ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி YSR காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பெருமளவு இடங்களில் தோல்வியை சந்தித்த ஜெகன்மோகன் தற்போது புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்த சூழலில் பல்நாடு மாவட்டம் ரெண்டபல்லா கிராமத்துக்கு கட்சியை சேர்ந்த ஒருவரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று ஆறுதல் கூறினார். அதன்பிறகு ஜெகன்மோகன் ரெட்டி காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவர் குண்டூர் வழியாக சென்ற நிலையில், அங்கிருந்த தொண்டர்கள் அவரை மலர்தூவி வரவேற்றனர். அப்போது அங்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், அவரை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். மேலும் ஒரு சிலர் அவரது காரின் மீது ஏறி நின்று ஆர்ப்பரித்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்த கூட்டம் அலைமோதியபோது சிங்கய்யா (55) என்ற தொண்டர் தவறி விழுந்து ஜெகன் மோகனின் காரின் அடியில் சென்றுள்ளார். அவ்வாறு அவரது காரின் கீழே ஒருவர் விழுந்திருப்பதை அறியாத ஒட்டுனரோ, காரை இயக்கவே, அதில் தொண்டர் சிங்கய்யாவின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இதையடுத்து சில நிமிடங்களில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு காரின் கீழே சிங்கய்யா இருப்பது தெரியவரவே, அங்கிருந்த போலீசார் அவரது உடலை மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் பதைபதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த சூழலில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் காரின் டயரில் தலை நசுங்கி தொண்டர் ஒருவர் பலியானது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலர் மத்தியிலும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.