மு.க.ஸ்டாலின்

“கழகத்தின் துணிவுமிக்க போராளி பல(லே)ராமன்; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் மறைவை அடுத்து தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கழகத்தின் துணிவுமிக்க போராளி பல(லே)ராமன்; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடசென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செயலாளரும், தற்போது தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், தி.மு.கழக தொண்டர்களுக்கு இது தொடர்பாக வேதனை நிறைந்த மடல் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ ‘கழகத்தின் துணிவுமிக்க போராளி ‘பலே’ராமன் மறைந்தாரே!’ நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் துக்கமும் வேதனையும் சோகமும் மிகுந்த மடல்.

சென்னை மாவட்டக் கழகத்தினைக் கட்டிக்காக்கும் செயல்வீரராக - வடசென்னை மாவட்டத்தின் முன்னாள் கழகச் செயலாளராக விளங்கிய நம் பாசத்திற்குரிய பலராமன், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி இதயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி, கண்களை நனையச் செய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தில் எளிய தொண்டனும் உயர்ந்த இடத்தை தன் உழைப்பினால் - முயற்சியினால் - அர்ப்பணிப்பு உணர்வினால் அடைந்திட முடியும் என்பதற்குப் பலராமன் அவர்கள் நடமாடும் அடையாளமாக இருந்தார்; இன்று, கழக வரலாற்றின் அரிய சாட்சியாக ஆகியிருக்கிறார்.

“கழகத்தின் துணிவுமிக்க போராளி பல(லே)ராமன்; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்!

இருவண்ணக் கொடி பிடித்துப் போராட்டக் களங்களில் பங்கேற்கும் தொண்டனாக, அதன்பிறகு வட்டச் செயலாளராக, அதிலிருந்து பகுதிச் செயலாளராக ஏற்றம் பெற்று, வடசென்னை மாவட்டக் கழகத்தின் செயலாளர் என்கிற பொறுப்பினைப் பெற்று, போற்றிப் பாராட்டத் தக்க வகையில், திறம்படச் செயலாற்றியவர் பலராமன் அவர்கள். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் கண் அசைவின் பொருளைப் புரிந்துகொண்டு, வில்லில் இருந்து விடுபடும் கணையாகக் களப்பணியாற்றியவர்.

வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் பங்கேற்கிற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டமாக இருந்தாலும், இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டமாக இருந்தாலும் அவற்றை எழுச்சியுடனும் ஏற்றத்துடனும் நடத்திக் காட்டுவதில் பலராமனுக்கு நிகர் பலராமன் அவர்கள்தான். அதனால்தான், தலைவர் கலைஞர் அவர்கள் அவரை ‘பலே’ராமன் என்று மேடையிலேயே பாராட்டி மகிழ்ந்தார்.

முத்தமிழறிஞர் கலைஞரை இயக்கத்தின் தலைவராக மட்டும் கருதாமல், கழகக்குடும்பத்தின் தந்தை என்ற முறையில், ‘அப்பா’ என்றே அழைப்பார் பலராமன். அத்தகைய பாசப் பிணைப்பு இருவருக்கும் இருந்தது.

அவருடைய வடசென்னை மாவட்டக் கழகத்திற்குட்பட்டதாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதி இருந்த நிலையில், அங்கே 1989, 1991 ஆகிய இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட தலைவர் கலைஞர் அவர்களை வெற்றி பெறச் செய்யும் அளப்பரிய உழைப்பைக் கொட்டியவர் பலராமன். அதிலும், 1991 தேர்தல் என்பது, அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையால் முடிவுகளை முற்றிலும் மாற்றிய தேர்தல். அந்தச் சூறாவளியிலும் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்ற வெற்றிக்கு பலராமனின் அயராத உழைப்பும், துணிவான களப்பணியும் முக்கிய காரணமாகும்.

“கழகத்தின் துணிவுமிக்க போராளி பல(லே)ராமன்; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்!

1996, 2001, 2006 தேர்தல் களங்களில் கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார். 1996 சட்டமன்றத் தேர்தலில் பேராசிரியர் பெருந்தகையை எதிர்த்து நின்ற அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கும் வகையில் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தவர் பலராமன். அடுத்தடுத்த தேர்தல்களில் அரசியல் சூறாவளிகள் சுழன்றடித்த நிலையிலும் பேராசிரியர் வெற்றிக்குத் துணை நின்றார்.

கழகத் தலைவர், பொதுச்செயலாளர் எனும் இரண்டு கோபுரங்களில் வெற்றிக் கலசம் மின்னுகிற வகையில், தாங்கி நின்ற பலம் மிகுந்த தூணாகிய பலராமன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாரே என்கிற வேதனை உங்களில் ஒருவனான எனக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு உடன்பிறப்புகளிடம் கனிவாகவும், கறாராகவும் நடந்துகொண்டவர் பலராமன்.

