தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவைகுண்டம் அடுத்துள்ள சாயர்புரம் தேரிசாலையிலுள்ள வாழைரி தோட்டத்திற்குச் சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழை விவசாயிகள் மற்றும் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள் இந்தப்பகுதியில் 315 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்த இருவப்புரம் குளத்தை சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து வாழை தோட்டங்களை அமைத்து வருவதாகவும், அந்தக் குளத்தின் பரப்பளவு தற்போது சுருங்கி உள்ளதாகவும் இதனால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் வேதனையோடு தெரிவித்தனர்.
இதேபோல் திருவைகுண்டம் அணையில் இருந்து விவசாயிகளுக்கு என தண்ணீர் திறக்காமல் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அதே அணைக்கட்டில் ஆழ்துளை கிணறு பதித்து மோட்டார் வைத்து தண்ணீர் திருடப்படுவதாகவும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து வாழைத்தோட்ட விவசாயி குணசேகரன் தற்போது விவசாயிகள் படும் துயரங்களையும், வறட்சி நிவாரணங்கள் கிடைக்காமல் பலர் கடன் தொல்லையால் பாதிக்கப்படுவதாகவும் 2000 ஏக்கருக்கு மேல் வாழைத்தோட்டம் இப்பகுதியில் அமைந்துள்ளதால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.