
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமான பலவற்றை செய்து வருகிறது. மேலும் முன்னேறி வரும் இந்தியாவை, மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதற்கு, பல முற்போக்காக்கான கட்சிகளும் தடுப்பு சுவராக இருந்து வருகிறது. மக்கள் மீது வெறுப்பை கட்டவிழ்க்கும் RSS சித்தாந்தத்தை பாஜகபுகுத்த முனைப்பு காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஒன்றிய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில், மாணவர்களை RSS பாடலை பாட வைத்துள்ளது தெற்கு இரயில்வே. அதாவது நேற்று (நவ.08) வாரணாசியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, நாடு முழுவதும் 4 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அந்த 4 இரயில்களில் ஒன்று, கேரள மாநிலம் எர்ணாகுளம் சவுத் இரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஒன்றிய அமைச்சர்கள் சுரேஷ்கோபி, ஜோசப் குரியன், கேரள அமைச்சர் பி.ராஜிவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த சமயத்தில் எர்ணாகுளத்திலிருந்து தொடங்கப்பட்ட வந்தே பாரத் இரயிலுக்குள் இருந்த மாணவர்கள், RSS அமைப்பின் பாடலான 'பரம பவித்ர மதாமி மண்ணில் பாரதாம்பயே பூஜிக்கான்' என்ற மலையாளப் பாடலைப் பாடினார்கள்.
இதுகுறித்த வீடியோவை தெற்கு இரயில்வே தங்களது இணையதளத்தில் வெளியிட்டு பெருமிதம் தெரிவித்திருந்தது. ஒரு அரசு விழாவில் தேசிய கீதமோ, அல்லது அந்த மாநில பாடலோ பாடுவதற்கு பதிலாக, இந்துத்வ அமைப்பின் பாடலை பாடியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
தீவிர இந்துத்துவ அரசியலை இரகசியமாகப் புகுத்தும் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. மத வெறுப்பு, வகுப்புவாத பிளவு அரசியலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் RSS அமைப்பின் பாடலை, அரசு திட்டத்தில் பாட வைத்தது அரசியலமைப்பு கொள்கையை மீறும் செயலாகும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையைக் கூட சங்பரிவார் தங்கள் வகுப்புவாத அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பாடலை 'ஒரு தேசபக்தி பாடல்' என்ற தலைப்பில் தெற்கு இரயில்வே சமூக வலைதளங்களில் பகிர்ந்து தன்னைத்தானே கேலிக்குள்ளாக்கியதுடன், இந்தியத் தேசியத்தையும் கேலி செய்துள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருந்த இரயில்வே துறையில், இப்போது அரசு நிகழ்வுகளில் RSS-ன் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊடுருவச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது
வந்தே பாரத் தொடக்க விழாவில் தீவிர இந்துத்துவா அரசியலை மறைமுகமாகப் புகுத்துவதைப் பார்க்க முடிந்தது. மதச்சார்பின்மையை அழிக்கும் குறுகிய அரசியல் மனநிலை இதன் பின்னால் உள்ளது. இதை உணர்ந்துகொண்டு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்








