ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் அலுவலல் கடிதங்களை அனுப்பி தங்களின் இந்தி பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
இந்நிலையில், சமஸ்கிருதத்தை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும் அதே காலகட்டத்தில், பாரம்பரிய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றுக்கு மொத்தமாக 147 கோடியே 56 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் அதில், பாரம்பரிய மொழிகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக 230 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 13 கோடியே 41 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டில் "செம்மொழி" என்று அறிவிக்கப்பட்ட முதல் மொழியான தமிழ், இந்திய மொழிகள் மேம்பாட்டுக்கான மானியங்கள் திட்டத்தின் கீழ் 113 கோடியே 48 லட்சம் ரூபாயைப் பெற்றது, இது 2005ம் ஆண்டில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவாகும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னடம் பேசுபவர்கள் மொத்தமாக 22 சதவீதம் என்பதும், சமஸ்கிருதம் பேசுபவர்களின் விகிதம் மிகக் குறைவு என்பதும் ஆர்.டி.ஐ. புள்ளிவிபரங்களின் படி தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், மாநிலத்தில், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் ஊக்குவிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழை இந்திக்கு இணையான அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றி, சமஸ்கிருதம் போன்ற இறந்த மொழியை விட தமிழுக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், எந்த மாநிலத்திலும் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது