மு.க.ஸ்டாலின்

“அதிமுகவால் இனி ஆட்சிக்கும் வர முடியாது; பாஜகவின் திட்டமும் பலிக்காது” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

“திராவிட மண்ணான தமிழ்நாட்டில் இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது; அ.தி.மு.க. மூலமாக உள்ளே நுழைந்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் திட்டமும் பலிக்காது”

“அதிமுகவால் இனி ஆட்சிக்கும் வர முடியாது; பாஜகவின் திட்டமும் பலிக்காது” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று (13.3.2021) மாலை இந்தியா டுடே கருத்தரங்கு நிகழ்ச்சியில் (India Today Conclave South 2021) பங்கேற்று சிறப்புரையாற்றியதுடன், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா டுடேவின் கான்க்லேவ் நிகழ்ச்சி நிறைவடையும் நேரத்தில், அதில் நானும் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு சற்று களைப்பாக வந்திருக்கிறேன். காரணம் என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் பணிகளில் முழுமையாக நான் ஈடுபட்டிருக்கும் காரணத்தால் - கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசுவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதுவும் மெகா கூட்டணியாக அமைந்திருக்கும் கட்சிகளுடன் நாங்கள் கலந்து பேசி -அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு. அதையும் வெற்றிகரமாக முடித்து நேற்றைய தினம் அதனை வெளியிட்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து இன்றைக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட பலருக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியாத காரணத்தால், அவர்களை அழைத்து ஊக்கப்படுத்தும் வகையில், சமாதானம் செய்யும் பணியினையும் நிறைவேற்றி வருகிறேன். இடையிலே, இந்த இந்தியா டுடேவின் கான்க்லேவ் நிகழ்ச்சியில், நிறைவடையும் நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

“அதிமுகவால் இனி ஆட்சிக்கும் வர முடியாது; பாஜகவின் திட்டமும் பலிக்காது” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

"இந்தியா டுடே" எனக்கு வழங்கிய விருது!

இந்தியா டுடே-வை என்னால் நிச்சயமாக மறக்க முடியாது. காரணம் என்னவென்றால்,1996 ஆம் ஆண்டு நான் சென்னை மாநகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகாலம் பணியாற்றிய நேரத்தில், இந்தியாவிலேயே தலைசிறந்த மேயர் என்ற விருதை எனக்கு வழங்கி என்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறது. அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். நான் ஆற்றக் கூடிய பணிகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய வகையில், அந்த விருது எனக்குப் பயன்பட்டது என்பதில் உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். கடந்த டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி, இந்தியா டுடே பத்திரிகையில், தமிழகம் தலை குனிந்து நிற்கிறது - தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது - என்ற நிலையில் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பட்டியலில் பல்வேறு மாநிலங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால், அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை. அது எங்களுக்கெல்லாம் தலைகுனிவாகவே கருதுகிறோம். அப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தை பழனிசாமி அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது இந்த நாட்டிற்கு நன்றாகத் தெரியும். நேற்றைய தினம் இந்த கான்க்லேவ் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, அவர் பேசும்போது, ‘என்னுடன் விவாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா?’ என்ற ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருக்கிறார். நான் அதையெல்லாம் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. நான் முன்னரே அதற்கு பதில் சொல்லி இருக்கிறேன்.

‘என்னை விவாதத்திற்கு வருமாறு நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தடையைத் திரும்பப் பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு நான் வரத் தயார் என்று அப்போதே சொல்லி இருக்கிறேன். அதற்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் இப்போது கேட்கும் கேள்வி, என்னை அழைத்து விவாதிக்கத் தயாரா என்று கேட்பதை விட, தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவாக இருக்கக்கூடிய நிலையில், இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் அந்தப் பட்டியலில் ஏன் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்று இந்தியா டுடேவிடம் பழனிசாமி கேட்டிருந்தால் நான் பாராட்டி இருப்பேன். அதற்கு அவருக்குத் தகுதி இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. இன்னும் ஒரு மாதத்தில் முடியப்போகும் நிலையில்தான் பழனிசாமியின் ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்படப் போகிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், எடப்பாடி தொகுதியில் கூட முதலமைச்சர் பழனிசாமி நிச்சயமாக வெற்றிபெற முடியாத நிலையில்தான் இருக்கிறார். எல்லாம் முடிந்த பிறகு என்ன நிலைக்கு அவர் ஆளாகப் போகிறார் என்பது பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

முதலமைச்சர் - அமைச்சர்கள் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம்!

இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரையில் - இந்த ஆட்சியை பொறுத்தவரையில் கரப்ஷன் - கமிஷன் -கலெக்ஷன் என்ற நிலையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆளுநரிடம் முதலமைச்சரிலிருந்து கடைசியில் இருக்கும் அமைச்சர் வரை செய்திருக்கும் ஊழல்களைப் பற்றி எல்லாம் - பொத்தாம் பொதுவாக அல்ல- ஆதாரங்களோடு மனுவாக கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம். அது ஒரு பக்கம். குறிப்பாக முதலமைச்சரைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால் அவருடைய துறையான நெடுஞ் சாலைத்துறையில் ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் வரையில் தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டரை சாதகமாக வழங்கி அதில் ஊழல் செய்திருக்கிறார் என்று எங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் -கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு - இதில் முறையாக விசாரிக்கப்பட்டு எல்லாம் முகாந்திரமும் இருக்கிறது.

எனவே இதை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது. உத்தரவுபோட்ட அடுத்த நாளே முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. அதனால்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் இன்றைக்கு குறிப்பிட்டு இருக்கிறோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரிலிருந்து - அமைச்சர்கள் வரையில் இருக்கும் ஊழல்களைப் பற்றி விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

இது திராவிட மண்! பா.ஜ.க. நுழைய முடியாது!

இன்றைக்கு இருக்கும் ஆட்சியைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் தயவுவோடு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும். எனவே ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, தொடர்ந்து 5 ஆண்டு அல்ல, 10 ஆண்டு அல்ல, தொடர்ந்து தமிழ்நாட்டை தி.மு.க. தான் இனி ஆளப் போகிறது என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொண்டு, அதே நேரத்தில் பா.ஜ.க - அ.தி.மு.க. ஆட்சியின் மூலமாக எப்படியாவது உள்ளே நுழைந்து விடலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள். அ.தி.முக ஆட்சியும் வர முடியாது. பா.ஜ.கவும் வர முடியாது. காரணம், இது திராவிட மண். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா -தலைவர் கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண். எனவே எந்த காலத்திலும் முடியாது என்பதை தெரிவித்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கும் நிர்வாகத்திற்கும் மற்றவர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து அனைவருக்கும் நன்றி கூறிவிடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories