பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்தாமல் அம்மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனத்தின் உடை அணிந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முஃபார்நகரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் போலிஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, உணவு டெலிவரி உடை அணிந்த இளைஞர் ஒருவர் போலிஸாரை கண்டதும் வேகமாக அங்கிருந்து நகர முயற்சித்துள்ளார். இதை கவனித்த போலிஸார் உடனே அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை ஆய்வு செய்தபோது அதில் நாட்டுத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அவற்றை பறிமுதல் செய்த போலிஸார் சுதான்ஷி என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். யாரிடம் விற்பதற்காக இந்த துப்பாக்கிகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி இதற்கு முன்பு யாருக்காவது துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.