தலைவர் ஆணையிட்டு நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றவர்; சிறைக்கு அஞ்சாதவர்!

தனது சிறைவாசத்தைப் பற்றிப் பொருட்படுத்தாவிட்டாலும், உடன்பிறப்புகள் சிறைப்பட்டால் துடிதுடித்துப் போவார். அவருடைய நிர்வாகத்திற்குட்பட்ட கழக மாவட்டத்தில்தான் அன்றைக்கு மத்திய சிறைச்சாலை இருந்தது. நெருக்கடி நிலைக்கால மிசா கொடுமைகளை நான் உள்ளிட்ட கழகத் தோழர்கள் அனுபவித்ததும் அந்த சிறைச்சாலையில்தான். அதன்பின்னர், போராட்டக் களங்களில் பங்கேற்ற தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழகத்தினர் அங்கே சிறை வைக்கப்பட்டனர். 2001-ம் ஆண்டு நள்ளிரவில் தலைவர் அவர்களின் இல்லத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஜெயலலிதாவின் காவல்துறை கைது செய்த மனித உரிமைகளை மீறிய நடவடிக்கைக்குப் பிறகு, தலைவர் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டதும் மத்திய சிறைச்சாலையில்தான். அத்தகைய தருணங்களில், சிறைவாசலிலேயே பாதுகாவலனாக நின்றவர் பலராமன்.

“கழகத்தின் துணிவுமிக்க போராளி பல(லே)ராமன்; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பவர்” - மு.க.ஸ்டாலின் புகழாரம்!

ஆளுந்தரப்பினர் நம்முடைய கழகத்தினர் மீது பொய்வழக்குப் போட்டுப் பழிவாங்கும் நடவடிக்கையாகச் சிறையில் அடைக்கும்போது, அவர்களின் தோழனாகப் பலராமன் அவர்கள்தான் துணை நிற்பார். சிறை விதிகளுக்குட்பட்டு கழகத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பெற்றுத் தருவார். அவர்களின் உடல்நலனுக்கேற்ற உணவைக் கொடுத்தனுப்புவார். மத்தியச் சிறைக்குள் அடைக்கப்பட்ட உடன்பிறப்புகள், வெளியே ‘மாவட்டம்’ பலராமன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

சிறைப்படுத்தப்பட்டோர் மட்டுமல்ல; சிந்தனை மிக்க பேச்சாளர்களும் பலராமன் அவர்களின் பண்பு செறிந்த அன்புக்கு ஆட்பட்டவர்கள். தனது மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பேச்சாளர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து, உணவு பரிமாறி, கௌரவித்து அனுப்பும் உயர்ந்த விருந்தோம்பல் போற்றியவர்.

தலைவர் கலைஞர் அவர்களின் மீது அன்பையும் பாசத்தையும் அருவி போலக் கொட்டிய பலராமன், அதே அன்பையும் பாசத்தையும் என் மீதும் பொழிந்தவர். குடும்பத்தில் ஒருவராக, பணிகளைத் தானே முன்வந்து தன் தோள் மீது போட்டுக்கொண்டு செய்வார். கழக நிர்வாகிகள் பலரிடமும் இதே குடும்பப் பாசத்தைப் பரிமாறியவர்.

கட்சிப் பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும், தேர்தல் களம் என்றாலும் பலராமன் களத்தில் நிற்பார். விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் மிக்க கடின உழைப்பாளி. கழகத்திற்கான அத்தகைய உழைப்பு, தனது மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால், அவர் மீது உடன்பிறப்புகளுக்குக் கோபம் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டார். அந்தக் கோபம், கழகப் பணியாக மாறும்போது, இயக்கம் வலிமை பெறும் என்பது ஒன்றே அவரது இலக்காக இருந்தது.

கழகத்தின் துணிவு மிக்க போராளியாக விளங்கிய பலராமன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலிவுற்றிருந்தாலும், இந்தக் கொரோனா காலத்தில் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி மறைவெய்தியிருப்பது நமக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. 10 நாட்களுக்கு முன்னர்தான் அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்களை நோய்த் தொற்றுக்குப் பறி கொடுத்தோம். அந்தத் துயரத்திலிருந்து மீள்வதற்கு முன்பாக, ஆற்றலாளர் பலராமனை இழந்திருக்கிறோம்.

இழப்புகள், சோதனைகள், நெருக்கடிகள் எனக் கழக வரலாற்றில் காயங்களைப் பெற்றே இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அப்படி வருவதற்குத் துணை நின்ற தூண்களில் ஒருவரான பலராமன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கழகத்தினருக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதன் மூலம் உங்களில் ஒருவனான நான், என்னை நானே தேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். இயற்கையின் சதியால் பலராமன் இறந்துவிட்டார் என்றாலும் அவர் நம்மிடமிருந்து மறையவில்லை. நம் அனைவரின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்; கழக வரலாற்றில் நிலைத்திருக்கிறார்.” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories