ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மீது அத்து மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலை இந்தியா ராணுவம் முறியடித்து வருகிறது. இருந்தும் நாட்டில் எல்லை மாநிலங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வெடிக்காத குண்டுகள் விழுந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று இரவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில குண்டுகள் மக்கள் வசிக்கும் வீடுகள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர், ”எங்கள் மொட்டை மாடியை உடைத்துக்கொண்டு, வீட்டிற்குள் என்ன விழுந்தது என்று தெரியவில்லை. ஆனால் அப்போது ஒரே புகையாக இருந்தது. உடனே நாங்கள் வெளியே வந்துவிட்டோம். வீட்டில் நானும் என் மகளும் மட்டும்தான் இருந்தோம். தற்போது நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். ஆனால் எங்கள் வீடு சேதமடைந்துவிட்டது. இந்த பகுதியில் வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது” என வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலை நேரில் பார்த்த அஷ்ரஃப் என்ற இளைஞர், ”காலை 5.45 மணிக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, நாங்கள் இங்கு வந்தோம். பின்னர் காவல்துறையினர் வந்து அதை மீட்டனர். அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. உயிரிழப்புகள் எதுவும் இல்லை" என கூறியுள்ளார். மேலும் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.