மு.க.ஸ்டாலின்

“சமூக ஒற்றுமையும் நீதியும் மிகுந்த சமூகத்தை கட்டமைக்க வேண்டும்” - இளைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி வேண்டுகோள் விடுத்து அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“சமூக ஒற்றுமையும் நீதியும் மிகுந்த சமூகத்தை கட்டமைக்க வேண்டும்” - இளைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“அன்பார்ந்த இளைஞர் பட்டாளமே,

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம், ஆனால் இவ்வருடமே இளைஞர்களின் வருடம் என்று சொன்னால் மிகையாகாது. இன்றுள்ள சூழ்நிலை குறித்து இவ்வருட தொடக்கத்தில் நாம் எவருமே நினைத்திருக்க மாட்டோம். ஒரு கொடிய நோய்த் தொற்று ஏறத்தாழ அரையாண்டு காலம் நம் அனைவரையும் தனித்து இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. என்ன ஒரு கடினமான காலம் இது. கணக்கிட்டு சொல்ல இயலாத அளவுக்கு நம் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

எனினும், நம் எதிர்காலம் மிகுந்த வல்லமை உடையவர்களிடம் தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து இருக்கிறது. இளைஞர்கள் திறம்பட நிலையாக நின்று வழி வகுத்துள்ளனர். கொரோனா தொற்றினால் பொது முடக்கம் தொடங்கிய பொழுது லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை விரைவாக கொண்டு சேர்க்க இளைஞர்கள் இணையதளத்தை பாலமாய் அமைத்து சூழ்நிலையை சீர் செய்ய பக்க பலமாய் செயல்பட்டனர். நாம் முடங்கிய வேலையில், இளைஞர்கள் தான் களமிரங்கி அத்தியாவசியப் பொருட்களான உணவு மற்றும் மருந்தை விநியோகித்து தேவைகளை பூர்த்தி செய்தனர்.

“சமூக ஒற்றுமையும் நீதியும் மிகுந்த சமூகத்தை கட்டமைக்க வேண்டும்” - இளைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மருத்துவமனை நிரம்பினாலும் இளம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அயராது, இரவு பகல் பாராது பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களை அர்ப்பணித்தனர். தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மட்டுமல்ல நம் தமிழகத்தின் வரலாற்று பக்கங்களில் பல முறை இளைஞர்களின் இன்றியமையா பங்களிப்பு இடம்பெற்றுள்ளது. இளைஞர்களின் பங்களிப்பின் பின்னணியில் தான் சமநிலையான வளமிகுந்த தமிழகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அன்று கலைஞரோடு லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பி திராவிட கொள்கையை நிலைநாட்டியதின் விளைவே இன்று தமிழ்நாடு அணைத்து துறையிலும் முன்னோடி மாநிலமாக திகழ்வதற்கு காரணம்.

என் இளமை காலகட்டத்திலும் தமிழ்நாடு பல இன்னல்களை சந்தித்துள்ளது. இந்தி திணிப்பு, அவசர நிலை, மிசா போன்ற அனைத்தையும் இளைஞர் பட்டாளமாய் ஒன்றிணைந்து வென்றோம். இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் களத்த்தில் போராடியதை என்னால் இன்றளவிலும் நினைவு கூற முடிகிறது. திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் இளைஞர் பட்டாளமும் பல முறை ஒன்றிணைந்து போராடி அனைவருக்குமான வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்பதிலும் பாடுபட்டுள்ளது.

இளைஞர்கள் பேரறிஞர்களாகவும், புகழ் பெற்ற மேதைகளாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற பெருமை சேர்த்துள்ளனர். வேலை வாய்ப்புகளும் தொழில் வளர்ச்சியும் உள்ள மாநிலமாக மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமையும் நீதியும் மிகுந்த சமூகத்தை கட்டமைப்பதில் நுண்ணியமாக செயல்படுவீர்கள் என்று முழு மனதோடு நம்புகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். நேரம் காலம் பார்க்காமல் எவ்வேளையிலும் அயராது களத்தில் இறங்கி பாடுபடும் சக்தியும் பொறுப்புணர்ச்சியும் கொண்டர்வர்களாக திகழ்கிறீர்கள்.

பல இடையூறுகள் வரும்போதிலும் உங்கள் எதிர் காலம் உங்கள் கையில் என்று போராடி வெல்லும் மனப்பான்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. எனக்கு ஊக்கம் ஊட்டுகிறது. சமநிலையான சமத்துவ சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளையும் அயராது உழைக்கும் வலிமையையும் மனமார வாழ்த்துகிறேன்.

இளைஞர்களின் தீவிரமான பங்களிப்பிற்கும், அயராது உழைக்கும் வலிமைக்கும், என்றும் தளராத உற்சாகத்திற்கும் இந்த சர்வதேச இளைஞர் தினத்தன்று நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். சரியான சிந்தனையும் என்றும் தளராத அர்ப்பணிப்பும் இருந்தால் எப்பெறும் தடைகளையும் இளைஞர் பட்டாளத்தால் வென்றிட முடியும் என்பதை ஒருபொழுதும் மறவாதீர். என்றும் உங்களுடன், மு.க.ஸ்டாலின்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories