மு.க.ஸ்டாலின்

“ஆசிரியர்களுக்கு முத்தாய்ப்பான சலுகைகளை வழங்கியவர் தலைவர் கலைஞர்” - மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!

வகுப்பறைகளில் தங்கள் வாழ்நாளைக் கழித்து - ஓய்வு பெற்ற பிறகும் கூட நல்லொழுக்கம், பண்புகளைப் போற்றி வளர்க்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.

“ஆசிரியர்களுக்கு முத்தாய்ப்பான சலுகைகளை வழங்கியவர் தலைவர் கலைஞர்” - மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு பட்டுவரும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்" அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின்.

வாழ்த்து செய்தியின் முழு விவரம்:-

“ 'சிந்தனை - இலட்சியங்கள்' நிரம்பிய அறிவுமிக்க சமுதாயத்தை உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. நாட்டை அறிவுக் களஞ்சியமாக மாற்றும் அரிய பணியில் ஒவ்வொரு ஆசிரியரும் போற்றத்தக்க - மெச்சத்தக்க சேவையாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களில் ஒருவராக இருந்து - இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகி - பிறகு அதே அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் குடியரசுத் தலைவராகி - சாதனை மிக்க வரலாறு படைத்தவர் டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள்.

'மன்னர்களிடையே ஒரு தத்துவ ஞானியாகவும்; தத்துவ ஞானிகளிடையே ஒரு மன்னராகவும் திகழ்ந்து', இந்தியத் திருநாட்டிற்குப் பெருமைச் சேர்த்த, அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளன்று ஒவ்வோராண்டும் கொண்டாடப்படும் 'ஆசிரியர் தினத்தை', ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவருடனும் - ஒட்டுமொத்த சமுதாயமே எழுச்சியுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

“ஆசிரியர்களுக்கு முத்தாய்ப்பான சலுகைகளை வழங்கியவர் தலைவர் கலைஞர்” - மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!

வகுப்பறைகளில் தங்கள் வாழ்நாளைக் கழித்து - ஓய்வு பெற்ற பிறகும் கூட நல்லொழுக்கம், பண்புகளைப் போற்றி வளர்க்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் அந்த ஆசிரியர் பெருமக்களுக்கு ஆட்சியிலிருந்த போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறது. எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு அளிக்கப்படும் 'நல்லாசிரியர் விருதை',1997-ல் ஆட்சியில் இருந்தபோது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது' என்று பெயர் மாற்றம் செய்தார். அந்த விருதுகளை வழங்கி ஆசிரியர் பெருமக்களைக் கௌரவித்தார்.

கழக ஆட்சியில்தான் ஆசிரியர் பெருமக்களுக்கு உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்பட்டது. ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின் 'புலவர்' பட்டயம் 'பி.லிட்' பட்டமாக மாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என முத்தாய்ப்பான பல சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பது ஆசிரியர் பெருமக்கள் மனதில் என்றைக்கும் நினைவிலிருக்கும்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த காலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்றன என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் அதேவேளையில், புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர் சமுதாயத்திற்கு எதிரான அம்சங்களை தி.மு.கழகம் ஆணித்தரமாக எதிர்த்து வருகிறது. ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் என்றைக்குமே திராவிட முன்னேற்றக் கழகம் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று உறுதியளித்து - ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories