மு.க.ஸ்டாலின்

“மாநில உரிமைகளை தாரைவார்த்த அடிமை அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தல்”: CPI மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பாசிச பா.ஜ.க ஆட்சிக்கும் அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது” என அரசியல் எழுச்சி மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“மாநில உரிமைகளை தாரைவார்த்த அடிமை அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தல்”: CPI மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"தத்துவத்தின் அடிப்படையில் - கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர்ந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைய, கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டு, கொள்கைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்! கொத்தடிமைகளிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டு இலட்சியவாதிகளிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும்!”

“ஒரு கை கார்ப்பரேட் கையாகவும் மற்றொன்று காவி கையாகவும் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் கறைபடிந்த பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் கைகளை உயர்த்திப் பிடித்து, இவர்களது ஊழலுக்கு நானும் உடந்தை என்று காட்டுகிறார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (18.02.2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை வண்டியூர், சென்னை – கன்னியாகுமரி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று நிறைவுரை ஆற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலனாகவும் மதச்சார்பின்மையின் அரணாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் இந்த மாநில மாநாட்டில் நானும் பங்கேற்று உங்களிடத்தில் சில கருத்துகளை எடுத்துச் சொல்லும் வாய்ப்பினை பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவிற்கும், இந்த மாநாட்டு குழுவிற்கும், குறிப்பாக, மாநிலச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய தோழர் முத்தரசன் அவர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை - வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் எப்படி கலந்து கொள்வேனோ, அதே உணர்வோடுதான் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்களில் ஒருவனாக என்னை நினைத்து அழைத்திருக்கிறீர்கள். அதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கின்ற அந்த உணர்வோடு என்னை அழைத்திருக்கிறீர்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் இதில் பங்கேற்று இருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருப்பது நட்போ - தோழமையோ மட்டுமல்ல, நாம் ஒரே கொள்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அத்தகைய பாச உணர்வோடு தான் இந்த மேடையில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இந்த உணர்வு என்பது இன்று நேற்று ஏற்பட்ட உணர்வு அல்ல. இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்தில் இருந்து உருவான உணர்வு!

'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்ற உன்னத நோக்கத்துடன் உலகளாவிய இயக்கமாக மாமேதைகள் மார்க்ஸ் - எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது கம்யூனிஸ்ட் இயக்கம். சோவியத் ரஷ்யாவில் மாபெரும் புரட்சியை மாமேதை லெனின் அவர்கள் நடத்திக் காட்டினார்கள். அவர் அமைத்த கம்யூனிச அரசை ஸ்டாலின் வழிநடத்தினார்.

“மாநில உரிமைகளை தாரைவார்த்த அடிமை அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தல்”: CPI மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ ஆட்சி அமைந்தது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தது 1917 ஆம் ஆண்டு நடந்த சோவியத் புரட்சி தான். அந்த புரட்சியில் புத்துணர்வு பெற்று இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு தான் தந்தை பெரியார் அவர்களும் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்கள். சுயமரியாதை இயக்கத்தின் இறுதி இலட்சியம் பொதுவுடமை தான் என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள். அதனால் தான் 1932 ஆம் ஆண்டே கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தைப் பெரியார் அவர்கள். அவர் சோவியத் நாட்டுக்குச் சென்று வந்த பிறகு தான், அனைவரும் இனிமேல் ஒருவரை ஒருவர் 'தோழர்' என்று அழையுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அதற்கு எதிராக கடுமையாக போராடியது திராவிட இயக்கம். தலைமறைவாக இருந்த சில தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்களின் இல்லங்களில் இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.

'திராவிட இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால் நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தான் இருந்திருப்பேன்' என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் அடிக்கடி சொல்வார்கள். சோவியத் புரட்சிக்கு உணர்ச்சித் தூண்டுதலாக அமைந்த மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை காவியமாகத் தீட்டியவர் கலைஞர் அவர்கள்.

இப்படிப்பட்ட நெருக்கமான இயக்கம் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல் ரீதியாக மட்டுமல்ல, தத்துவத்தின் அடிப்படையிலும் தி.மு.க.வுக்கு நெருக்கமான இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்.

இங்கு அமர்ந்திருக்கும் தோழர் நல்லகண்ணுவாக இருந்தாலும் தா.பாண்டியனாக இருந்தாலும் அவர்களை ஒரு கட்சியின் தலைவர்களாக இல்லாமல் ஒரு தத்துவத்தின் தலைவரகளாக – இந்த நாட்டின் தலைவர்களாக மதிக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளிகள் பயன் பெறும் ஆட்சியாகத் தான் இருந்தது! திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 'முரசொலி' இதழில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.

'ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள்!

ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் பேரறிஞர் அண்ணா! ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர்! இவர்கள் ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சியாகத் தான் இருந்தது.

ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்! தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சக் கூலி நிர்ணயிப்பதற்காக கணபதியாப்பிள்ளை ஆணையம் அமைத்தது கழக அரசு!

தஞ்சை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி வரையறை செய்வதற்காக 1973 இல் கார்த்திகேயன் ஆணையம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்! புன்செய் நிலங்களுக்கு வரியை நீக்கினார். 5 ஏக்கர் வரை நஞ்செய் நிலத்துக்கு வரியை நீக்கினார்.

குடியிருப்போருக்கே வீட்டுமனை சொந்தம் என்ற முதலமைச்சர் கலைஞரின் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் பலன் பெற்றார்கள். நாங்கள் ரத்தம் சிந்திப் பெற வேண்டிய உரிமையை ஒரு துளி மையால் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார்கள்.

1978-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டு போராடினார்கள். 1990-ஆம் ஆண்டு மின் கட்டணத்தில் சலுகை அல்ல, மின் கட்டணமே விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இல்லை என்று அறிவித்த முதலமைச்சர்தான் கலைஞர்!

1989-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சிறு விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கழகம் அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் 106 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய அபராத வட்டியான 10 கோடி ரூபாயை கலைஞர் அரசு ரத்து செய்தது.

“மாநில உரிமைகளை தாரைவார்த்த அடிமை அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தல்”: CPI மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகள் உள்பட அனைத்துப் பொருள்களுக்கும் விற்பனை வரி நீக்கப்பட்டது. வறட்சி பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மட்டும் நிலவரியாக 365 கோடியை ரத்து செய்தவர் முதலமைச்சர் கலைஞர். 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே 7000 கோடி ரூபாய்க்கான கூட்டுறவுக் கடனை ரத்து செய்தவர் முதலமைச்சர் கலைஞர்!

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். திராவிட இயக்கத்தில் இலட்சியங்களை மட்டுமல்ல, கம்யூனிஸ இயக்கத்தின் இலட்சியங்களையும் நிறைவேற்றிய ஆட்சி தான் கழக ஆட்சி!

அத்தகைய ஆட்சியைத் தான் அடுத்து அமைய இருக்கும் கழக அரசும் தரும். அத்தகைய நம்பிக்கையுடன் தான் கழக அரசை அமைப்பதற்கான அரசியல் எழுச்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மேடையில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் உருவாக்கி வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் நாள்தோறும் தமிழகத்தின் ஏதாவது ஊரில் மக்கள் பணியை ஆற்றி வருகிறீர்கள்; விழிப்புணர்வை ஊட்டி வருகிறீர்கள். அடுத்து நடக்க இருக்கும் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, கொள்கை மாற்றத்துக்கான தேர்தல். இலட்சிய மாற்றத்துக்கான தேர்தல்!

கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட வேண்டும். கொள்கை வாதிகள் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்! கொத்தடிமைகளிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட வேண்டும். இலட்சியவாதிகளிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல்.

நாம் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் - கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம். என்னைச் சந்தித்து பேட்டி எடுக்கும் ஊடகங்களிடம், 'தி.மு.க. கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி' என்று சொல்லி வருகிறேன். ஆனால் எதிரணி என்பது ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்று சேர்ந்துள்ளது. அ.தி.மு.க. மூலமாக தமிழகத்தில் காலூன்றலாமா என்று கணக்குப் போடுகிறது பாரதீய ஜனதா கட்சி. பா.ஜ.க.வை கைக்குள் வைத்துக் கொள்வதன் மூலமாக தங்கள் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிக்கலாம் என்று அ.தி.மு.க. நினைக்கிறது. அத்தகைய சுயநலக் கூட்டணி தான் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி.

கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு கையால் பழனிசாமியின் கையையும், இன்னொரு கையால் பன்னீர்செல்வத்தின் கையையும் தூக்கிக் காட்டினார்.

பழனிசாமியின் கையும், பன்னீர்செல்வத்தின் கையும் ஊழல் கைகள்; ஊழல் கறைபடிந்த கைகள். அதைத் தூக்கிப் பிடிப்பதன் மூலமாக இவர்களது ஊழலுக்கு நானும் உடந்தை என்று காட்டுகிறார் பிரதமர். பிரதமர் மோடியின் ஒரு கை, காவி கை; இன்னொரு கை, கார்ப்பரேட் கை! காவி கையும் - கார்ப்பரேட்டு கையும் ஊழல் கைகளோடு தான் கை கோர்க்கும். அந்தக் காட்சியை தான் நாம் பார்த்தோம்!

நாம் உழைப்பாளர் கரங்கள், பாட்டாளிகளின் கரங்கள், தொழிலாளர்களின் கரங்கள், தோழர்களின் கரங்கள், உழவர்களின் கரங்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்கு பாரதியார் பாட்டைச் சொன்னால் போதும் - அவ்வையார் பாட்டைச் சொன்னால் போதும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.

“வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயிர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான்” என்று அவ்வை மூதாட்டி பாடிய பாடலின் பொருள் என்ன என்றால், ஒரு மன்னனின் உயர்வு எதில் அடங்கி இருக்கிறது என்றால் நிலம் செழிப்பதில் தான் அடங்கி இருக்கிறது என்றார் அவ்வை பாட்டி.

ஆனால் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அவர்கள், அவ்வையாரின் பாட்டைச் சொல்லலாமா? அதற்கான உண்மையான அர்த்தத்தில் ஆட்சி நடத்துகிறீர்களா? அதேபோல் மீனவர்களுக்காகவும் உருக்கமாக பேசி இருக்கிறார் பிரதமர்.

“நமது மீனவர்கள் நீண்ட காலப் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதி அளிக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தான் நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டார்கள். இதனை பிரதமரால் தடுக்க முடியவில்லை. பிரதமர் ஆவதற்கு முன்னால் 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக இராமநாதபுரம் வந்த நரேந்திர மோடி, ''நான் குஜராத்தை சேர்ந்தவன். குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. நான் பிரதமர் ஆனதும் குஜராத் மீனவர்களும் தமிழக மீனவர்களும் இணைந்து இதற்காக நிரந்தர தீர்வை எட்டுவதற்கான கூட்டு நடவடிக்கையை எடுப்பேன்" என்று சொன்னார். ஆனால் ஆண்டு தோறும் மீனவர் மீதான தாக்குதல் தொடர்கிறது.

“மாநில உரிமைகளை தாரைவார்த்த அடிமை அரசுக்கு பாடம் புகட்டும் தேர்தல்”: CPI மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசிய போது, மாநிலங்களவை அவைத்தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்யா நாயுடு ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

“இது நீண்ட கால பிரச்னையாக உள்ளது. இதுவரை இதற்கு தீர்வு காணமுடியவில்லை. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். மீனவர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று அவருக்கே தெரிகிறது. ஆனால் மீனவர்கள் நிம்மதியாக வாழ்வதைப் போல பிரதமர் பேசுகிறார்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வேறொரு நாடு. ஆனால் மோடி ஆட்சி காலத்தில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதலை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது.

பெட்ரோல் விலை உயர்கிறது. டீசல் விலை உயர்வு. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு. இதுதான் இந்த நாட்டுக்கு மோடி தொடர்ந்து கொடுக்கும் பரிசாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கொரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தியது மோடி அரசு. இப்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் 52 ரூபாய் உயர்த்தி விட்டார்கள். தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை உயர்கிறது! பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறி விலை உயர்கிறது! விலைவாசி உயர்கிறது! போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. ஏழைகளின் வாழ்க்கைத்தரம் மட்டும் உயரவில்லை. இவை சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல்கள். இதனை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

இதை எல்லாம் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது. தட்டிக் கேட்கக் கூட வேண்டாம்! அனைத்தையும் தூக்கி தாரைவார்க்கும் ஆட்சியாக பழனிசாமியின் ஆட்சி இருக்கிறது. கொஞ்சம் தாமதித்து இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தையே தாரை வார்த்திருப்பார்கள்.

கல்வி - வேளாண்மை - மின்சாரம் ஆகிய துறைகளில் இருந்த மாநில உரிமைகளை தாரைவார்த்து விட்டார்கள். தமிழைப் புறக்கணித்து இந்தித் திணிப்புக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள்.

தமிழகத்தின் நிதித் தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்வது இல்லை. கேட்டநிதியை தருவது இல்லை. புதிய திட்டங்கள் கிடையாது. அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மோடி அரசு மனது வைத்தால்தான் வரும்; ஜப்பான் அரசு மனது வைத்தால் தான் வரும் என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

பழனிசாமி அரசாங்கத்தை, ஒரு அரசாங்கமாகவே மத்திய பா.ஜ.க. மதிக்கவில்லை. இந்த நிலையில் நடக்க இருக்கும் தேர்தல் தமிழகத்தின் நிகழ்காலத்துக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் முக்கியமான தேர்தல்.

அ.தி.மு.க.வை பயன்படுத்தி பா.ஜ.க. காலூன்றப் பார்க்கிறது. அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. பாசிச பா.ஜ.க.வுக்கும்- அடிமை அ.தி.மு.க.வுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் தான் இந்தத் தேர்தல்.

தந்தை பெரியாரின் தமிழ்நாடு - பேரறிஞர் அண்ணாவின் தமிழ்நாடு - தோழர் ஜீவாவின் தமிழ்நாடு - பெருந்தலைவர் காமராசரின் தமிழ்நாடு - முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்நாடு இது என்பதை நாம் நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

உன்னதமான தலைவர்களால் உரம் போடப்பட்ட தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்போம், மீட்போம், மீட்போம் என்ற உறுதியோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories