தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த 35 வயது பெண் முத்தமிழ் செல்வி, எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெருமைக்குரியவர். கல்பனா சாவ்லா விருது பெற்றவர். தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாராட்டுப்பெற்றவர்.
தனது இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட முத்தமிழ் செல்வி, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகும், மலை ஏறுவதில் இருந்த பேரார்வத்தால் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமாக சிகரங்களை ஏற முற்பட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இதன் வழி, முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய தமிழ் பெண் மட்டுமல்ல, உலகின் உயரமான சிகரங்களை ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனையையும் தட்டிப்பிடித்துள்ளார் முத்தமிழ் செல்வி.
இவரை பாராட்டும் வகையில், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, “உலகின் உயரமான மலைகளை ஏறிக் கடந்து சாதனை படைத்துள்ள விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் சிகரத்தை அடைய, அவர் தொட்ட சிகரம் ஒரு புதிய உந்துசக்தி. அவர் மேன்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களின் உச்சத்தை அடைந்து சாதனை படைத்திருக்கும் நம் விருதுநகரைச் சேர்ந்த திருமிகு. முத்தமிழ் செல்வி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
இடைவிடாத தனது உழைப்பின் வழி முத்தமிழ் செல்வி அவர்கள் செய்திருக்கும் இந்த அளப்பரியச் சாதனையானது, லட்சியத்தோடு உழைத்து வரும் இளைஞர்களுக்கு உத்வேகமளிக்க கூடியதாக அமையும்.
இச்சாதனையைப் போல் இன்னும் பல சாதனைகள் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.