மு.க.ஸ்டாலின்

“வேளாண் துறையை காக்க அனைத்து கிராம சபைகளிலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றுக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

“வேளாண் துறையை காக்க அனைத்து கிராம சபைகளிலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றுக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் - பா.ஜ.க அரசு கொண்டுவந்து, அ.தி.மு.க ஆதரிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக - கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“உணவுப் பொருட்களான வேளாண் விளைபொருட்களை வரம்பின்றிப் பதுக்கி” வைக்க அனுமதித்திருக்கும் “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020”; விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; மற்றும் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலையை அங்கீகரிக்க மறுக்கும், “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; ஆகியவற்றை விவசாயிகளும், வெகுமக்களும் எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளாண் விரோத சட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரித்து - ஆதரித்ததோடு மட்டுமின்றி, அச்சட்டம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று; வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிராகப் பேசி வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணிக் கட்சிகளும் - விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் இந்தச் சட்டங்களுக்கு எதிராக, தொடர் போராட்டம் நடத்தி, அவர்கள் மீதெல்லாம் “கொத்துக் கொத்தாக” வழக்குகளைப் பதிவு செய்து, வன்மத்துடன் நடந்து வருகிறது அ.தி.மு.க. அரசு. வேளாண்மைக்கும் - விவசாயிகளுக்கும் விரோதமான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசுகள்- “இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்து” ஏழை - எளிய நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக, தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரிய விவசாய நடைமுறைகளைச் சீர்குலைத்து; அனைவரையும் பிரச்சினைகளுக்குள் தள்ளத் திட்டமிட்டிருப்பது, இவர்களின் “இச்சட்டங்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவுப் பிரச்சாரத்தில்” எதிரொலிக்கிறது.

“வேளாண் துறையை காக்க அனைத்து கிராம சபைகளிலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றுக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

இந்தச் சூழலில், நம் கழனிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்க; நம் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஆகவே, அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான, வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, அ.தி.மு.க. ஆதரித்துள்ள மேற்கண்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், தங்களது கிராமசபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளின் நலனையும், நம் வேளாண் நலனையும் மனதில் வைத்து, இன்றைக்கும் கிராமப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையைக் காப்பாற்ற இந்தக் கண்டனத் தீர்மானத்தை, கட்சி வித்தியாசம் பாராமல், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் நிறைவேற்றித்தர வேண்டும்; தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை; அ.தி.மு.க. அரசு, சுயநலக் காரணங்களுக்காக, காட்டாத எதிர்ப்பினை; மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தெளிவுபடத் தெரிவித்திட வேண்டும்; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories