
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் இன்று முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆத்தூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகக் கட்டடப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்மையில் ஆத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் பயணித்த காரிலிருந்து இறக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, அங்கு திரண்டிருந்த திமுகவினர் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். அனிதா ராதாகிருஷ்ணனை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”எனத் தெரிவித்துள்ளார்.






