2019ம் ஆண்டில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு, நலத்திட்டங்கள், மக்கள் குறைகேட்பு எனத் தொடங்கி, தமிழகம் முழுவதும் ஆளும் அரசு செய்யவேண்டிய மக்கள் நலப்பணிகள் பலவற்றை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், தி.மு.க. தலைவராகவும் செய்துகொண்டிருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஊராட்சிகளில் மக்களோடு மக்களாக களம் கண்டது, மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டம், நாட்டின் நலனுக்கும், மக்கள் விரோத சட்டங்களுக்கும் எதிரான போராட்டம் என களத்தில் இறங்கி குரல் கொடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
2019ல் களத்தில் தி.மு.க. தலைவர் செய்த சாதனைகள் மற்றும் பணிகள் குறித்து ‘ஊர் ஊராக உங்களில் ஒருவன்’ என்கிற சிறப்பு காணொளி வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “மத்திய மாநில அரசுகளால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கசப்புகள் ஏராளம்.
அதில், பொருளாதார வீழ்ச்சி, இந்தி திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், விவசாயிகள் தற்கொலை, நீட் நெருக்கடிகள் என மத்திய அரசின் தவறான நிலைப்பாடுகள் ஒரு புறம், மாநிலத்திலோ அடிமைத்தனமான ஒரு முதலமைச்சர் இருந்துகொண்டு எந்தத் தரப்புக்கும் நன்மை செய்யாத, எந்தத் தரப்பும் மனநிம்மதி அடையாத ஓர் ஆட்சியாக தொடர்கிறது.
2019ம் ஆண்டில் இரண்டு அரசுகளாலும் மக்கள் அனுபவித்த துன்ப, துயரங்கள் அதிகம். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாக 2020ம் ஆண்டு அமைய இருக்கிறது. இந்த ஆண்டு அனைவருக்கும் நன்மை செய்விக்கும் ஆண்டாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.