மு.க.ஸ்டாலின்

நீலகிரி வெள்ளம்: அலட்சியம் காட்டும் அ.தி.மு.க அரசு - 10 கோடி நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்த மு.க ஸ்டாலின்

நீலகிரி மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து, ரூ.10 கோடி வழங்கப்படும் என தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீலகிரி வெள்ளம்: அலட்சியம் காட்டும் அ.தி.மு.க அரசு - 10 கோடி நிவாரண நிதி அளிப்பதாக அறிவித்த மு.க ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

நீலகிரி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 91 செ.மீ மழை பதிவானது.

பல இடங்களில், மரங்கள் சாய்ந்து விழுந்து, மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை கொஞ்சம் ஓய்ந்துள்ளதால், சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேசமயம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் மழை தொடர்வதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். 2வது நாளாக இன்று நிவாரண முகாம்களுக்கு சென்று, மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழக அரசு குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்காது. நீலகிரியில் கனமழையால் சுமார் 350 கி.மீ.க்கு சாலைகள் சேதமடைந்திருக்கின்றன.

ஏறக்குறைய 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் தாலுகாக்களின் பெரும்பாலான பகுதிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா, வெள்ள நிவாரண பணிகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 கோடியை ஒதுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அதேபோல, கூடலூர் எம்எல்ஏ திராவிட மணி, மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

அத்துடன் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, சண்முகம், வில்சன் ஆகிய 5 பேரும், தலா 1 கோடி ரூபாய் வழங்க உள்ளனர். மொத்தம் 10 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அவர்கள் வீடுகளில் தேங்கியிருக்கிற மழைநீர் முழுவதுமாக வடியும்வரை, முகாம்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அரசு வழங்கிட வேண்டும். இரு நாட்களாக நாங்கள் செய்த ஆய்வுகளைத் தொகுத்து முதல்வரிடம் மனு வழங்க உள்ளோம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories