
பிரதமர் மோடி, தமது சிறந்த நண்பரின் பைகளை நிரப்புவதிலேயே மும்முரமாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேரடிப் பலன் பரிமாற்றத்தின் உண்மையான பயனாளிகள் இந்தியாவின் சாமானிய மக்கள் அல்ல, மோடியின் நெருங்கிய நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பைசாவையும் சேமித்து, எல்.ஐ.சி. பிரீமியங்களை செலுத்தும் ஒவ்வொரு நடுத்தர வர்க்க நபரின் சேமிப்பை, பிரதமர் மோடி அதானியை மீட்க பயன்படுத்துகிறார் என்பது தெரியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். இது நம்பிக்கை மோசம் இல்லையா என்றும், இது கொள்ளை இல்லையா என்றும் வினவியுள்ளார்.
அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்த பணத்திற்கும், மே 2025-ம் ஆண்டில், 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசு பதிலளிக்குமா என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன்பே, 2023-ம் ஆண்டில், அதானியின் பங்குகள் 32 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்த போதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயின் 525 கோடி ரூபாய் ஏன் அதானி எஃப்பிஓ-வில் முதலீடு செய்யப்பட்டது வினவியுள்ளார்.
மோடி, தனது "சிறந்த நண்பரின்" பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருப்பது ஏன் என்றும் 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொள்ளையடிப்பது ஏன் என்றும் மல்லிகார்ஜுன கார்கே அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.






