ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில்,ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் உமர் அப்துல்லா பயங்கரவாத தாக்குதல் குறித்து மிகுந்த வேதனையுடன் பேசினார். அப்போது பேசிய உமர் அப்துல்லா, "முதலமைச்சராகவும், சுற்றுலா அமைச்சராகவும் நான் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.
ரத்த வெள்ளத்தில் தங்களது தந்தையை பார்த்த குழந்தைகளுக்கும், திருமணமான சில நாட்களிலேயே கணவனை இழந்த மனைவிக்கும் என்னால் என்ன சொல்ல முடியும்?. இவர்களிடம் மன்னிப்பு கேட்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
காயமடைந்தவர்களை மக்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். உள்ளூர்வாசிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ முயன்றனர். ஒரு ஏழை பழக்கடைக்காரர், இலவசமாக பழச்சாறு வழங்கினார். இவருக்கும் 300 ரூபாய்தான் தினசரி கூலி. கார் ஓட்டுநர்கள் இலவசமாக சவாரிகளை வழங்கினார்கள். இவர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்.
இந்த கொடூரத்தை செய்தவர்கள் நமக்காக செய்ததாக சொல்கிறார்கள். நாங்கள் இதைக் கேட்டோமா?. இந்தத் தாக்குதல் எங்களை வெறுமையாக்கிவிட்டது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துப்பாக்கிகளால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் நம்முடன் இருக்கும்போது அது முடிவுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.