மு.க.ஸ்டாலின்

“மூத்த தோழர் நல்லகண்ணுவுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்க” - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், இந்திய அரசியலின் முதுபெரும் தியாகியுமான தோழர் நல்லகண்ணு வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து அவரை காலி செய்ய வைத்துள்ளது தமிழக அரசு.

file image
file image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு சென்னை சி.ஐ.டி. காலனி அருகில் உள்ள அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். திடீரென அவரை அந்த வீட்டில் இருந்து காலிச் செய்ய வைத்திருக்கிறது தமிழக அரசு. இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாகச் சொல்லப்பட்டு, நல்லகண்ணு அய்யா அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் காரணமாக, உடனடியாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அரசாங்கத்தை மதிக்கும் அவருடைய நற்பண்பு போற்றுதலுக்குரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பயணத்தில் நேர்மையுடன் வாழ்கின்ற தலைவர்களுக்கும் சான்றோர்களுக்கும் அரசு தரும் மரியாதைகளில் ஒன்றாகத்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான 94 வயதுடைய மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”

banner

Related Stories

Related Stories