மு.க.ஸ்டாலின்

"மக்கள் காக்கப்படும்வரை மீண்டும் மீண்டும் சொல்வேன்!" - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

"மக்கள் காக்கப்படும்வரை மீண்டும் மீண்டும் சொல்வேன்!" - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் அறிக்கைகளையே வெளியிடுவதாகவும், அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைச் சொல்லவில்லை எனவும் அபாண்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது குற்றச்சாட்டுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இன்று (28-06-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி விவரம் பின்வருமாறு :

“மு.க.ஸ்டாலின் அரசியல் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறார் என்றும், இந்த அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக என்ன சொல்லியிருக்கிறார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுள்ளார்.

அவருக்கு இதற்கு மேல் என்ன ஆலோசனைகள் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆலோசனைகளை மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து சொல்லி வருகிறேன். இதுவரை 50-க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். இவை அனைத்தும் மக்கள் மன்றத்தில் உள்ளது. அதனை மீண்டும் முழுமையாகப் படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறன் இருக்குமானால், புரிந்து செயல்படுத்துங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

"மக்கள் காக்கப்படும்வரை மீண்டும் மீண்டும் சொல்வேன்!" - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்!

இதுவரை நான் விடுத்த ஒரு சில ஆலோசனைகளைத் தவிர, பெரும்பாலான மற்றவற்றைக் கேட்காத நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக்குத் தெரியும். முதல்வருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்.

தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுங்கள்.

தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள்.

மக்களைக் காக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும்.

பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடுங்கள்.

மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள்.

பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள்.

சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள்.

கேரளா எப்படி மீள்கிறது; தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்.

- இவை அனைத்தும் நான் ஏற்கனவே சொன்னவை.

மீண்டும் சொல்கிறேன்; மீண்டும் மீண்டும் சொல்வேன்; சொல்லிக் கொண்டே இருப்பேன்; மக்கள் காக்கப்படும்வரை!”

banner

Related Stories

Related Stories