
தமிழகத்தில் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கும் அதிகார அரசியலைக் கையில் எடுத்துள்ளது. முதலில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அரசு, தற்போது அவதூறு வழக்கு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்துள்ளது.
அண்மையில் ஆத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த அராஜகப் போக்கிற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'சினிமா ஆக்ஷன் பாணியில் விஜய் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்' என அவர் சாடியுள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது." என கண்டனம் தெரிவித்துள்ளார்.






