத்தனையோ தனித்திறமைகளைப் பெற்றிருந்தவர் அம்மையார் ஜானகி அவர்கள். இதை அவருடைய பெயரில் இருக்கக்கூடிய இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

* பரதநாட்டியம்

* மோகினியாட்டம்

* குச்சுப்புடி

* மணிப்பூரி

* கதக் ஆகிய கலைகளை மட்டுமல்ல,

* சிலம்பம் சுற்றுவதிலும், கத்திச் சண்டை போடுவதையும் கூட அந்தக் காலத்தில் முறையாக பயின்றிருக்கக்கூடியவர் அம்மையார் ஜானகி அவர்கள். தமிழ்நாடு முழுவதும் நாட்டிய நாடகங்களை நடத்தி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

* தமிழ்

* தெலுங்கு

* மலையாளம்

* கன்னடம்

* மராத்தி

* ஆங்கிலம்

- என ஆறுமொழிகளையும் அறிந்தவர்தான் அம்மையார் ஜானகி அவர்கள். மிகச்சிறந்த பாடகியாகவும் இருந்திருக்கிறார், இரண்டு பாடல்களை படத்தில் அவர் பாடி இருக்கிறார். மக்கள் திலகத்தைப் போல, கொடைத்தன்மையிலும் அதை அப்படியே பின்பற்றியவர் அவர். இத்தகைய பல்துறை ஆற்றல் பெற்றிருக்கக்கூடியவருக்கு தான் இன்றைக்கு விழா நடந்து கொண்டிருக்கிறது.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்கியிருக்கிறார். அப்போதெல்லாம் பெண் மேக்-அப் மேன் கிடையாது, ஆண் மேக்-அப் மேன்தான். அதனால், அவரே மேக்-அப் போட்டுக் கொள்வார். ஆக, தனக்காக மேக்-அப் போட்டுக்கொண்டு நடித்தவர் அவர். 31 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக அவர் விளங்கியிருக்கிறார் என்பதற்கு அவர் ஆற்றியிருக்கக்கூடிய அந்தப் பணிகளெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக – அம்மையார் ஜானகி அவர்கள் கதாநாயகியாக நடித்த முதல் படம் 'மருதநாட்டு இளவரசி'. அதற்கு கதை-வசனம் எழுதியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், மூன்று முதலமைச்சர்கள் பங்கெடுத்த படம் எது என்று கேட்டால் 'மருதநாட்டு இளவரசி' தான். எம்.ஜி.ஆர்., அம்மையார் ஜானகி, தலைவர் கலைஞர், மூன்று பேரும் பங்கெடுத்த வரலாறு. அந்தப் படப்பிடிப்பின்போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். அவர்களும் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த முதல் படத்தை சொன்னேன். கடைசிப் படம் என்ன தெரியுமா? 'நாம்'. இதற்கு கதை-வசனம் யார் என்று கேட்டால், அதுவும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதனால்தான், 'நாம்' பிரிக்க முடியாதவர்களாக இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். அதை உணர்த்தக்கூடிய வகையில்தான் லதா ராஜேந்திரன் அவர்களும் - குமார் ராஜேந்திரன் அவர்களும் என்னை இந்த விழாவிற்கு அழைத்துள்ளனர்.

“என்னுடைய ஒரே வாரிசு ஜானகி மட்டும்தான்” என்று உயில் எழுதி வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். மனைவி என்ற அடிப்படையில் மட்டுமல்ல – திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் பக்கபலமாக அவருக்கு இருந்தவர் ஜானகி அம்மையார் அவர்கள். மக்கள் திலகம் அவர்களால் உருவாக்கப்பட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் குழந்தைகள் இல்லத்தை சிறப்பாக நடத்தியவர் மட்டுமல்ல - இந்த கல்லூரியையும் தொடங்கியவர் அம்மையார் அவர்கள்.

1991 முதல் 1995 வரை, இதற்கான அனுமதியை அவரால் பெற முடியாமல் இருந்தது, அது என்ன சூழ்நிலை, எப்படி என்பதையெல்லாம் நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் கல்விக்காக, கருணை வடிவான ஜானகி அம்மையார் கேட்டார் என்பதற்காக தலைவர் கலைஞ்ர் அவர்கள் உடனடியாக அனுமதி வழங்கினார்கள். அந்த அந்த நன்றியின் அடையாளமாகத்தான் நீங்களும் என்னை அழைத்திருக்கிறீர்கள் என்று நான் உளமாற நம்புகிறேன்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நான் இங்கு வருவது முதல் முறையல்ல. வரவேற்புரை ஆற்றுகிறபோது சொன்னார், ஏற்கனவே நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, இங்கே ஆண்டுவிழா நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக வருகை தந்திருக்கிறேன். முதலமைச்சர் வருகிறார் என்றால், கோரிக்கை இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த அடிப்படையில், எனக்கு ஒரு கடிதம் லதா ராஜேந்திரன் அவர்களால் தரப்பட்டிருக்கிறது. அரசின் எண்ணம் எதுவோ, அதே நோக்கம் கொண்டதாக இந்தக் கோரிக்கைகள் அமைந்திருப்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சைகை மொழியை – பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் துறையை முதலமைச்சர் என்கிற முறையில் நான் தான் கையில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் லதா ராஜேந்திரன் அவர்களுடைய கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியோடு தெரிவித்துக் கொண்டு,

* டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

* கலைவாணர், ராஜா சாண்டோ என்கிற பெயரில் விருதுகளை வழங்கியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

* அதேபோல், எம்.ஜி.ஆர் பெயரில் விருதுகளை வழங்கி அறிவித்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

* பராமரிப்பு இல்லாமல் இருந்த எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நவீனமாகக் கட்டியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

அந்த நட்பின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழா நடைபெற்று வருகிறது.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது - "கிரீடத்தை தலையில் சூட்டிவிட்டு, தலையை வெட்டியது போல இருக்கிறது என்று எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்துவிட்டு, ஜானகி அம்மையாரின் ஆட்சியைக் கலைத்தார்கள்" என்று அன்றைக்கு கண்டித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதையும் மறந்துவிடக்கூடாது.

எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்தபோது, அண்ணா சாலையில் இருந்த தலைவர் கலைஞர் சிலை உடைக்கப்பட்டது. உடனடியாக அம்மையார் ஜானகி அவர்கள் கலைஞருக்கு ஃபோன் செய்து வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவித்தது மட்டுமல்ல, “அதை நானே பொறுப்பேற்று கட்டித் தருகிறேன்” என்று சொன்னார். அந்த நல்ல உள்ளத்தை நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன்.

திராவிட இயக்கக் கொள்கைகள் மீதும் – தலைவர் கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்ட அம்மையார் அவர்கள், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் காரணமாக வளர்த்தெடுக்கப்பட்டதே இந்த நவீன தமிழ்நாடு!

இந்த அரங்கில், இத்தனை பெண்கள் குழுமி இருக்கிறீர்கள் – படிக்க வந்திருக்கிறீர்கள், இந்தக் காட்சியை, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் – 100 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க முடிந்ததா என்றால் பார்க்க முடியவில்லை. இப்போது பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட இயக்கம் தான். அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் கல்வியில், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக உழைத்த இயக்கம் திராவிட இயக்கம்.

"என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதனுடைய அடிப்படை இலட்சியங்களின் மீது எம்.ஜி.ஆர் அவர்களும், ஜானகி அவர்களும் பற்று கொண்டு செயல்பட்டு வந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனி இயக்கம் கண்டாலும், தனது கொள்கையில், அண்ணாயிசத்தை அவர்கள் கட்டிக்காத்தார்கள்.

அண்ணாயிசம் என்று சொன்னால், 'சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பதுதான் அண்ணாயிசம்' என்று அவரே வரையறுத்து சொல்லியிருக்கிறார். இத்தகைய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது. அதனை நினைவூட்டக்கூடிய வகையில்தான் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாகத் தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், ஜானகி அம்மையார் அவர்களுக்கும் நாம் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும், அதுதான் நம்முடைய நன்றிக்கடனாக இருக்கும்.

நாளை நமதே! நாளை நமதே! என்ற உணர்வோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி. வணக்கம்." எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories